விளக்கும். விரைசெய்தார் என்றது - அடையாளப்பூமாலையையும் வெற்றிப்பூமாலையையும், விரைசெய் தார்புனை என்ற அடைமொழியைப் பிறர்க்கும் கூட்டலாம். இரத்தினவாரத்தினும் வேறுபாடு தோன்ற, பூமாலை யென்றற்கு, 'விரைசெய்' என்ற அடைமொழி தாருக்குக் கொடுக்கப்பட்ட தென்க. திருதராஷ்டிரனுக்குப் பாண்டவர்களிடம் அன்பில்லையாயினும், இவர்களுக்கு அவனிடம் அன்புண்டென்பது, அவனைத் தருமன் இங்கு 'எந்தை' என்றதனால் விளங்கும். விதுரன், யமதருமராசனது அமிசமாவன். மற்றைப் பீஷ்மர் முதலியோரினும் பாண்டவர் பக்கல் விதுரனுக்கு மெய்யன்பு மிகுதியாதலின், 'மெய்விதுரன்' என்றது; "மெய்விதுரன் வீடணைந்தான் வேறு" என்றார் பெருந்தேவனாரும். வேதத்தை ஓதுதல் ஓதுவித்தல் என்னும் இருதொழிலுக்கும் உரியவர் அந்தணரேயாதலால், வேதியரென்ற காரணப்பெயர் அவருக்கே வழங்கும். வேதியர்கோ என்ற சொல்லில், இரட்டுறமொழிதலால் கிருபாசாரியனையும் அசுவத்தாமனையும் அடக்கலாம். வீடுமன் முதலியன இறுதியிற் பலர்பாலால் முடியாததனால் இவற்றை உம்மைத்தொகையாகக் கொள்ளாமல், ஒவ்வொரு சொல்லினிறுதியிலும் ஐ என்ற இரண்டனுருபை எடுத்துக் கூட்டிப் பெயர்ச்செவ்வெண்ணாகக் கொள்க. பணித்தருள் - இதுபோல்வனவற்றை வினைப்பகுதி தானே ஓசைவேறுபாட்டால் ஏவலொருமைப் பொருளுணர்த்திற்றென்றும், ஏவலொருமைக்கு உரிய ஆய்விகுதி புணர்ந்து கெட்ட தென்றும் இருவகையாகக் கூறுவர். பின் இரண்டடிகள், பெரியோர்களிடத்தில் தருமனுக்கு உள்ள விநயத்தைத் தெரிவிக்கும். இரண்டாமடியிலுள்ள முனிவனை யென்றது, சுட்டுமாத்திரையாய் நின்றது. அடிபரசினோம் என்பது - ஒருசொல்லாய், வணங்குதலெனப் பொருள்பட்டு கோவையென்னும் இரண்டாம் வேற்றுமைக்கு முடிக்குஞ் சொல்லாம்; இனி கோவை - கோவினது என உரைத்து உருபமயக்க மென்றாவது, ஐ அசையென்றாவது கொள்ளினும் அமையும்; கோவை அடியில் பரசினோம் என்றலுமொன்று. (7) அத்தினாபுரிக்கு வந்த உலூகமுனிவனைவணங்கித் துரியோதனன் ஆசனத்தில் இருத்துதல். 8. | போனநான்மறைப்புரோகிதனத்தினாபுரிபுகுந்தெரிபைம்பொன் மானவார்கழற்றிருதராட்டிரனெனுமன்னவைதனிலெய்த ஞானமாமுனிவரவுகண்டெதிர்கொளாநயந்திருபதம்போற்றி யானமாமணியாசனத்திருத்தினானரவவெங்கொடியோனே. |
(இ -ள்.) போன - (அங்ஙனந்) தூதுசென்ற, நால்மறை புரோகிதன் - நான்குவேதங்களையுமறிந்த (விராடனது) புரோகிதனாகிய உலூகன், அத்தினாபுரி புகுந்து - அஸ்தினாபுரிபட்டணத்தை அடைந்து, எரி - விளங்குகிற, பைம்பொன் - பசும் பொன்னாலாகிய, மானம் வார் கழல் - பெருமைக்கு அடையாளமான நீண்ட வீரக்கழலையுடைய, திருதராட்டிரன் எனும் மன் - திருதராஷ்டிரனென்னும் அரசனது, அவைதனில் - சபையிலே, எய்த - சேர,- அரவம் வெம்கொடியோன் - பாம்பின் வடிவத்தை யெழுதின (பகைவர்க்குப்) |