பக்கம் எண் :

களப்பலியூட்டு சருக்கம் 325

'வீரன்கொய்து கொடுத்தனன்' என்றார்.  நல்கி - நல்கவென்னுஞ்
செயவெனெச்சத்தின் திரிபு; செய்தெனெச்சம் வேறு கருத்தாவின்
வினையைக்கொண்டு முடிதற்கு ஏலாதாதலால், இங்குப் பாண்டவர்
வினையாகியசென்றார் என்பதைக் கொண்டு முடியும்.  காளி - துர்க்கை:
பார்வதியின்அம்சமான பெண்தெய்வம்.  காளியென்னுஞ் சொல்லுக்குக்
கருநிறமுடையவளென்று பொருள்; காளம் - கருமை.  தெவ்வரை ஒளித்து -
தெவ்வர்க்கு ஒளித்து என உருபுமயக்கமாகக்கொள்க.  மெய் வரு - வடிவம்
பொருந்தி விளங்குகிற என்றுமாம்.  இவ்வடைமொழியை வீரனுக்குக் கூட்டி,
சத்தியந்தவறாத இராவானெனினும் அமையும்.  நிலையில்லாமையாற்
பொய்யாகிய உடம்பை மெய்யென்பது - மங்கலவழக்கு.  என்ப என்னும்
அசையைச் சீவகசிந்தாமணியுரையில் "கிளந்த வல்ல வேறுபிற தோன்றினுங்,
கிளந்தவற்றியலானுணர்ந்தனர் கொளலே" என்னுந்தொல்காப்பியப்
புறனடைச்சூத்திரத்தாற் கொள்க என்பர் நச்சினார்க்கினியர்.         (360)

8.-பாண்டவர் மற்றும்சிலபலிகளிட்டு வரம் வேண்டி வருதல்.

ஆண்டகைகன்னிமுன்னரவயவமனைத்துமீந்து
காண்டகமலர்ந்ததீபமெனமுகங்கவினநின்றான்
பாண்டவர்யாமளத்தின்படிபகடாதியாக
வேண்டியபலிகளீந்துவென்றியும்வேண்டிமீண்டார்.

     (இ -ள்.) ஆண் தகை - ஆண்மைக்குணத்தை யுடைய இராவான்,
கன்னி முன்னர் - காளியின் முன்னிலையில், அவயவம் அனைத்தும் ஈந்து-
உறுப்புக்களையெல்லாம் அறுத்துப் பலிகொடுத்து, காண்தக மலர்ந்த தீபம்
எனமுகம் கவின - (யாவரும்) காணத்தகுமாறு (அழகியதாய்) விளங்குகிற
விளக்குப்போலத் தன் முகம் ஒளிபெற்று விளங்க, நின்றான் - (சிறிதுந்
துயரமின்றி மகிழ்ந்து) நின்றான்; (அதன்பின்), பாண்டவர் - பாண்டு குமாரர்
ஐவரும், யாமளத்தின்படி - யாமளநூல் முறைமைப்படி, பகடு ஆதி ஆக -
யானை முதலாக, வேண்டிய பலிகள் ஈந்து - இன்றியமையாத பலிகளைக்
கொடுத்து, வென்றியும் வேண்டி - (தமது) சயத்தையும் பிரார்த்தித்து, மீண்டார்
- திரும்பினார்கள்; (எ - று.)

    கீழ்க்கவிகளின் பின்னிரண்டடிகளிற் கூறிய கருத்தையே இக்கவியின்
முன்னிரண்டடிகளில் மீண்டும் எடுத்து அநுவதித்துக்கூறியது, அப்பொழுது
அவன் சிறிதும் வருந்தாது முகமலர்ந்திருந்த சிறப்பை விளக்க
வேண்டியாதலின்,கூறியது கூறலாகாது.  'நீபமென' என்ற பாடத்துக்கு -
காண்டகம் - காட்டிலே,மலர்ந்த - பூத்த, நீபம் என - கடப்பமரம் போல
வென்க; அதன் மலர்கள்மிக்க செந்நிறமாய் எங்கும் விளங்குதல் போல,
இவனுடம்பு முழுவதும்இரத்தப்பெருக்காற் சிவந்து நிற்க வென்றவாறு.
யாமளையென்று காளிக்குப்பெயராதலால், யாமளமென்பது - அவளுக்குப்
பலி கொடுத்தல்முதலியவற்றைக் கூறும் நூலைக் குறிக்கும்:  அது