58.-இதுமுதற்பதினொருகவிகளில் அத்தினாபுரியின் அமைதி வருணிக்கப்படுகிறது. இது - அந்நகரத்துநீர்நிலைகளின் வருணனை. அணிகொளத்தினாபுரியெனுமணங்குசெந்திருவின் கணவனுக்கெதிர்காட்டுநீராசனங்கடுப்ப மணமிகுத்தசெந்தாமரைமலருடன்சிறந்த புணரியிற்பெரும்புனலையுங்கொள்வனபொய்கை. |
(இ -ள்.) அணிகொள் - அழகைக்கொண்ட, அத்தினாபுரி எனும் அணங்கு - அஸ்திநாபுரியென்னும் பெண், செம் திருவின் கணவனுக்கு - சிவந்த நிறமுடைய திருமகளது கொழுநனான கிருஷ்ணமூர்த்திக்கு, எதிர் காட்டும் - எதிரிலே காண்பிக்கிற, நீராசனம் - மங்களவாலத்தியை, கடுப்ப - ஒடுக்கும்படி,-பொய்கை - (அந்நகரத்திலுள்ள) தடாகங்கள், - மணம் மிகுத்த செம் தாமரை மலருடன் - வாசனையை மிகுவிக்கிற செந்தாமரை மலர்களுடனே, சிறந்த புணரியின் பெரும்புனலையும் கொள்வன - சிறந்த கடல்கள்போல மிக்க நீரையும் (தம்மிடத்தே) கொண்டுள்ளன; (எ - று.) 'கொள்வன' என்பதைப் பெயராகக்கொண்டு, பொய்கைக்கு அடைமொழியாக்கிவிட்டு, 'சிறந்த என்பதை முற்றாக்கியுரைப்பினும் அமையும். ஒரு பெரிய பாத்திரத்தில் மஞ்சள் நீரைவார்த்து அதன் நடுவில் திருவிளக்கேற்றிவைத்து மங்களகரமாகப் பெண்கள் விசேஷகாலங்களில் ஒருவர்க்கு ஆலத்தி யெடுத்தல், மரபு. அங்ஙனம், பொய்கை - ஆலத்தி தட்டையும், பொய்கையில் மிக்க நீர் - அவ்வாலத்திநீரையும், அந்நீரிடையிற்பூத்த செந்தாமரை மலர் - அவ்வாலத்திநீர் நடுவில் ஏற்றிய தீபத்தையும், இப்படிப்பட்ட பொய்கையையுடைய அத்தினாபுரி - கண்ணன்வருகையில் அவ்வாலத்தியையேந்தும் ஒரு மங்கையையும் போலுமென வருணிக்கப் பட்டவாறு; தற்குறிப்பேற்றவணி. 'புரீ' என்பது வடமொழியிற் பெண்பாற் சொல்லாதலால், அதனை மகளாகக் கூறியது மிகப்பொருந்தும். பெண்ணுக்கு ஏற்ப அணிகொள் என்பதற்கு - ஆபரணங்களைத்தரித்த வென்றும் உரைக்கலாம். சந்திர குலத்தில் ஹஸ்தீயென்று ஓரரசன்; அவனாற் சீர்திருத்தப்பட்டமை பற்றியும், யானைச் சேனைகளை மிகுதியாகவுடைமை பற்றியும், 'ஹஸ்திநாபுரீ' என்று பெயர்; அது 'அத்தினாபுரி' என விகாரப்பட்டது. நீராஜநம் - கண்ணெச்சில் கழித்தற்கு எடுக்கப்படுவது. கடுப்ப - தற்குறிப்பேற்ற வுருபு. புணரி - (நதிகளோடு) புணர்வதெனக் காரணப்பெயர்; புணர்தல் - சேர்தல்; ஆறுகளாகிய பெண்களுக்குச் சேருமிடமாகிய கடலைக் கணவனாகக் கூறுதல், கவி மரபு; இதனை 'நதீபதி' என்னுங் கடலின் வடமொழிப் பெயராலும் அறிக. புணரியிற் பெரும் புனல் - கடலினும் மிக்க நீர் என்றால், ஈற்றடி - உயர்வுநவிற்சியணியாம். (118) |