(இ -ள்.) தந்தையும் - பிதாவான திருதராட்டிரனும், தம்பிமாரும் - தம்பியரான (துச்சாதனன் முதலிய) தொண்ணூற்றொன்பதின்மரும், கன்னனும்-, சகுனி தானும்-, சிந்தையில் தெளிந்த கல்வி செழு மதி அமைச்சர் தாமும் - மனத்திலே ஐயந்திரிபற அறிந்த கல்வியையும் சிறந்த நுண்ணறிவையுமுடைய மந்திரிகளும்,- முந்து அரவு உயர்த்த கோமான் ஏவலால் - சிறந்தபாம்புக்கொடியை உயரஎடுத்த துரியோதனராசனது கட்டளையினால், முழுதும் எண்ணி மந்திரம் இருப்பான் - நன்றாக ஆராய்ந்து ஆலோசனை செய்திருக்கும்பொருட்டு, ஓர் மண்டபம் வந்து குறுகினார் - ஒரு மண்டபத்தைவந்து அடைந்தார்கள்; (எ - று.)
ஏவலால் வந்து குறுகினார் என இயையும், இருப்பான் - பானீற்று எதிர்கால வினையெச்சம். கல்வியாலும் செழுமதியாலும் தாம் தெளிந்த பொருள்களைத் துரியோதனனிடத்து அச்சத்தால் வெளிக்கூறாது நிற்பரென்பதுதோன்ற, 'சிந்தையிற் றெளிந்த கல்விச் செழுமதி யமைச்சர்' என்றார். முந்துஉயர்த்த என இயைத்து, முன்னிடத்திலே உயர எடுத்த என்றும் உரைப்பர். (229) 170.-துரியோதனன்மற்றையோரை வினாவுதல். தீதறுமதிவல்லோரைச்செழுமதிகுடையானோக்கிப் பாதவவனத்திற்போனபாண்டவர்தம்மைமீண்டு மேதகவழைத்துநாடுவேண்டுமினென்றுமூட்டும் யாதவன்றனித்துவந்தானென்செய்வதியம்புமென்றான். |
(இ -ள்.) செழு மதி குடையான் - கலைநிறைந்த பூர்ணசந்திரன் போன்றவெண்கொற்றக் குடையையுடைய துரியோதனன், - தீது அறு மதி வல்லோரைநோக்கி - குற்றமற்ற அறிவில்வல்ல தந்தை முதலியோரைப் பார்த்து, 'பாதவம் வனத்தில்போன - மரங்களையுடைய காட்டிற்குச்சென்ற, பாண்டவர் தம்மை - பாண்டவர்களை, மேதக அழைத்து - மேன்மையாகக்கூப்பிட்டு, நாடு மீண்டும்வேண்டுமின் என்று - (உங்கள்நாட்டை)மறுபடி விரும்பிக்கேளுங்களென்று சொல்லி, மூட்டும் - கலகத்தையுண்டாக்குகிற, யாதவன் - யதுகுலத்தவனாகிய கண்ணன், தனித்து வந்தான் - தனியனாக இங்கு வந்துள்ளான்; என் செய்வது - (நாம் இப்பொழுது) என்னசெய்யத்தக்கது? இயம்பும் - சொல்லுங்கள்', என்றான் - என்று கூறினான்; பாதபம் - வடசொல்; காலால் நீரைக்குடிப்பதென்று பொருள்; பாதம் - அடி: "நின்று, தளரா வளர்தெங்கு தாளுண்டுநீரைத், தலையாலே தான் தருதலால்" என்பதுங் காண்க. மேதக - மேன்மையென்னும் பண்பினடி.(230) 171.-திருதராட்டிரன்'கண்ணனைக் கொல்லவேண்டும்' என்று கூறுதல். பொரும்படைமைந்தன்கூறத்தந்தையும்பொருந்தச்சொல்வான் இரும்புலிவலையிற்பட்டால்விடுவரோவெயினரானோர் |
|