பக்கம் எண் :

122பாரதம்உத்தியோக பருவம்

நீண்டகருங் குழல்சோரநின்றாளை முகநோக்கி
யீண்டவரி லிளையோனுஞ்சந்துமிக வினிதென்றான்.

    (இ - ள்.) அறிவு உடையோர் இருவோரும் - பேரறிவுடைய வர்களான
(கண்ணன் சகதேவன் என்ற) இரண்டுபேரும்,- (பின்பு) ஆண்டு இருந்த அவை
நீங்கி - அங்குத் தனியே சென்றிருந்த மண்டபத்தினின்று நீங்கி, பாண்டவர்கள்
முன் எய்தி - மற்றைய பாண்டவர்கட்கு முன்னே வந்து சேர, - (அப்பொழுது),
அவரின் இளையோனும் - அப்பாண்டவர்களுள் இளையவனான சகதேவனும்,-
நீண்ட கருங் குழல் சோர நின்றாள் பழுது இல் புகழ் பாஞ்சாலி முகம் நோக்கி
- நீட்சிபெற்ற கருநிறமுள்ள கூந்தல் விரிந்து கிடக்க நின்றவளாகிய
குற்றமில்லாத கீர்த்தியையுடைய திரௌபதியின் முகத்தைப் பார்த்து, ஈண்டு
சந்து மிக இனிது என்றான் - 'இப்பொழுது சந்தி [சமாதானம்] மிக நல்லது'
என்று கூறினான்; (எ - று.)

    'எய்தி' என்னுஞ் செய்தெனெச்சத்தை 'எய்த' எனச் செயவெனெச்சமாகத்
திரித்து, 'என்றான்' என்பதனோடு முடிக்க. பாஞ்சாலி நின்றாளை - நின்றாள்
பாஞ்சாலியை, உருபுபிரித்துக்கூட்டல். சந்து-தூதுமாம்.  துரியோதனனிடம் தூது
போய்வரவேண்டு மென்பதே கண்ணன் திருவுள்ளக் கருத்தென்று
தெரிந்தவனாதலின், அதற்கு இணங்கிச் சகதேவன் தானும் 'சந்து மிகவினிது'
என்று கூறினனென்க.  இருவர் இருவோர் என ரகரவீற்று அயல் அகரம்
ஓகாரமாயிற்று.  பாஞ்சாலி - பாஞ்சாலதேசத்தரசனது [துருபதனது] மகள் என்று
பொருள்படும்; தத்திதாந்தநாமம்.  பழுதில் புகழ் - கலங்காத கற்பினாலாகியது;
இவள் பஞ்சகன்னிகைகளுள் ஒருத்தியாதலின், இவளுக்கு 'பழுதில்புகழ்' என்ற
அடைமொழி கொடுக்கப்பட்டது.  மற்றை நால்வர்-அகல்யை , சீதை, தாரை,
மந்தோதரி, ஆண்டு, ஈண்டு - சுட்டு நீ்ண்டது.  நின்றாளை முகம் நோக்கி -
நின்றாளை முகத்தைப் பார்த்து; இரண்டு செயப்படுபொருள்வந்த செய்வினை;
உருபுமயக்கமாக, நின்றவளது முகத்தைப் பார்த்து என்றும் கொள்ளலாம். (101)

42.- கண்ணனும் அவ்வாறேகூறக் கேட்டுத் திரௌபதி
வருந்துதல்.

தருமனுக்குங் கருத்திதுவேதமருடன்போர் புரியாமல்
இருநிலத்தி லுடன்வாழ்தலெனக்குநினை வென்றுரைத்தான்
வரிமலர்க்கண் புனல்சோரமலர்மறந்த குழல்சோர
விரைமலர்ச்செஞ் சேவடிக்கீழ்வீழ்ந்தழுதாண் மின்னனையாள்.

    (இ - ள்.) 'தருமனுக்கும் கருத்து இதுவே - யுதிட்டிரனுக்கும் இதுவே
கருத்தாகும்; தமருடன் போர் புரியாமல் - நெருங்கின உறவினர்களாகிய
துரியோதனாதியர்களுடனே போர்செய்யாமல், இருநிலத்தில் உடன் வாழ்தல் -
பெரிய பூலோகத்திலே சமாதானமாக ஒற்றுமைப்பட்டு ஒருங்கு கூடி வாழ்வதே,
எனக்கும் நினைவு - எனக்கும் கருத்தாம்;' என்று உரைத்தான்-என்று
(கண்ணபிரான்) கூறியருளினான்; (உடனே),- மின் அனையாள் - மின்னற்
கொடியை