கண்ணனொருவனை மாத்திரமே உள்ளே வரவிடுங்கள்' என்று கட்டளையிட்டான்; (எ - று.) ஏ -பிரிநிலை; மற்றையரசர்களையுஞ் சேனையையும் விலக்கிற்று. பறவைப்பொதுப்பெயராகிய வி என்னும் வடசொல் - இங்கே சிறப்பாய் வண்டை உணர்த்தி, வீ என நீண்டுநின்றது. வேத்ரம் - வடசொல்; பிரப்பங்கோல். (249) 190.-உட்சென்றகண்ணபிரானுக்குத் துரியோதனன் பொய்யாசனமளித்தல்.
தன்பெருஞ்சேனைநிற்கத்தண்டுழாயலங்கலானும் இனுபுறுநகைத்துவேந்தரிருந்தபேரவையினெய்த மின்புணர்துவசநாகவிடாநிகர்மனத்தினானும் அன்பொடுதிகிரியானையதன்மிசையிருக்கவென்றான். |
(இ -ள்.) (அத்துரியோதனன் கட்டளையை வாயில்காவலாளர் கூறியதனால்), தன் பெருஞ்சேனை நிற்க - தனது பெரியசேனை (உள்ளேசெல்லாது வெளியிலேயே) நிற்க, தண் துழாய் அலங்கலானும் - குளிர்ந்ததிருத்துழாய் மாலையையுடைய கண்ணனும், இன்பு உற நகைத்து - (கண்டவர்க்கு) மகிழ்ச்சி யுண்டாம்படி புன்சிரிப்புச்செய்து, வேந்தர் இருந்த பேர் அவையின் எய்த - (துரியோதனன் முதலிய) அரசர்கள் வீற்றிருந்த பெரிய சபையினுள்ளே செல்ல, (அப்போது), மின் புணர் துவசம் நாகம்விடம் நிகர் மனத்தினானும் - ஒளிபொருந்திய கொடியில் பாம்பையும் அப்பாம்பின் விஷத்தையொத்த [மிகக்கொடிய] கருத்தையுமுடைய துரியோதனனும், திகிரி யானை - சக்கராயுதத்துக்குரிய கண்ணனை, அன்பொடு - அன்புடனே, அதன்மிசை இருக்க என்றான் - 'அந்த ஆசனத்தின்மேல் வீற்றிருப்பாயாக' என்று சொன்னான்; (எ - று.) மாயவனாகிய தன்னை வஞ்சிக்க நினைத்த பேதைமையை நோக்கிக் கண்ணன் நகைத்தான். விஷம் தவறாமற் கொல்லுங்கொடுமைக்கு உவமை. அதன்மிசை - இரவில் வெகுசிரமப்பட்டு அமைத்த பீடத்தின்மேல். அன்பொடு- அன்புடையான்போலக் காட்டி வேண்டுமாயின் மிகப் பலரையும் அழிக்கக்கூடிய ஆற்றலைவிளக்க 'திகிரியான்' என்றார். (250) வேறு. 191.-இதுமுதல் 22 கவிகள் -கண்ணன் விசுவரூபங் கொள்ளுதலும், அதனால் மற்றையோர்படும் பாடுகளும் கூறும். இறைவனெழிற்கதிர்மணிகளழுத்தியதவிசினிருத்தலுமே நெறுநெறெனக்கொடுநிலவறையிற்புகநெடியவனப்பொழுதே மறலியெனத்தகுநிருபனியற்றியவிரகைமனத்துணரா முறுகுசினத்துடனடியதலத்துறமுடிககனத்துறவே. |
|