பக்கம் எண் :

24பாரதம்உத்தியோக பருவம்

     (இ -ள்.) கல்வி - படிப்பினாலே, தூய - (குற்றமற்றுச்) சுத்தமான,
நெஞ்சு - மனம், இலாத - இல்லாத, அ சுயோதனன் - அந்தத் துரியோதனன்,
கழறிய - உறுதியாகச்சொன்ன, மொழி - அவ்வார்த்தையை, வில்விதூரன் -
வில்வித்தையில் வல்ல விதுரன், கேட்டு - செவியுற்று, (துரியோதனனை
நோக்கி), 'இ வேதியன் மொழிப்படி - இந்த அந்தணனது வார்த்தையின்படி,
மேதினி வழங்காமல் - (பாண்டவருக்குப்) பூமியைக்கொடாமல், புல்
விதூடகரினும் உணர்வு இலாதவர் புகலும் வாசகம் கேட்கில் - இழிவான
விதூஷகர்களைக் காட்டிலும் அறிவில்லாதவர்கள் சொல்லும் வார்த்தையைக்
கேட்டு அதன்படி நடப்பாயானால், செல்வி தூரியள் ஆய்விடும் - (உனக்குத்)
திருமகள் தூரத்திலுள்ளவளாய்விடுவள் [விலகிப்போவாள் என்றபடி]; சுற்றமும்
சேனையும் கெடும் - (உனது) பந்துவர்க்கமும் சேனைகளும் போரில் அழியும்,'
என்றான் - என்று சொன்னான்; (எ - று.)

     இராவணன்போலப்படித்துக்கெட்டவனல்லாமல், துரியோதனன் படியாது
கெட்டவனாதலால், 'கல்விதூயநெஞ்சிலா வச்சுயோதனன்' என்றார்.
தூயநெஞ்சிலாத எனவே, தீயநெஞ்சுடைமை அருத்தாபத்தியால் தானே
பெறப்படும்.  விதுரனது வில் வல்லமை பிரசித்தம்:  "வெற்றிவிதுரன்
கைவில்லிருக்க மேதினியின் - மற்றவனை வெற்றி கொள்ளுமாறுண்டோ"
என்னும் பாரதவெண்பாவினாலும் அறிக.  விதூஷகர் - தமக்கு நேரிற்
பகையில்லாதிருக்கையிலும் ஒரு பயனையுங் கருதாமல் தானும் பிறரும்
நகைத்தலொன்றையே நல்ல பயனாகக்கொண்டு எப்பொழுதும் பிறரை
நிந்தித்துத் திரியும் அவிவேகிகள், வி - மிகுதியாய், தூஷகர் - தூஷிப்பவர்,
பழிப்பவர் என்க.  புல் விதூடகரினும் உணர்விலாதவரென்றது, கர்ணன் சகுனி
துச்சாதனன் முதலியோரை.  கல்வி தூய - மூன்றாம் வேற்றுமைத்தொகையில்
வலி இயல்பாயிற்று.  இனி, உம்மைத்தொகையாய், கல்வியுந் தூயநெஞ்சுமில்லாத
என்றுமாம்.  விதூரனென்ற நீட்டல் விகாரம், எதுகைத்தொடை நோக்கியது.
மேதினி என்ற சொல்லுக்கு - (திருமாலாற்கொல்லப்பட்ட மதுகைடபரென்னும்
அசுரரது) உடற்கொழுப்பினால் நனைக்கப்பட்டதென்று காரணப்பொருள்;
மேதஸ் - நிணம்.  செல்வி - செல்வங்களுக்கு உரியவள்.  இனி, தூரியளாய்,
விடும் என இரண்டாகக்கொண்டு, சிறிது சிறிதாகச் சேய்மையிற் சென்று நின்று
பின்பு விட்டேயொழிவளென்றுங் கருத்துக்கொள்ளலாம்.  சுற்றம் - (சுப
அசுபகாலங்களில் ஒருவனை வந்து) சூழுந்தன்மையதுபற்றி வந்த பெயர்.
சுற்றமென்னும் பால்பகா அஃறிணைப்பெயர் - ஆகுபெயர்ப்பொருளால்
உயர்திணைப்பலர்பால் குறிப்பதாயினும், சொல்நிலைக்கு ஏற்ப, கெடும்
என்னுஞ்செய்யுமென்முற்றைக் கொண்டது.                 (14)

துரோணனும் கிருபனும் நற்புத்திகூறுதல்.

15.

திரத்துவாய்மைநீதவறிமற்றவருடன்சேனையுந்திறலுங்கொண்
டுரத்துவாளமருடற்றலோபெரும்பிழையுடன்றனையாமாகிற்
சரத்துவாய்தொறுஞ்சோரிகக்கிடவிடுந்தனஞ்சயன்றனுவென்று
பரத்துவாசனும்பகர்ந்தனன்கிருபனும்பகர்ந்ததேபகர்ந்திட்டான்.