பக்கம் எண் :

132பாரதம்உத்தியோக பருவம்

     நீலம்பசுமை கருமை இந்நிறங்களை வேறுபாடு கருதாது அபேதமாகக்
கூறுதல் கவிமரபாதலால், 'பைங்கூந்தல்' எனப்பட்டது.  இனி பசுமை -
குளிர்ச்சியுமாம்.  'பச்சைஜலம்' என்பதிற்போல.  முடிப்பேன் என
எதிர்காலமாகக் கூறவேண்டுமிடத்து, முடிக்கின்றேன் என நிகழ்காலத்தாற்
கூறியது, விரைவும் தெளிவும் பற்றிய காலவழுவமைதி.  புல்லார் - (தம்மைச்)
சேராதவர்; எனவே, பகைவராம்; புல் என்ற வினைப்பகுதியடியாப் பிறந்த
எதிர்மறைப் பலர்பால் வினையாலணையும் பெயர்.  இனி, புன்மையென்னும்
பண்பினடியாப் பிறந்த குறிப்புப் பெயரெனக்கொண்டு, அற்பரான
கௌரவரென்றுமாம்.  எண்ணரிய - நினைத்தற்குங் கூடாத இழிகுணமுடைய
எனினுமாம்.  அந்தப்புரம் - அரண்மனையில் ராஜஸ்திரீகள் வசிக்குங்
காப்புடைய உள்ளிடம்.                                       (109)

50.

மைக்குழலாய் கேளாய் மருவாருடற்புலத்துப்
புக்குழலா குங்கொழுவாம்போர்வா ளபிமன்னுத்
தொக்குழலும்வெங்கோன்மைத் தொல்வேந்தர் தங்குலமும்
இக்குழலுஞ் சேர முடியாதிரானென்றான்.

     (இ -ள்.) மை குழலாய் - கருநிறத்தையுடைய கூந்தலை யுடையவளே!
கேளாய் - (யான்சொல்வதைக்) கேள்; மருவார் - பகைவர்களது, உடல் -
உடம்பாகிய, புலத்து - விளைநிலத்திலே, புக்கு - நன்றாகப்பிரவேசித்து, உழல்
ஆகும் - உழுதற்கு உரிய, கொழு ஆம் - இருப்புக்கொழுவாகிய, போர்வாள் -
போரிற்சிறந்த வாளாயுதத்தையுடைய, அபிமன்னு - அபிமந்யுவானவன்,-
தொக்கு உழலும் - ஒன்றாகக் கூடிச் சஞ்சரிக்கின்ற, வெங் கோன்மை தொல்
வேந்தர்தம் குலமும் - கொடுங்கோன்மையையுடைய பழமையான அரசர்களது
கூட்டத்தையும், இ குழலும் - இந்த உனது கூந்தலையும், சேர - ஒருசேர,
முடியாது இரான் - முடிக்காமலிருக்கமாட்டான், என்றான் - என்று (கண்ணன்)
கூறியருளினான்; (எ - று.)

    வேந்தர்குலத்தை அழியச்செய்து உனது கூந்தலையும் முடிக்கச் செய்வ
னென்பதாம்.  முடியாது - இரட்டுறமொழிதலாக ஒருங்கே இரண்டு
பொருள்பட்டது, சிலேடையணி. முடித்தல் - கெடுத்தலும்,   கட்டுதலுமாம்.
மைக்குழல் - உவமைத்தொகையாய், அஞ்சனம் போன்ற அல்லது
மேகம்போன்ற கூந்தலென்றுமாம்.  மருவார் - சேராதவர்; மருவுதல் -
சேர்தல். புலம் - கழனி.  கொழு - காறு.  உடற்புலத்து உழலாகுங்
கொழுவாம் வாள் -உருவகம்.  ஆம் - உவமவுருபென்னலுமாம்.
"வாளுழவன்" என்றார்கம்பரும்.  அபிமன்னு - கண்ணனுடன்பிறந்தவளான
சுபத்திரையினிடம்அருச்சுனனுக்குப் பிறந்த புத்திரன்:  இளமையிலேயே
வில்வித்தையில்ஒப்புயர்வின்றி மிகச் சிறந்தவன்: ஆனதுபற்றியே, மற்றையோர்
விட்டாலும்பகைவர்களை இவன் விடானென இங்குக் கூறியது.     (110)

51.

பெண்ணீர்மை குன்றாப்பெருந்திருவின் செங்கமலக்
கண்ணீர் துடைத்திருதன்கண்ணிற் கருணையெனுந்