அழைத்தது,இங்ஙனம் வருந்தும் தன் குறையையும் தீர்த்தருள வேண்டுமென்ற குறிப்பு. மூலப்பேர் - மூலமாகிய பேர் எனப் பொதுப்பெயரும் சிறப்புப் பெயருமாகத் தொடர்ந்த இருபெயரொட்டுப் பண்புத்தொகையாக விரிக்க. நீலக்கிரி - நிறத்துக்கும், அழகுக்கும், சலியாத திண்மைக்கும், அளவிடப்படாத பெருமைக்கும் உவமை. முன் - இடமுன். மும்மதம் - கன்னமிரண்டு, குறியொன்று இவற்றிற் சொரிவது. கநகம் - ஸ்வர்ணம்; ஹிரண்யன் என்ற பெயர் பொன்னிறமானவனென்பதுபற்றிய தாதலால், அதன் பரியாயநாமமாக 'கனகன்' என்றார். (103) 44. | கற்றைக் குழல்பிடித்துக்கண்ணிலான் பெற்றெடுத்தோன் பற்றித் துகிலுரியப்பாண்டவரும் பார்த்திருந்தார் கொற்றத் தனித்திகிரிக்கோவிந்தா நீயன்றி யற்றைக்கு மென்மானமார்வேறு காத்தாரே. |
(இ -ள்.) கொற்றம் - வெற்றியையுடைய, தனி - ஒப்பில்லாத, திகிரி - சக்கரத்தையுடைய, கோவிந்தா - கண்ணபிரானே!- கண் இலான் பெற்று எடுத்தோன் - குருடனான திருதராட்டிரன் பெற்று வளர்த்த துச்சாதனன், கற்றை குழல் பிடித்து - தொகுதியான (எனது) கூந்தலைப் பிடித்து இழுத்து (வந்து), துகில் பற்றி உரிய - (எனது) ஆடையைப் பிடித்து அவிழ்க்கையில், பாண்டவரும் பார்த்து இருந்தார் - (என் கொழுநரான) இப்பாண்டவர் ஐவரும் பார்த்துக்கொண்டு (யாதொரு பரிகாரமுஞ் செய்யாமற் சபையிற் சும்மா) இருந்தார்கள்; அற்றைக்கும் - அக்காலத்திலும், என் மானம் நீ அன்றி வேறு ஆர் காத்தார் - எனது மானத்தை நீ யல்லாமல் வேறே யார்தாம் காத்தவர்? [எவருமில்லை யென்றபடி]; (எ - று.) பிறர்க்கு உதவியதைக் கீழ்ச் செய்யுளாற் கூறி, தனக்கு முன்பு உதவியதை இச் செய்யுளாற் கூறுகிறாள். 'ஆபத்து நேர்ந்த காலத்தில் மகளிர்க்குத் தம்தம் கணவர் குறைநீக்குவார்கள்; எனக்கோ கணவர் ஒருவர்க்கு ஐவராயிருந்தும், ஆபத்துக்காலத்தில் உதவுமாறு இல்லை, என்பது முன்னமே நடந்த வரலாற்றால் விளங்குவதால், இப்பொழுது நீ காப்பாற்றினா லுண்டு; இல்லாவிட்டால் இல்லை; எனது சாபத்தையும் சபதத்தையும் நிறைவேறச் செய்து எனது மானத்தைக் காக்கவேண்டுவது உனது பாரமே' என்று குறை வேண்டினளென்பதாம். பாண்டவரும், உம்மை - உயர்வு சிறப்பு; அப்பாண்டவர்கள் மானத்தைக் காக்கவேண்டிய உரிமையும் புயவலிமையும் உடையாரென்ற பொருளைத் தரும். அற்றை - அன்று என்னும் மென்றொடர் வன்றொடராய் ஐகாரச்சாரியை பெற்றது. அற்றைக்கும், உம்மை - எதிரது தழுவியது. (104) 45. | மன்றி லழைத்தெனக்குமாசளித்த மன்னவன்பாற் சென்று தமக்கைந்தூர்திறல்வீரர் பெற்றிருந்தால் அன்று விரித்தவருங்கூந்தல் வல்வினையேன் என்று முடிப்பதினியெம்பெருமா னென்றழுதாள். |
|