பக்கம் எண் :

138பாரதம்உத்தியோக பருவம்

னன் அவனுக்குஉபசாரமாக அமைத்துவைத்த பந்தல் போன்றன கமுகம் என
வருணித்தவாறு.  மேவு - பொருந்திய என்றுமாம்.  குயிற்றுதல் -
அமையச்செய்தல்.  நிரை நிரை - அடுக்கு, பன்மை பற்றியது.  தாவும்
வெம்பரித் தேரினான் தனக்கெதிர் என்பதற்கு - சூரியனுக்கு எதிராகவென்று
உரைப்பாரு முளர்.  அடுத்தகவிகளில் "உம்பர்நாயகன் வரவு கண்டு" என்றும்,
"திருவின் கணவனுக்கெதிர் காட்டும்" என்றும், "நடந்தநாயகன்" என்றும்
வருவனவற்றோடு இயையாவாதலால், அவ்வுரை சிறவாதாம்.  கமுகம் -
கரமுகமென்பதன் திரிபு.

    இதுமுதல் நாற்பத்துநான்கு கவிகள் பெரும்பாலும் முதல் சீரும் ஐந்தாஞ்
சீரும் மாச்சீர்களும், மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய நெடிலடிநான்கு
கொண்ட கலிநிலைத்துறைகள்; விருத்தக்கலித்துறை யெனவும்,
காப்பியக்கலித்துறையெனவும் படுபவை இவையே.                 (116)

57.

வம்புலாமகில்சந்தனம்வருக்கைமாகந்தஞ்
சம்பகந்தமாலம்பலதிசைதொறுந்தயங்க
உம்பர்நாயகன்வரவுகண்டுளங்களிகூர்ந்து
தும்பிபாடினதோகைநின்றாடினசோலை.

     (இ -ள்.) சோலை - (அந்நகரத்தையடுத்த) சோலைகளிலே, வம்பு உலாம்
- வாசனை வீசுகின்ற, அகில் - அகில்மரங்களும், சந்தனம் -
சந்தனமரங்களும், வருக்கை - பலாமரங்களும், மாகந்தம் - தேமாமரங்களும்,
சம்பகம் - சண்பக மரங்களும், தமாலம் - பச்சிலைமரங்களும், பல
திசைதொறும் - பலதிக்குக்களிலும், தயங்க - அசைந்து விளங்கா நிற்க, உம்பர்
நாயகன் வரவு கண்டு உளம் களிகூர்ந்து - தேவாதிதேவனான கண்ணபிரானது
வருகையைப் பார்த்து மனம் களிப்பு மிகுந்து, தும்பிபாடின - வண்டுகள்
பாடினவாக, தோகைநின்று ஆடின - மயில்கள் நிலைநின்று கூத்தாடின;(எ-று.)

    உயர்திணையும் அஃறிணையுமாகிய எல்லாப்பிராணிகளின் மனத்திலும்
எம்பெருமான் எழுந்தருளியுள்ளவனாதலால், அவன் வருகையைக் கண்டு
வண்டுகளும் மயில்களும் மகிழ்ச்சிகூர்வனவாயின.  இனி, மூன்றாமடியை
ஏதுத்தற்குறிப்பேற்றமாக்கி, சோலையின் இயற்கையைக் கற்பனைமுகத்தாற்
கூறியதாகவுங் கொள்ளலாம்.  'வம்பு உலாம்' என்பதைச் சந்தனம்
முதலியவற்றிற்குங் கூட்டுக.  அகில் - சந்தனம்போல நறுமணமுடையதொரு
மரவிசேடம்; சம்பகம் - வண்டுணா மலர்மரங்களில் ஒன்று.  பலதிசை -
பத்துத்திக்குக்கள்.  முதல் இரண்டடிகளில், வண்டுகள் பாட மயில்கள்
ஆடுவதைக் கண்டுங் கேட்டுஞ் சிரக்கம்பஞ்செய்து ஆநந்திக்குஞ் சனங்களாக
மரங்களைக் கற்பித்த தென்னலாம்.  உம்பரென்னும் மேலிடத்தின் பெயர்,
அங்குள்ள தேவர்க்கு இடவாகுபெயர்.  உம்பரென்பதில், உகரச்சுட்டு
மேலிடத்தை யுணர்த்திற்று; இதன் எதிர்மொழி - இம்பர்; இவ்விடம்.  தோகை
- சினையாகுபெயர்.                                          (117)