பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 235

     (இ -ள்.) (இங்ஙனம் சூரியன் உதித்தபின்பு), வேந்தர் யாவரும் -
அரசர்களெல்லோரும், இருந்துயில்உணர்ந்து - பெரிய தூக்கம் தெளிந்து
எழுந்து, இரவில் வரும் துயில் சற்றும் இலாத கண்ணான் வாழ்பெருங்கோயில்
புக்கார் - இராத்திரி முழுவதும் இயல்பாகவருந் தன்மையதான தூக்கம்சிறிதும்
பெறாத கண்களையுடைய துரியோதனன் வாழ்கிற பெரிய அரண்மனையை
வந்து அடைந்தார்கள்; அநந்தன்போகம் பேர் அணைபெருந் துயில்துறந்த
மாலும் - ஆதிசேஷனது உடம்பாகிய பெரிய சயனத்திலே நெடுங்காலம்
யோகநித்திரை செய்தலைவிட்டு (இங்கு) அவதரித்த திருமாலாகிய
கண்ணனும்,அருந்துயில் எழுந்து - (பிறர்க்கு) அருமையான அறி துயில்
நீங்கிஎழுந்திருந்து, காலை அருங் கடன் முறையின் செய்தான் -
உதயகாலத்திற்செய்தற்குரிய அரிய (ஸ்நாநம், ஸந்தியாவந்தநம் முதலிய)
கடமையானஅநுஷ்டானங்களை முறைமைதவறாமற் செய்துமுடித்தருளினான்;
(எ - று.)

    துரியோதனனை 'இரவில்சற்றும் வருந்துயிலிலாதகண்ணான்' என்றது,
அவன் அவ்விராமுழுவதிலும் பெரிய சதியாலோசனையில் இருந்தனனாதலால்.
அநந்தனென்னும் வடசொல்லுக்கு,- (பிரளய காலத்திலும்)
அழிதலில்லாதவனென்று பொருள்; ந + அந்த + அன் என்று  பிரிக்க;
அந்தம் - இறுதி.   பாம்பினுடலுக்குப்   போகமென்றுவடமொழியிற்பெயர்;
இதனை யுடைமைபற்றி, பாம்பு - போகியென்றுஒருபெயர்பெறும்.  அநந்தம்
போகம் பேர் அணை என்பதற்கு எல்லையில்லாதபேராநந்தத்தை
யனுபவித்தற்குரிய சிறந்த திருப்பள்ளி மெத்தை யென்றும்உரைக்கலாம். (246)

187.-தூதுவர் வந்து அழைக்க,கண்ணன்
துரியோதனனரண்மனை சேர்தல்.

மாதவனிருந்தகோயில்வந்தடிவணங்கிமன்னன்
றூதுவராழியங்கைத்தோன்றலேதுளபமாலே
யாதவகுலத்தோரேறேயெழுந்தருள்கென்றானின்றெம்
மேதகுமரசனென்றார்முகுந்தனும்விரைந்துசென்றான்.

     (இ -ள்.) (அப்பொழுது), மன்னன் தூதுவர் - துரியோதனனது
தூதர்கள்,மாதவன் இருந்த கோயில்வந்து - திருமகள்கொழுநனான கண்ணன்
எழுந்தருளியுள்ள (விதுரனது) மாளிகைக்கு வந்து, அடி வணங்கி -
(கண்ணனது) திருவடிகளை நமஸ்கரித்து, (அவனை நோக்கி), 'ஆழி அம் கை
தோன்றலே - சக்கராயுதத்தையேந்திய அழகிய திருக்கையையுடைய அரசனே!
துளபம் மாலே - திருத்துழாய்மாலையையுடைய கண்ணபிரானே!
யாதவகுலத்தோர் ஏறே - யதுவினது சம்பந்தமான குலத்து அரசர்கட்குச்
சிங்கம்போலச் சிறந்தவனே!- இன்று - இப்பொழுது, எம் மேதகும் அரசன்-
எங்களது மேன்மையுள்ள அரசனான துரியோதனன், எழுந்தருள்க என்றான்-
(நீ தன்னிடம்) வந்தருளவேண்டுமென்று கூறினான்', என்றார் - என்று
சொன்னார்கள்; முகுந்தனும் - திருமாலாகிய கண்ணனும், விரைந்து சென்றான்
- துரிதமாகப் புறப்பட்டுப் போயருளினான்;