(இ -ள்.) (இவ்விதுரன்), வன்பினால் அவனி வௌவ என்று கொல் - பலாத்காரமாக (எனது) இராச்சியத்தைப் (பாண்டவர்) பறித்துக்கொள்ளவேண்டுமென்று கருதியோ? என் மனையில் உண்டியை மறுத்தவன் தன் பதாகினியோடு இனிது அருந்தும் வகை தன் இல் இன் அமுதுஇயற்றினான் - எனது வீட்டில் உணவு கொள்ளுதலை யொழித்த கண்ணன்தனது சேனையுடனே இனிமையாக உண்ணும்படி தனது வீட்டில் (அவனுக்கு)இனிய நல்லுணவை அமைப்பித்தான்; (இவன்), என் பிதாவொடு பிறந்தும் -எனது தந்தையுடனே ஜனித்தும், இன்று அளவும் என் கை ஓதனம் அருந்தியும்- இன்றைத்தினம் வரையிலும் எனது கையால் அளிக்கப்பட்ட அன்னத்தைப்புசித்தும், அன்புதான் உடையன் அல்லன் - (என்னிடத்து) அன்புடையவனல்லன்; (ஆதலால்), என்பகை தனக்கும் உற்ற பகை அல்லனோ- எனக்கு நேரிற் பகைவனாக வுள்ளவனினும் (மறைந்து உட்பகைவனாகவுள்ளஇவன்) மிகுந்த பகையாளியல்லனோ? (எ - று.)
"பழுதெண்ணு மந்திரியிற் பக்கத்துட்டெவ்வோ, ரெழுபது கோடியுறும்" என்ற நீதியைக் கருதி, அகப்பகையான இவன் புறப்பகையினுங் கொடியனென்றான். இனி, 'என்பகை தனக்கும் உற்றபகையல்லனோ' என்பதற்கு - எனக்குப் பகைவனாகவந்த கண்ணனைத் தனக்கும் பொருந்திய பகைவனாக (என் மனிதனான இவ்விதுரன்) பாவிக்கவேண்டுவது கடமையன்றோ? என்ற கருத்துப்பட உரைப்பாருமுளர். வௌவ - அகரவீற்று வியங்கோள். உண்டி - உண்ணப்படுவது. பதாகிநீ என்னும் வடசொல்லுக்கு -கொடியை யுடையதென்று பொருள்; பதாகா - கொடி. யுதிட்டிரன் முதலிய ஐவர்க்குப் பாண்டு சொந்தத் தந்தையல்லனெனக் கீழ்க் கூறினனாதலால், விதுரனை அவர்கள் தந்தையோடு பிறவாமல் தன் தந்தையோடு மாத்திரம் பிறந்தவனாகப் பேசினான். கையோதனம் என்றது, சுதந்திரத்தை நன்கு விளக்க. (187) 128. | முதல்விழைந் தொருவனுட னியைந்த பொருள்பற்றியின் புற முயங்கினும், அதிகமென்றபொரு ளொருவன்வேறுதரினவனையே யொழியவறிவரோ, பொதுமடந்தையர் தமக்கு மண்ணிலிதுபுதுமையல்ல வவர்புதல்வனாம், விதுரனின்றவனொடுறவுகொண்டதொர் வியப்பையென் சொலிவெறுப்பதே. |
(இ -ள்.) (தாசிகள்), இயைந்த பொருள் பற்றி - (ஒருவன்) மனமிசைந்து கொடுத்த செல்வத்தைக் கைப்பற்றிக்கொண்டு, ஒருவனுடன் - அவ்வொரு புருஷனுடனே, முதல் விழைந்து இன்பு உற முயங்கினும் - (அப்பொருள் காரணமாக) முதலில் விரும்பி இன்பம் மிகக் கூடியிருந்தாலும், (பின்பு), வேறு ஒருவன் அதிகம் என்ற பொருள் தரின் - வேறொரு புருஷன் அதனினும் மிகுதியான செல்வத்தைக் கொடுத்தால், அவனையே ஒழிய அறிவரோ- அவ்விரண்டாமவனைத் தவிர (முன்னவனை ஒரு பொருளாக) மதிப்பார்களோ?[மதியார்]; பொது மடந்தையர் தமக்கு மண்ணில் இது புதுமை |