4-பாண்டவர் அதுகேட்டுவருந்துதல். தருமனுந்தம்பிமாருஞ்சாற்றியமாற்றங்கேட்டே யுருமெறிபுயங்கம்போலவுள்ளழிந்துள்ளாய்நின்ற கருமுகில்வண்ணன்பாதகமலத்தில்வீழ்ந்துவாழ்வும் பொருமுனைவயமும்வேண்டேம்பொன்றுதலமையுமென்றார். |
(இ - ள்.) (அப்பொழுது), தருமனும்-, தம்பிமாரும்- (அவனது) தம்பியராகியவீமன்முதலிய நால்வரும், சாற்றிய மாற்றம் கேட்டே-(கண்ணன்) கூறியஅவ்வார்த்தையைக் கேட்டமாத்திரத்திலே, உரும் எறி புயங்கம் போல- இடிவிழப்பெற்ற பாம்புபோல, உள் அழிந்து-மனமகிழ்ந்து, உள் ஆய் நின்ற கருமுகில் வண்ணன் பாத கமலத்தில் வீழ்ந்து - எல்லாப் பொருள்களுள்ளும் வியாபித்து மறைந்து நின்ற காளமேகம்போலும் கரிய நிறத்தையுடைய அக் கண்ணபிரானது திருவடித்தாமரைமலர்களிலேவிழுந்துநமஸ்கரித்து, '(இனி நாங்கள்), வாழ்வும் பொரு முனை வயமும் வேண்டேம்-செல்வ வாழ்க்கையையும் போர்க்களத்து வெற்றியையும் விரும்பமாட்டோம்; பொன்றுதல் அமையும் - (நாங்கள்) இறத்தலே தகுதி', என்றார் - என்று கூறினார்கள்; (எ - று.) உன்னைக்கொன்று பலிகொடுத்தபின் அதனால்வரும் வாழ்வும் வெற்றியும் எங்களுக்கு வேண்டா வென்றார். இங்ஙனங்கூறினது, கண்ணனை அவர்கள் தம் உயிராகப் பரவித்திருந்த மிக்க அன்புடைமையா லென்க. புயங்கம்- புஜங்கமென்பதன் திரிபு; இதற்கு-(கால்களில்லாமையால்) மார்பினால் ஊர்ந்து செல்வதென்றும், வக்கிரகதியாய்ச் செல்வதென்றும் பொருள்; புஜம் - வக்கிரம்: புஜமென்னுந் தோளின் பெயர், மார்புக்கு இலக்கணையாம். இடியோசை கேட்ட மாத்திரத்திற் பாம்புகள் அஞ்சி யொடுங்கியழியும் என்பது, நூற்றுணிபு, "விரிநிற நாகம் விடருளதேனும், உருமின்கடுஞ் சினஞ் சேணின்று முட்கும்" என நாலடியாரிலும் காண்க. உள் - உள்ளிடம்; அகத்துறுப்பான மனத்துக்கு இடவாகுபெயர். சரீரத்திலுள்ள சீவான்மா இன்றியமையாததாய் மறைந்துநின்று அதனைக் கொண்டு தொழில் களையெல்லாம் நடத்துதல்போல, சர்வாந்தரியாமியாய்ப் பரமாத்மா எல்லாப் பொருள்களினுள்ளும் மறைந்து நின்று தொழில் நடத்துதலால், 'உள்ளாய் நின்ற' என விசேடித்தது; "எள்ளு மெண்ணெயும்போல், நீங்கா துலகத் துயிர்க்குயிராகி" எனத் திருவரங்கத்து மாலையிலும், "திடவிசும் பெரிவளி நீர் நிலமிவைமிசைப், படர்பொருள் முழுவதும் மாயவை யவைதொறும், உடன்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்" எனத் திருவாய்மொழியிலும் வருதல் காண்க. இனி, வண்ணம் என்பதற்கு - குணமென்று பொருள் கொண்டால், தண்மையும் கைம்மாறு கருதாது கருணைமழை பொழிதலுமாகிய இக்குணங்களிற் கருமுகிலையொப்பவன் கண்ணனென்க. பாதகமலம் - முன்பின்னாகத் தொக்குவந்த உவமைத்தொகை: வடநூல் முடிபு; பாதமாகிய கமலமென உருவகமாக்கி யுரைத்தற்கு இங்கே இயைபின்று. (357) |