பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 179

இது முதல் மூன்று கவிகள் - ஒருதொடர்.

இதுவும், மேற்கவியும் கண்ணன் வார்த்தை.

     (இ -ள்.) என் இல் நின் இல் ஒருபேதம் இல்லை - என் வீடென்றும்
உன்வீடென்றும் ஒருபேதம் (எனக்குக்) கிடையாது; இது என் இல் - இந்த
உன்வீடு என்வீடு; அது நின் இல் - (துவாரகையிலுள்ள) அந்த என்வீடு
உன்வீடு; என்னினும் - என்றிருந்தாலும், மின்னின் மின் இலகு விறல் நெடு
படை விதுரன் வந்து எதிர் விளம்பினான் - மின்னலைக் காட்டிலும்
(மிகுதியாக) ஒளி விளங்கப்பெற்ற வெற்றியைத்தரும் பெரிய ஆயுதத்தையுடைய
விதுரன் எதிர்கொண்டு வந்து பேசினான்; (உன்வீட்டுக்குவராமல் அவன்
வீட்டுக்குப் போனதற்கு இது ஒருகாரணம்); உன்னில் - ஆலோசிக்குமிடத்து,
இன்னம் உளது ஒன்று - இன்னமும் ஒருகாரண முண்டு:- பஞ்சவர்
உரைக்கவந்த ஒரு தூதன்யான் - பாண்டவர்கள் சொல்லி யனுப்ப வந்த ஒரு
தூதனாவேன் நான்; (அப்படிப்பட்டவன்), நின் இல் இன் அடிசில் உண்டு
நின்னுடன் வெறுக்க எண்ணுவது நீதியோ - உனது வீட்டில் இனிமையான
உணவை உட்கொண்டு பின்பு உன்னோடு வெறுக்கப் போகக் கருதுவது
நியாயமோ? (நியாயமன்று என்பது ஒரு காரணம்); (எ - று.)

    என்னில் நின்னில் ஒருபேதமில்லை என்பதற்கு - எனக்கும் உனக்கும்
ஒரு வித்தியாசமில்லையென்றும் உரைக்கலாம்.  இந்த உன்வீடு எனது
அன்பரான பாண்டவருடையது, உன்னுடையதன்று; மேலுலகத்திலுள்ள வீர
சுவர்க்கமே உன்னுடையது என்ற கருத்து, 'இது என் இல் நின் இல் அது'
என்பதில் தொனிக்குமாறு காண்க.  'முன்னிலகு' என்ற பாடத்துக்கு -
முன்புவிளங்குகிற என்க.  விதுரனுக்கு 'மின்னின் மின்னிலகு விறனெடும்
படை'என்ற அடைமொழி கொடுத்ததனால், அவன்படையை ஞாபகத்துக்
கொண்டன்றோ யான் அங்குப் புகுந்தது என்ற கருத்து ஒலிவகையால்
தோன்றும்.  விதுரன்வந்து எதிர் விளம்பியமை முன்னேகூறப்படாவிடினும்,
இங்குக் கூறப்பட்டது.  அதனால், அங்குச்சொல்லாதது - 'உரைத்தும்'
என்னும்உத்தியாம்; இங்ஙனமே காவியங்களில் கூற வேண்டியபொருளை
எங்கேனும்ஓரிடத்துக்கூறி, மற்றையவிடங்களிற் கூறாது விடுதலைப்
பலவிடத்திலுங்காணலாம்.  'உண்டவீட்டுக்கு இரண்டகம் நினைக்கலாகாது'
என்பதுநான்காமடிக்கு ஏற்ற பழமொழி.  ஒன்று - ஆகுபெயர்.    (168)

109.-நரகிற் செல்லுதற்குஉரியவர்.

அரவமல்கிய பதாகையாய் மதியமைச்சரா யரசழிப்பினுங்
குரவர்நல்லுரை மறுக்கினும் பிறர்புரிந்த நன்றியதுகொல்லினும்
ஒருவர்வாழ் மனையிலுண்டு பின்னுமவருடனழன்றுபொர வுன்னினும்
இரவியுள்ளளவு மதியமுள்ளளவு மிவர்களே நரகிலெய்துவார்.

     (இ -ள்.) அரவம் மல்கிய பதாகையாய் - பாம்பின் வடிவம்
பொருந்தினபெருங்கொடியையுடையவனே! - மதி அமைச்சர் ஆய் அரசு
அழிப்பினும் -நல்லறிவுடைய [அல்லது அரசனுக்கு அறிவுறுத்