பக்கம் எண் :

142பாரதம்உத்தியோக பருவம்

62.-அந்நகரத்துமாடமாளிகைகளின் வருணனை.

புயங்கபூமியோபுரந்தரற்கமைத்தபொன்னுலகோ
தயங்குசெல்வநீடளகையோநிகரென்னுந்தரத்த
இயங்குகார்முகில்வரையினின்றெழுவனபோல
வயங்குகாரகினறும்புகையுயிர்ப்பனமாடம்.

     (இ -ள்.) வரையினின்று எழுவன - மலைகளினின்று மேலெழுவனவான,
இயங்கு கார் முகில் - (எப்பொழுதுஞ்) சஞ்சரிக்குந் தன்மையுள்ள கரிய
நீர்கொண்டமேகங்களை, போல - ஒக்கும்படி, வயங்கு கார் அகில் நறும்புகை
உயிர்ப்பன - விளங்குகின்ற கருமையான அகிற்கட்டைகளின் சுகந்தமுள்ள
புகையை மேலெழுப்பப் பெற்றவையான, மாடம் - (அந்நகரத்து)  உபரிகை
வீடுகள்,- 'புயங்க பூமியோ - நாகலோகமோ? புரந்தரற்கு அமைத்த பொன்
உலகோ - இந்திரனுக்காகப் படைக்கப்பட்ட சுவர்ணமயமான
சுவர்க்கலோகமோ? தயங்கு செல்வம் நீடு அளகையோ - (எல்லாவற்றினுஞ்)
சிறந்து விளங்குகிற செல்வப் பொருள்மிக்க (குபேரனது) அளகாபுரியோ? நிகர்
- (இவ்வீடுகளுக்கு) ஒப்பு,' எனும்-என்று கருதத்தக்க, தரத்த-
தன்மையையுடையன; (எ - று.)

    முன்னிரண்டடி - ஐயநிலையுவமையணியும், பின்னிரண்டடி -
உவமையணியுமாம்.  புயங்கம் - மார்பினால் ஊர்ந்து செல்வது எனப்
பாம்புக்குக் காரணப்பெயர்.  பாதாளலோகத்திலுள்ள நாகஜாதியாரது
இராசதானியான போகவதியென்னும் நகரம், அழகுசெல்வம் ஆகியவற்றில்
மிகச்சிறந்ததாம்.  தேவலோகத்திலுள்ள இந்திரனது இராசதானிக்கு
அமராவதியென்பது பெயர்.  செல்வம் - நவ நிதிகள்.  தரம் - தகுதி.  தரத்த
- பலவின்பாற் குறிப்புவினைமுற்று.  மலை - மாடத்துக்கும், காளமேகம் -
புகைக்கும் உவமை.  கார்ப்புகையென்றும் இயைக்கலாம்.  'காழகில்' என்ற
பாடத்துக்கு வைரம் பற்றிய அகிலென்க.  'தரத்தது' என்ற பாடத்துக்கு
மாடங்கள் இங்ஙனம் உள்ளனவாதலால், நகரம் புயங்கபூமி முதலியவற்றுள்
எதனையொக்குமோவென்று ஐயமுறத்தக்க தென்க.  அகிற் புகை -
இடத்துக்கும் கூந்தலுக்கும் ஆடையா பரணங்கட்கும் நறுமண மூட்டுதற்கும்
இடுவது.                                                 (122)

63.-அந்நகரத்து இராசவீதிகளின் இயல்பு.

மன்னர்வேழமுஞ்சேனையுமெதிரெதிர்மயங்கப்
பின்னுமுன்னுமெம்மருங்கினும்பெயரிடம்பெறாமற்
றுன்னிநின்றவரேகுமினேகுமினென்னும்
என்னுமோசையேயுள்ளனவீதிகளெல்லாம்.

     (இ -ள்.) வீதிகள் எல்லாம் - (அந்நகரத்து) நெடுந்தெருக்கள் தோறும்,-
மன்னர் - அரசர்களது, வேழமும் - யானைகளும், சேனையும் - மற்றைச்
சேனைகளும், எதிர் எதிர் மயங்க - (ஒன்றோடொன்று) எதிரெதிரில்
நெருங்கிக்கலத்தலால், பின்னும் முன்னும் எ மருங்கினும் பெயர் இடம்
பெறாமல் - பின்பக்கத்திலும் முன்பக்கத்திலும்