பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 135

மூவரையும்,'அடங்காதோர், கன்று சினமனத்தோர், இளையோர்' என்ற
சொற்களாற் சிறிது இகழ்ந்ததாகவுங் கொள்ளலாம்.  எய்த என்ற
செயவெனெச்சத்தி னீற்றில், இழிவுசிறப்புப்பொருளுள்ள எச்சவும்மை,
விகாரத்தால் தொக்கது.  இதனால் அவர்கள் வரவுந் தகாதவர், ஆலோசனை
சொல்லவுந் தகாதவ ரென்றவாறு.                               (112)

53.-தருமபுத்திரன்வேண்டுகோளினால் கண்ணன்
தூதுசெல்லத் தேரேறுதல்.

என்னக் கழறி யிருந்தோருரைதவிர்த்து
நின்னொப் பவரில்லாய்நீயேகென வுரைப்ப
மன்னர்க்கு மன்னவன்பான்மாயோனுந் தூதாகிப்
பொன்னுற்ற நேமிப்பொருபரித்தேர் மேற்கொண்டான்.

     (இ -ள்.) (யுதிட்டிரன்),- என்ன கழறி - என்று உறுத்திக்கூறி, இருந்தோர்
உரை தவிர்த்து - (மற்றும் அங்கு) இருந்த (வீமன் அருச்சுனன் நகுலன்
சாத்தகி) என்பவரது பேச்சுக்களையும் அடக்கி, (கண்ணனை நோக்கி),- 'நின்
ஒப்பவர் இல்லாய் - உன்னை யொப்பவர் (எவரையும்) பெறாதவனே! நீ ஏகு -
நீ தூது செல்வாய்,' என உரைப்ப - என்று சொல்ல, மாயோனும் -
கண்ணபிரானும், மன்னர்க்கு மன்னவன்பால் - அரசர்கட்கு அரசனான
துரியோதனனிடத்து, (செல்லுதற்கு உரிய), தூது ஆகி - தூதுவனாய், பொன்
உற்ற நேமிபொரு பரி தேர் மேற்கொண்டான் - பொன்னினாலமைந்த
சக்கரங்களையுடை யதும் போர்செய்தற்கு உரிய குதிரைகளைப் பூட்டியதுமாகிய
(தனது) இரதத்தின்மீது ஏறியருளினான்; (எ - று.)

     கழறி,தவிர்த்து, உரைப்ப என்ற வினைகளுக்கு இடத்திற்கு ஏற்பத்
தருமனென்னத் தோன்றா எழுவாய் வருவித்து முடிக்க.  ஒப்பவரில்லாமை
கூறவே, உயர்பவரில்லாமை தானே விளங்கும்; "தனக்குவமையில்லாதான்"
என்பது திருக்குறள்; "தன்னொப்பாரில்லப்பன்" "ஒத்தாரை மிக்காரை
யிலையாய மாமாயா" என்றார் ஆழ்வாரும்.  நின் ஒப்பவரில்லாய் - உனக்கு
நீயே சமானமானவ னென்றபடி; 'ராஜராஜன்' என்று துரியோதனனுக்கு ஒரு
பெயர் நேமித்தேர், பரித்தேர் எனத் தனித்தனி இயையும்.           (113)

54.-இதுவும், மேற்கவியும் -குளகம்: கண்ணன் சென்று
அத்தினாபுரியைக் காணுதலைக் கூறும்.

சங்கு மணிமுரசுஞ் சல்லரியுந்தாரைகளும்
எங்கு முழங்க வெழில்வெண்குடைநிழற்றப்
பொங்கு கவரி புடையிரட்டவெண்ணிலா
வங்க மொருநான்கு மவனிபருந்தற்சூழ.

     (இ -ள்.) (கண்ணன் தேர்மேலேறிப் புறப்படுகையில்), சங்கும் -
சங்குகளும், அணி முரசும் - அழகிய பேரிகைகளும், சல்லரியும் -
சல்லரியென்னும் வாத்திய விசேஷங்களும், தாரைகளும் - தாரை