107.-துரியோதனன், கண்ணன்தனது அரண்மனையிலிறங்காமைக்குக் காரணம் வினாவுதல். முன்னகங்குடை கவித்தகாளமுகின்முன்னிருந்தபின் முகங் கொடா, தென்னகந்தனையொழித்து நென்னலிடை யிந்தமா நகரிலெய்தியும், பொன்னகங்கொள் புயவிதுரனில்லிடைபுகுந்ததென்கொலிது புகலெனாப், பன்னகந்தனையுயர்த்தகோவுமுரைபகரமாலுமெதிர்பகருவான். |
(இ -ள்.) முன் - முன்னே [இளமையில் இந்திரன் பெருமழை பொழிவித்தபொழுதில் என்றபடி], நகம் - கோவர்த்தனமலையை குடை கவித்த- குடையாக எடுத்துப்பிடித்த, காள முகில் - கரிய மேகத்தையொத்த கண்ணபிரான், முன் இருந்தபின் - முன்னே வீற்றிருந்தபின்பு, பன்னகந்தனை உயர்த்த கோவும் - பாம்புக்கொடியை உயர எடுத்த துரியோதனராசனும், முகம்கொடாது - லட்சியஞ் செய்யாமல், 'நென்னலிடை - நேற்றைப் பொழுதிலே, இந்தமா நகரில் எய்தியும் - இந்தப் பெரியபட்டணத்தில் (நீ) வந்து சேர்ந்தும், என்அகந்தனை ஒழித்து - எனது வீட்டிற்கு வருதலை நீக்கி, பொன் அகம் கொள்புயம் விதுரன் இல்லிடை - பொன்னா பரணங்களைத் தன்னிடத்தே கொண்டதோள்களையுடைய விதுரனது வீட்டில், புகுந்தது - (நீ) நுழைந்தது, என்கொல்- என்னகாரணத்தால்? இது புகல் - இதற்கு விடைசொல்,' எனா - என்று,உரை பகர - வார்த்தை சொல்ல,- மாலும் - கண்ணபிரானும், எதிர் பகருவான்- மறுமொழி கூறுபவனானான்; (எ-று.) அதனை, மேலிரண்டு கவிகளிற்காண்க.
'கவிழ்த்த' என்ற பாடத்துக்கு - பசுக்களும் கன்றுகளும் எட்டிப் புல்மேயலாம்படி தலைகீழாக எடுத்துப்பிடித்த என்க; "மதுசூதனனெடுத்து மறித்தமலை" "காம்பாகக் கொடுத்துக் கவிழ்த்த மலை" என்றார் பெரியாழ்வாரும். என் அகம் என்றதில் துரியோதனனது அகங்கார மமகாரங்கள் நன்கு விளங்கும். பொன் - கருவியாகுபெயர். இனி, பொன்நகம்கொள் புயம் - பொன் மலையையொத்த தோளென்றும், பொன் அகம் கொள்இல் - திருமகள் இடமாகக்கொண்ட வீடென்றும், பொன் நகம் கொள் இல் -மேருமலையை யொத்த மாளிகை யென்றும் உரைக்க இடமுண்டு. முகங்கொடாது ஒழித்து என இயைப்பினும் அமையும். 'என் அகந்தனை யொழித்து' என முதலில் துரியோதனன் வாக்கில் மேல் முடிவுக்கு ஏற்ப, அமங்கலமான வார்த்தை வந்ததும் காண்க. (167) 108.-கண்ணபிரான் தான்துரியோதனனரண்மனையில் எழுந்தருளாமைக்குக் காரணங் கூறுதல். என்னினின்னிலொருபேதமில்லை யிதுவென்னினின்னிலது வென்னினும், மின்னின்மின்னிலகுவிறனெடும்படைவிதுரன்வந்தெதிர் விளம்பினான், உன்னிலின்னமுளதொன்றுபஞ்சவருரைக்கவந்தவொருதூ தன்யான், நின்னிலின்னடிசிலுண்டு நின்னுடன்வெறுக்கவெண்ணுவது நீதியோ. |
|