பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 133

 

தெண்ணீ ரினாற்பொருந்தத்தேற்றினான் சாற்றுகின்ற
மண்ணீ ரனலனிலம் வான்வடிவாமாமாயன்.

     (இ -ள்.) சாற்றுகின்ற - (நூல்களில்) எடுத்துக் கூறப்படுகின்ற, மண் -
பூமியும், நீர் - ஜலமும், அனல் - அக்கினியும், அனிலம் - வாயுவும், வான் -
ஆகாயமும் ஆகிய பஞ்சபூதங்களின், வடிவுஆம் - சொரூபமாகிய, மா மாயன்
- மிக்க மாயையையுடையவனான கண்ணபிரான்,-  தன் இரு கண்ணின்
கருணை எனும் தெள் நீரினால் - தனது இரண்டு கண்களினின்று சொரிகின்ற
அருளாகிய தெளிவான நீரினாலே, பெண் நீர்மை குன்றா பெருந் திருவின்
செங்கமலம் கண் நீர் துடைத்து - பெண்மைக்கு உரிய குணங்களொன்றுங்
குறையாத சிறந்த இலக்குமிபோன்ற திரௌபதியினது செந்தாமரை மலர்
போலுங் கண்களின் நீரைப்போக்கி, பொருந்த தேற்றினான் - தக்கபடி [மனம்
வருந்தா திருக்குமாறு] (அவளைச்) சமாதானப் படுத்தியருளினான்; (எ - று.)

     தனதுகடாட்சத்தில் தோன்றுங் கருணைத்தெண்ணீரினால்
அத்திரௌபதியினது சோகக்கண்ணீரை அகற்றினனென்க.  தம்மைச்
சேர்ந்தவர் துன்பமடையக் கண்டபோது அன்புடையாரது கண்களினின்று
அகத்தே நிகழ்கிற அன்பு புறத்தேதோன்றும்படி கண்ணீர் தளும்புமாதலின்,
'கண்ணிற் கருணையெனுந்தெண்ணீர்' எனப்பட்டது.  கருணையெனுந் தெள்நீர்
- அருளென்கிற தெளிவான குணமென்றும் உரைப்பர்.

     நாணம்மடம் அச்சம் பயிர்ப்பு என மகடூஉக்குணம் நான்காம்;
அவற்றுள், நாணமாவது - செய்யத்தகாதவற்றில் உள்ளமொடுங்குதல், மடமாவது
- எல்லாம் அறிந்தும் ஒன்றும் அறியாதுபோலிருத்தல்: கொளுத்தக்கொண்டு
கொண்டதுவிடாமை யெனவும்படும்.  அச்சமாவது - புதியதைக் கண்டவிடத்து
அஞ்சுதல்.  பயிர்ப்பாவது - தன்கணவனல்லாத ஆடவரது ஆடைமுதலியன
தன்மேற்பட்டால் அருவருத்தல்.  மற்றைய பெண்குணங்கள்யாவும் இந்நான்கில்
அடக்கப்படும்.  கண்ணீர் - இங்கே, சோகபாஷ்பம். உற்பத்திக்கிரமத்தில்,
ஆகாசத்திலிருந்து வாயுவும், வாயுவிலிருந்து அக்கினியும், அக்கினியிலிருந்து
ஜலமும், ஜலத்திலிருந்து நிலமும் பிறந்தனவென வேதம் ஓதுதலால், அக்காரிய
காரண முறைப்படியே 'மண்ணீரனலனிலம் வான்' என அடுக்கினார்; இனி,
லயகாலத்தில், நிலம் நீரிலும் நீர் நெருப்பிலும், நெருப்பு காற்றிலும், காற்று
வானத்திலும் ஒடுங்குமென்பது நூல்வழக்காதலால், அம்முறைப்படி
வைத்தாரெனினுமாம்.  ஈற்றடி, எம்பெருமான் எல்லாப் பொருள்களின்
சொரூபமுமானவனென்பதை விளக்கும்; "ஸர்வம் விஷ்ணுமயம்ஜகத்," "நீராய்
நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்ச், சீரார் சுடர்களிரண்டாய்ச் சிவனா
யயனானாய்" என்றார் ஆழ்வாரும்.                               (111)

52.-ஆலோசனைச் சபையில்வரத்தகாதவர்கள்.

துன்று பிணியோர் துறந்தோரடங்காதோர்
கன்று சினமனத்தோர்கல்லாதவ ரிளையோர்