சீற்றம் -தொழிற்பெயர்; சீறு - பகுதி, அம் விகுதி, ற் - விரித்தல் விகாரம். ஆங்கண் - அக்கண் என்பதன் மெலித்தலும் நீட்டலும். 'இருப்பவுங்குரிசில்' எனவும் பாடம். இதுமுதல் ஐம்பதுகவிகள் - முதற்சீரும் நான்காம்சீரும் விளச்சீர்களும், மற்றை நான்கும்மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட அறுசீராசிரிய விருத்தங்கள். (201) 142.-இதுமுதல் மூன்றுகவிகள் -ஒருதொடர்: விதுரன் சொல்லும் உத்தரம். ஆவதுகருதானாகிலமைச்சர்சொற்கேளானாகில் வீவதுகுறியானாகில்விளைவதுமுணரானாகில் நாவதுகாவானாகிலவனுக்காநடந்துபோரிற் சாவதுபழுதென்றன்றோசகத்துளோர்சாற்றுகின்றார். |
(இ -ள்.) '(ஒருவன்), ஆவது கருதான் ஆகில் - (தனக்கும் பிறர்க்கும்) நன்மையாகுங் காரியத்தை ஆலோசியானானாலும், அமைச்சர் சொல் கேளான் ஆகில் - மந்திரிகளது வார்த்தையைக் கேட்டுநடவானானாலும், வீவது குறியான் ஆகில் - (தான்) அழிவதைச் சிந்தியானானாலும், விளைவதும் உணரான் ஆகில் - (இம்மை மறுமைகளில் தனக்கு இனி) விளையும் பயன்களை அறியானானாலும், நா அது காவான் ஆகில் - (தனது) நாக்கை (த்தீச்சொற் சொல்லாமல்) அடக்கிவையானானாலும், அவனுக்கு ஆ நடந்து- அவனுக்கு உதவியாகச் சென்று, போரில் சாவது - யுத்தத்தில் இறப்பது, பழுது- குற்றமாகும்' என்று அன்றோ சகத்து உளோர் சாற்றுகின்றார் - என்றேஉலகத்திலுள்ள பெரியோர்கள் எல்லோரும் சொல்லுகிறார்களன்றோ? (எ - று.) ஆவதுகருதாமை முதலாக இங்குக்கூறிய துர்க்குணங்களையுடைய துரியோதனனுக்கு உதவியாகச்சென்று போரில் இறத்தல் பழிபாவங்களைத் தருவதாதலால், அதனை ஒழித்தேன் என்பதாம், 'ஆகில்' எனப் பலவிடத்தும், வந்தவை - வினைச்செவ்வெண். இவை - 'பழுது' என்பதைக் கொண்டுமுடியும். "யாகாவாராயினு நாகாக்க காவாக்கால், சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு" என்ற திருக்குறளினாலும், மொழியடக்கம் - மற்றை மெய்யடக்க மனவடக்கங்களினும் முக்கியமாதலை அறிக. ஆவது, வீவது, விளைவது - எதிக்கால வினையாலணையும் பெயர்கள். நாவது, அது - அசை.சாவது - எதிர்காலத் தொழிற்பெயர். இனி, நாவது - நாவினிடத்ததான சொல்எனக் குறிப்புவினையாலணையும்பெயருமாம். அன்றோ - தேற்றம். (202) 143. | செல்வம்வந்துற்றகாலைத்தெய்வமுஞ்சிறிதுபேணார் சொல்வனவறிந்துசொல்லார்சுற்றமுந்துணையுநோக்கார் வெல்வதேநினைவதல்லால்வெம்பகைவலிதென்றெண்ணார் வல்வினைவிளைவுமோரார்மண்ணின்மேல்வாழுமாந்தர். |
|