பக்கம் எண் :

அணிவகுப்புச் சருக்கம் 343

    'களப்பலி கொடாமலே சேனைகளை வகுத்துப் போர்க்குஎழுக'
என்றனன் துரியோதனனென்க.  கொதி - முதனிலைத்தொழிற்பெயர்.
நெஞ்சின் வலி, மனத்து வலி - மனோபலம்.  அஞ்சுபு - செய்புஎன்னும்
வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம்.  நமக்கு என்பதை மத்திமதீபமாக
அஞ்சுபுஎன்பதனோடுங் கூட்டுக.  ஒருவர் என்பதன் இறுதியில்
இழிவுசிறப்பும்மை விகாரத்தால் தொக்கது.  நம் - முன்னிலையை
உளப்படுத்திய தன்மைப்பன்மை:  வீடுமனைக் கூட்டும்.  அசைவு - சலனம்;
கலக்கமென்றபடி.  அநீகிநி - அநீகங்களையுடையதென்று பொருள்; அநீகம் -
குதிரை முதலியவற்றின் கூட்டம்.            (379)

19.-இதுவும், மேற்கவியும்குளகம்: வீடுமன் அரசரைப்
பிரிக்கக் கர்ணன் மனஸ்தாபப்படுதல்.

ஆனதெனவீடுமனுமதிரதரின்மிக்கதனுவாசிரியனும்புதல்வனுந்
தானுமுயர்பூரிசரவாவுமிவர்சோமவரதத்தபகதத்தர்கள்வழா
மானமிகுதுன்மருடனற்றலைவர்மாரதரில்வன்கிருதபற்பவரசன்
ஞானகிருபன்சகுனிசல்லியசயத்திரதர்நன்சமரதத்தலைவரே.

     (இ -ள்.) (இவ்வாறு கூறின துரியோதனன் வார்த்தையைக்
கேட்டவுடனே), வீடுமனும் - பீஷ்மனும், ஆனது என - (அணி வகுப்பு
இப்பொழுதே) முடிந்த தென்று கூறி, மிக்க தனு ஆசிரியனும் - பாண்டவ
துரியோதனாதியர்க்குச் சிறந்த வில்வித்தையைப் போதித்த ஆசாரியனான
துரோணனும், புதல்வனும் - (அவனது) குமாரனான அசுவத்தாமனும், தானும்-
(வீடுமனாகிய) தானும், உயர் பூரிசரவாவும் - சிறந்த பூரிசிரவஸ் என்பவனும்,
இவர் - (ஆகிய) இவர்கள், அதிரதரில் (நல் தலைவர்) - அதிரதர்களில் நல்ல
சிரேஷ்டர்கள்; வர சோமதத்த பகதத்தர்கள் - சிறந்த சோமதத்தனும்
பகதத்தனும், வழா மானம் மிகு துன்மருடன் - (போரில்) தவறாத மானம்
மிகுந்த துர்மர்ஷணனென்பவனும் (ஆகிய இவர்), மா ரதரில் நல் தலைவர்-
மகாரதர்களில் சிறந்த சிரேஷ்டர்கள்; வல் கிருதபற்ப அரசன் - வலிய
கிருதவர்மராசனும், ஞானகிருபன் - நல்லறிவுடைய கிருபாசாரியனும், சகுனி -
சகுனியும், சல்லியன் சயத்திரதன் - சல்லியனும் ஜயத்ரதனும், (ஆகிய இவர்),
நல் சமரதர் தலைவர் - சிறந்த சமரத சிரேஷ்டர்கள்; (எ - று.)

    இப்பாட்டில் 'வீடுமனும்' என்ற எழுவாயும், 'ஆனதென' என்ற
வினையெச்சமும், அடுத்த கவியில் 'என இம்முறை வகுத்து உரை செய்தான்'
என்றதனோடு முடியும்.

     ஆனது -விரைவு பற்றி எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்ட
காலவழுவமைதி; துரிதத்தில்முடியு மென்றவாறு.  இனி, ஆய்விட்ட தென்று
கண்டோர் கூறும்படி யென்றும் உரைக்கலாம்.  வரசோமதத்த பகதத்தரென
மாறுக.  சோமதத்த பகதத்தர் - பலர்பாலால் முடிந்த உயர்திணை
யும்மைத்தொகை.  துர்மர்ஷணன் என்ற சொல்லுக்கு - (பகைவராற்) பொறுக்க
வொண்ணாதவ னென்று பொருள்.  கிருதபற்பன் - துரியோதனன்
கண்ணனைப்படைத்