பக்கம் எண் :

உலூகன் தூது சருக்கம் 15

தாஞ்சால்புடனப்பதிவந்தனர் தானையோடும்" எனக் கூறப்பட்டவர்களை,
அம்தண் என்பதற்கு - அழகையும் குளிர்ந்த கருணையையுமுடைய என்று
உரைத்து முரசகேதனனுக்கு அடைமொழியாக்கினும் அமையும்.  திருமுகம்
என்றது - தனது சொல்லாற்றலால் யுதிட்டிரனிடம் அவ்வரசர்களுக்குள்ள
மதிப்பை நன்கு விளக்கும்.  'முந்தத்திருமுகம் வரவிடுக' என்றது, போரை
விரைந்து செய்தற்பொருட்டுத் திருமுகம் வரவிடுக' என்றது, போரை விரைந்து
செய்தற்பொருட்டுத் தாம் துணையாய் வருதற்கு என்க; தங்களைத்
துரியோதனன் படைத்துணையாக விரும்புமுன் நீ பத்திரிகையனுப்பிவிடுவாய்
என்ற பொருளும் இதில் ஏற்படும்.  அவன்-துரியோதனனென்றுங்
கொள்ளலாம்.  அந்தம் மன்னவர் எனப் பிரித்தால், அழகையுடைய
அரசரென்று பொருள்படும்.(6)

தருமன் உலூகனைத் தூதனுப்புதல்.

7.அரசர்போனபின்மால்பணிதவறுறாதம்முனிதனைநோக்கி
முரசகேதனனீயெழுந்தருள்கெனமுனிவனைத்தொழுதேத்தி
விரைசெய்தார்புனைவீடுமனெந்தைமெய்விதுரன்வேதியர்கோவை
பரசினோமடியென்றுபின்னுரியசொற்பணித்தருளெனப்போந்தான்.

     (இ -ள்.) அரசர் போன பின் - வந்த அரசர்கள்யாவரும் (தத்தம்
நகருக்குச்) சென்றபின்பு, முரசகேதனன் - பேரிகைவடிவையெழுதிய
கொடியையுடைய தருமபுத்திரன்,- மால் பணி தவறுறாது - திருமாலின்
திருவவதாரமான கண்ணபிரானது கட்டளையைப் பிழையாமல்
[கட்டளைப்படியே என்றபடி], அ முனிதனை நோக்கி - அந்த உலூக
முனிவனைப் பார்த்து, நீ எழுந்தருள்க என - 'நீ கருணையுடன் தூது
செல்வாயாக' என்றுகூறி, முனிவனை - அவ்வுலூகனை, தொழுது - வணங்கி,
ஏத்தி - துதித்து, 'விரைசெய் - நல்வாசனையை வீசுகிற, தார் - பூமாலையை,
புனை - தரித்துள்ள, வீடுமன் - பீஷ்மனும், எந்தை - எமது பெரியதந்தையான
திருதராட்டிரனும், மெய் விதுரன் - சத்தியந்தவறாத  விதுரனும், வேதியர்
கோவை - அந்தணர்களுக்குத் தலைவனான துரோணாசாரியனும் என்னும்
இவரை, அடி பரசினோம் என்று - திருவடிகளை நமஸ்கரித்தோம் என்று
முதலிற்கூறி, பின் - அதன் பின்பு, உரிய சொல் பணித்தருள் - (நீ செல்லும்
தூத காரியத்துக்கு) உரிமையுடைய சொற்களைக் கூறியருள்வாய்,' என என்று
பிரார்த்திக்க,- போந்தான் (அம்முனிவன் புறப்பட்டுச்) சென்றான்; (எ - று.)

     இப்பாட்டில்,கண்ணன் முதலியோர் சென்றபின்பு தருமன் சிலகூறி
வேண்டியபின் உலூகன் சென்றான் என்றதனால், கீழ் ஐந்தாங்கவியில்
கண்ணன்செய்கையாக 'போக்கி' என்றதற்கு செல்ல உடன்படுத்தியென்று
கருத்துக் கொள்க.  முனி - கடவுளை எப்பொழுதுந் தியானஞ் செய்பவன்
அல்லது திரிகால ஞானமுடையவன் என்றுபொருள்; இனி,
எல்லாப்பற்றுக்களையும் முனிந்தவன் [வெறுத்துவிட்டவன்] ஆதலால் முனி
என்று தமிழ்வகையால் காரணப்பொருள் கூறலாகாது.  நோக்கி என என்று
இயையு எழுந்தருள்க என்றதில், அருள் என்றதுணைவினை மரியாதையை