மீதுகண்வளர்ந்தான் - பரிமளத்தையுடைய அன்று மலர்ந்த மலர்களைக்கொண்டு பரப்பப்பட்ட படுக்கையின் மேற் பள்ளிகொண்டருளினான்; (எ - று.) உம் -எச்சம். மூன்றாமடியிற் கூறியது, இரவில் துயில்கொள்ள வேண்டிய பொழுது வந்ததைக் குறித்தற்கு அடையாளமாக வாத்தியம் வாசிக்கப்படுதலை. முற்காலத்தில் அரண்மனைகளில் அவ்வக்காலங்கள் வந்தமையை அரசர்கள் அறியுமாறு வாத்திய முழக்கத்தால் அறிவித்தல், மரபு. கொடுந்துடி - கடூரமான [மிக்க] தொனியையுடைய துடி யென்க; இனி, கண்ணபிரானிருக்குமிடத்தில் ஒலிப்பதால், பாண்டவதூதனாக வந்த அப்பிரானிடத்தும் பகைமைகொண்டுள்ள துரியோதனாதியர்க்குக் கொடிய துடி யென்றலும் ஒன்று; ஒலியின் தன்மையை வாத்தியத்தின் மேலேற்றிக் கூறிய உபசாரவழக்கு: இனி, வளைந்த துடி யென்பாரு முளர். மன்றல் - வாசனை. நாள் மலர் - புதிய மலர். மலர்ப்பாயல் - புஷ்ப சயநம்; இது, விதுரன் கண்ணபிரானுக்காக அமைத்ததென்க. கண்வளர்தல் - ஒரு சொல். (156) 97.-இனி - இராத்திரிகாலவருணனை. குளிருமாமதிமுகத்தொளிர்குமுதவாய்மலர்த்தித் தளவவாணகைபரப்பிவண்சததளமலர்க்கை அளவிலேகுவித்தளியொடுமகன்றிலாமையினாற் களிகொடோள்விலைக்கணிகையைப்போன்றதக்கங்குல். |
(இ -ள்.) குளிரும் மா மதி முகத்து ஒளிர் குமுதம் வாய் மலர்த்தி - குளிர்ச்சியாகவுள்ள பெரிய பூர்ணசந்திரன் போன்ற தனது முகத்திலே விளங்குகிற செவ்வாம்பல் மலர்போன்ற வாயைத்திறந்து [குளிர்ந்த பெரிய சந்திரமண்டலத்தினெதிரிலே விளங்குகிற ஆம்பலரும்புகளின் நுனியை மலரச்செய்து], தளவம் வாள் நகை பரப்பி - முல்லையரும்பு போன்ற பிரகாசமான பற்களி னொளியைப் புன்சிரிப்பினாற் பரவச்செய்து [முல்லை மலர்களின் ஒள்ளிய விளக்கத்தை வெளித்தோற்றி], வள் சத தளம் மலர் கை அளவிலே குவித்து அளியொடும் அகன்றிலாமையினால் - அழகிய தாமரை மலர்போன்ற (தன்) கையை (ப் பொருள்வந்த) அளவிலே குவியச் செய்து (வெளித்தோற்றத்துக்கு) அன்போடு நீங்காமையால் [அழகிய தாமரை மலரினிடத்தை (வண்டுகள் வந்து சேர்ந்த) அளவிலே குவியச்செய்து அவ்வண்டுகளோடும் நீங்காமையால்], அ கங்குல் - அவ்விராத்திரி, களி கொள் விலை தோள் கணிகையை - (பொருள் கொடுப்பவர் பலருந் தழுவிக்) களிப்புக் கொள்ளுதற்கிடமான தோள்களையுடைய வேசையை, போன்றது - ஒத்தது; (எ - று.) இப்பாட்டு - சிலேடையுவமையணி. இதில், முதல் மூன்றடி - விலைமகளுக்கும், இரவுக்கும் சிலேடையாக ஒரு பொருள் பட்டது. அளி - அன்பும் வண்டு மாதலை "வண்டின் பெயரு மதுவுங்கொடையும் அன்புங் கூறும் அளியென் கிளவி" என்ற திவாகரத்தாலும் அறிக. அளி - அன்பைக் குறிக்கையில் தமிழும், வண்டைக்குறிக் |