பக்கம் எண் :

படையெழுச்சிச் சருக்கம் 303

     (இ - ள்.) 'முந்து -முன்பக்கத்திலே, அரவு உயர்த்தோன் - பாம்புக்
கொடியை உயர எடுத்துள்ள துரியோதனனது, ஓலை - திருமுகத்தை, முடி
உடை அரசர் - கிரீடத்தையுடையவராய் அரசாளும் இராசாக்கள், காண்க -
காண்பாராக;- வெம் திறல் ஐவரோடும் - கொடிய வலிமையையுடைய
பஞ்சபாண்டவருடனே, (நமக்கு), வெம் சமர் விளைந்தது - கொடிய யுத்தஞ்
செய்ய நேர்ந்தது; (ஆதலால்), தம் தம கிளைஞரோடும் - தங்கள்
தங்களுடையசுற்றத்தாரோடும், சாதுரங்கத்தினோடும் - சதுரங்கசேனையோடும்,
வந்தவர்தமக்கே - (நமக்குத்துணையாக) வந்த அரசர்களுக்கே, வாழ்வு
முழுதும் -எல்லா வாழ்க்கைகளும் (உண்டு) [பிறர்க்கில்லை],' என்று எழுதி -,
விட்டான் -(அப்பத்திரிகைகளைத் தூதர்கள் மூலமாக எல்லா
அரசர்களுக்கும்)அனுப்பினான்; (எ - று.)

    இங்ஙனம் எழுதியதனால், துணை வேண்டும் பொழுதும் வணங்குத
லில்லாது மிடுக்குடன் நிற்கிற துரியோதனனது செருக்கு விளங்கும்.  முந்து -
இடப்பொருளுணர நின்ற இடைச்சொல்: இனி, வினைத்தொகையாகக் கொண்டு,
சிறந்த எனினுமாம்.  பிறருடைய உதவி தனக்கு அவசியம்
வேண்டுவதென்றற்கு, 'வெந்திறலைவர்' என்றான்.  அம்மா -
வியப்பிடைச்சொல்; எல்லா வலிமைகளையுமுடையராய் அரசாட்சிசெய்கிற
நம்மோடு அரசிழந்த பாண்டவர் படைதிரட்டிப் போர்செய்யவரலாயிற்றே
என்றஅதிசயம் பற்றியது.  தாம்தாம் என்ற அடுக்கு முதல் குறுகி, வருமொழி
பன்மையாயிருக்கையில் வருதற்குரிய அ என்னும் ஆறனுருபை ஏற்றது.
சாதுரங்கம் - யானை முதலிய நான்கு அங்கங்கள்; சதுரங்கமென்பதன்
விகாரம்."முழுதென் கிளவி யெஞ்சாப் பொருட்டே" என்ற தொல்காப்பியத்து
உரிச்சொல்லியற் சூத்திரத்தால், முழுது என்பது - எஞ்சாமைப்
பொருளுணர்த்துவதோர் உரிச்சொல்.  முரணுடையரசர் என்றும்,
தந்தமாக்கிளைகள் என்றும் பாடம்.

    இதுமுதல் மேல் களப்பலியூட்டு சருக்கம் முடிகிறவரையில் இருபத்து
நான்கு கவிகள் - பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும் விளச்சீர்களும்,
மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட அறுசீராசிரிய
விருத்தங்கள்; இவற்றில் மூன்று ஆறாஞ் சீர்கள் தேமாச்சீர்களாகவே
நிற்கும்.                                                 (338)

15.-இதுமுதல் ஏழுகவிகள் -பலதேசத்தரசர்கள் வந்து
திரளுதலைக் கூறும்.

மித்திரரானமன்னர்விறலுடைத்துணைவரோடும்
புத்திரரோடுந்தத்தம்போர்புரிசேனையோடுஞ்
சத்திரநிழல்விடாததன்மையராகிச்சூழ
மத்திரபதியும்வென்றிமருகருக்காகவந்தான்.

இதுவும், மேற்கவியும் - ஒருதொடர்.

     இவற்றால், சல்லியன் துரியோதனனுக்குவஞ்சனைவழியால்
துணைவனாய்விட்ட செய்தியைக் கூறுகிறார்.