பக்கம் எண் :

332பாரதம்உத்தியோக பருவம்

யுள்ளமாணிக்கங்களின் கூட்டமெல்லாம் மிகப் பொடியாகும்படி, உடன்
நடப்பன - விரைந்து செல்வன; (எ - று.)

    முன்னிரண்டடி - உவமையணி.  படப்பட - அடுக்குகள், மிகுதிப்
பொருளன.  கடி - பலபொருளுணர்த்தும் உரிச்சொல்; "கடியென் கிளவி
காப்பே கூர்மை, விரையே விளக்க மச்சஞ் சிறப்பே, விரைவே மிகுதி
புதுமையார்த்தல், வரைவே மன்றல் கரிப்பினாகும்" என்பது நன்னூல்.
நெடுங்கடி - மிக்க தூரத்துஞ் சென்றொலிக்கும் ஓசை.  இனி, கடியென்பதைக்
கடிப்பு என்பதன் விகார மெனக்கொண்டு, பெரிய குறுந்தடி யெனினும்
அமையும்.  உரல் - யானைக்காலுக்கு, வடிவாலும் வலிமையாலும் உவமம்:
"உரற்கால் யானை" என்றார் முன்னோரும்.  இனி கறைகள்போல் நடப்பன
என இயைத்து, கறுத்த இருட்டொகுதிபோல நடப்பன வென்று
உரைப்பாருமுளர்.  பின்னிரண்டடிகளில் யானைகள் அடிவைக்கும்
வன்மையால் கீழுள்ள நாகர்களது தலைமணிகள் பொடியாகுமென்றது -
தொடர்புயர்வுநவிற்சியணி.உடன் நடப்பன -  ஒன்றோடொன்று
தொடர்ச்சியாக நடப்பன எனவுமாம்.  யானைகளுக்கு முகத்திற்
செம்புள்ளிகளிருத்தல், உத்தமவிலக்கணம்:  "தீயுமிழ் சிறுகணுஞ்
செம்புகருமுடைத்தாய்" எனப் பிங்கலந்தையிலுங் காண்க.
"மதம்பொழியாழியினளவும் புகரா லழகெய்தி," "செம்புகர்பட்டின் தொழிலிற்
பயில்கிற்பது" என்பர் மேற் பதினாறாம்போர்ச் சருக்கத்தும்.  கரி -
கரத்தையுடையது: கரம் - கை: இங்கே துதிக்கை: இதற்குக்
கருநிறத்தையுடையதெனப் பொருள் கூறலாகாது.  மேகமுங் கடலும்
யானைக்குஒலியினாலேயன்றி, கரியபெரிய வடிவத்தாலும், மதநீர்
வெள்ளத்தாலும்உவமையாம்.

    இதுமுதல் 15-ஆம் பாடல் வரையிலுள்ள செய்யுள்கள், தனதனத்தன
தனதனத்தன தனதனத்தன தனதனா என்ற சந்தக்குழிப்பைக்
கொண்டிருத்தலால் சந்தவிருத்தமெனற்கு ஏற்பன.                 (367)

7.-இது தேர் வருணனை.

உருண்மணித்திகிரியின்முனைப்படிலுயர்பொருப்பையுமுரகர்வா
ழிருநிலத்திடைபுதைபடப்படவெதிர்நடப்பனவிவுளியின்
குரதுகட்கொடுகலகமிட்டணிகொடிநிரைத்துகில்கொடுபொலந்
தருநிலத்தவர்விழிதுடைப்பனசரதமிப்படியிரதமே.

     (இ -ள்.) இரதம் - தேர்கள்,- உருள் மணி திகிரியின் முனை படில் -
உருண்டு செல்லும் அழகிய சக்கரங்களின் நுனிபட்டால், உயர் பொருப்பையும்
- உயர்ந்த மலைகளையும், உரகர் வாழ் இரு நிலத்திடை - நாகர்கள் வாழும்
பெரிய பாதாளலோகத்திலே, புதை படபட - நன்றாகப் புதைந்தழுந்தும்படி,
எதிர்நடப்பன - எதிரே செல்லுந் தன்மையன; இவுளியின் - (தம்மிற் கட்டிய)
குதிரைகளினுடைய, குரம் துகள் கொடு - காற்குளம்புகளால் எழுப்பப்பட்ட
தூளிகளால், கலகம் இட்டு - (மேலுள்ளதேவர்களோடு) போரைச் செய்து,
அணி கொடி நிரைதுகில் கொடு - (தம்மீது கட்டியுள்ள)