தத்திதாந்தமாகவந்த பாரத்துவாசன் என்ற மொழியின் குறுக்கல் விகாரம். துரோணாசாரியர் பரத்துவாச முனிவரின் குமாரராவர். (15) வீடுமன் திருதராட்டிரனுக்குஉறுதி கூறல். 16. | காடுமன்னுநின்புதல்வருக்கறுதிசெய்காலமோகழிந்தன்று நாடுமன்னவகொடாமல்வெஞ்சமர்பொரநாடினையெனினாளைக் கோடுமன்னுவிலருச்சுனற்கெதிரெவர்குனிக்க வல்லவரென்று வீடுமன்றிருத்தனயனோடுறுதிகள்வெகுண்டுரைத்தனனன்றே. |
(இ -ள்.) (அப்பொழுது), வீடுமன் - பீஷ்மன், வெகுண்டு - கோபங்கொண்டு, திரு தனயனோடு - (தனது) சிறந்த குமாரனான திருதராட்டிரனுடனே, 'மன்னவ - அரசனே! காடு மன்னும் நின்புதல்வருக்கு - வனத்தில் வசித்திருந்த உனது குமாரர்களான பஞ்ச பாண்டவர்க்கு, அறுதி செய் காலமோ - (வனவாசமும் அஜ்ஞாத வாசமுமாக) வரையறைசெய்யப்பட்டிருந்த (பதின்மூன்று வருஷ) காலமோ, கழிந்தன்று - கழிந்துவிட்டது;(இனி மேல்), நாடு கொடாமல் - (அவர்களுக்கு) இராச்சிய பாகத்தை அளித்திடாமல், வெம்சமர் பொர - (அவர்களுடன்) கொடிய போரைச் செய்தற்கு, நாடினை எனின் - விருப்பங்கொண்டாயானால், நாளை - நாளைக்கு, (யுத்தகளத்தில்), அருச்சுனற்கு எதிர் - அருச்சுனனுக்கு எதிராக, கோடு மன்னுவில் குனிக்க வல்லவர் - வளைவுபொருந்தின வில்லை (ப்போர் செய்தற்கு) வளைக்கவல்லவர், எவர் - (இந்தப்பக்கத்தில்) யாவர்உளர்? (எவருமில்லை யன்றோ?) என்று - உறுதிகள் உரைத்தனன் - நன்மையைத் தரும் வார்த்தைகளைக் கூறினான்; (எ - று.) - அன்றே - ஈற்றசை. துரோணகிருபர்துரியோதனனிடம் கூறியதுபோலவே வீடுமனும் தன் கருத்தைத் திருதராட்டிரனிடம் தெரிவித்தனனென்க. இங்கே, வெகுளி, திருதராட்டிரனும் துரியோதனனும் பாண்டவர் திறத்தில் அநீதியை நடத்தலால் வீடுமனுக்கு உண்டாயிற்று. அறுதி - வரையறுத்தல், பீஷ்மனது தம்பியான விசித்திரவீரியனது புத்திரனான திருதராட்டிரனை 'தனயன்' என்றது - அவனை வளர்த்தவன் வீடுமனாதலாலும், பெரிய தந்தையெனப்படுவானாதலாலும், தந்தைக்கு உள்ள அவ்வளவு அன்பு இவனுக்கு அவனிடம் இருக்குமாதலாலு மென்க. பாண்டவரை 'நின்புதல்வர்' எனத் திருதராட்டிரகுமாரராக அபேதப்படுத்திக் கூறியதற்குங் காரணம் இதுவே. காலமோ, ஓ - உயர்வு சிறப்பு; அது அவ்வனவாச அஜ்ஞாத வாசங்களின் கழிதற்கருமையை விளக்கும். கழிந்தன்று - உடன்பாட்டு ஒன்றன்பால் வினைமுற்று; நாளை - எதிர்காலங் குறிப்பதொரு இடைச்சொல்; இனி, விரைவில் என்றபடி. கோடு - வளைவு; முதனிலைத்தொழிற்பெயர். இனி கோடு - வினைத்தொகையாய், வளைந்த உறுதிபெற்ற வில்லுமாம், அர்ச்சுனன் - வெண்ணிற முடையவன் என்பது பொருள். இது முதலில் இந்நிறமுடைய கார்த்தவீரிய மகாராசனுக்குப் பெயராயிருந்தது. பின்பு அவனைப் |