போல் -பூனையைப்போல், இருந்த உழி - உள்ளிடத்திலேயிருந்து கொண்டு, உரைக்கும் - வீரமாகப்பேசுகிற, ஈது - இவ்வார்த்தை, இகலது அன்று - வலியதாகாது; இருவர்க்கும் - எங்கள் இருதிறத்தார்க்கும், துன்று பூசலில் - நெருங்கி நேரும் போரில், ஆண்மையும் - பராக்கிரமத்தையும், தோள் வலிமையும் - புயங்களின் பலத்தையும், காணலாம் - (இன்னாரிடத்திலுள்ளதென்று வெளிப்படையாகப்) பார்க்கலாம், என்றான் - என்று கூறினான்; (எ - று.) இங்ஙனங்கூறினது,ஆண்மையுந் தோள்வலிமையும் போரில் தங்களிடத்தே மிக்குவிளங்குமென்றகருத்தால். பூஸு ரன் என்னும் சொல்லுக்கு - பிரமதேஜசினால் பூமியில் தேவன்போல விளங்குபவனென்று பொருள்; இது - அந்தணர்க்குச்சிறப்புப்பெயர்: "மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித்தொழும்" என்றார், திருவாய் மொழியிலும். துரியோதனனது பெரியவலிய தோள்களுக்கு உவமையாகக்கூறுகிற மகாமேரு கிரிக்கு 'குங்குமம் பூசியது' என்ற அடைமொழி கொடுத்தது, அத்தோள்கள் எப்பொழுதும் குங்குமக்கலவைச்சாந்தைப் பூசப்பெற்றுள்ளன வாதலின். குங்குமம்பூசிய எழிலுறும்மேரு இரண்டு - இல்பொருளுவமை. குங்குமமென்னும் மரத்தின்பெயர், அதன் பூவின் குழம்பிற்கு இங்கே இருமடியாகுபெயர். எழிலாவது வளர்ந்தமைந்த பருவத்தும் இது வளர்ந்து மாறியதன்றி இன்னும் வளருமென்பதுபோன்று காட்டுதல் என்றார் நச்சினார்க்கினியர்; என்றது, புஷ்டி யென்றபடி. இணை மேரு பூசியது - ஒருமைப்பன்மை மயக்கம். இணை - இரண்டும் ஒன்றோடொன்று ஒத்த என்றுமாம். பொன் - கருவியாகுபெயராய், பொன்னாபரணங்களை யணிந்த வென்றுங் கொள்ளலாம். குரு என்பவன் - சந்திர குலத்தில் பிரசித்திபெற்ற ஓரரசன்; இவனால் அக்குலம் குருகுலமென்றும், அக்குலத்தவர் கௌரவரென்றும், அந்நாடு குருநா டென்றுங் கூறப்படும். வய - வலிமையுணர்த்து முரிச்சொல். துரியோதனன் பதினாயிரம் யானைபலங் கொண்டவனாதலால், அவனை 'வயவேந்தன்' என்றார். இனி, வயம் எனப் பிரித்தால், பெயர்ச் சொல்லாய், வெற்றியென்று பொருள்படும். காடு முதலிய இடங்களிலன்றி வீட்டினுள்ளே வசிக்கும் பூனைக்குப் பூசையென்று பெயராதலால், 'பூசைபோலிருந்துழி' என உவமை கூறப்பட்டது; அதனை 'வெவ்வாய்வெருகினைப் பூசையென்றலும்' என்ற தொல்காப்பியங்கொண்டும் "கிளர்மாடத்துள்ளுறையும் பூசை" என்ற கம்பராமாயணங்கொண்டும் அறிக. ஆண்மை - ஆண்தன்மை, பௌருஷம். தோள்வலிமை - புஜபலம். (13) விதுரன் துரியோதனனுக்கு நற்புத்திகூறுதல். 14. | கல்விதூயநெஞ்சிலாதவச்சுயோதனன்கழறியமொழிகேட்டு வில்விதூரனிவ்வேதியன்மொழிப்படிமேதினிவழங்காமற் புல்விதூடகரினுமுணர்விலாதவர்புகலும்வாசகங்கேட்கிற் செல்விதூரியளாய்விடுஞ்சுற்றமுஞ்சேனையுங்கெடுமென்றான். |
|