ணம். பனைமரம் - துதிக்கைக்குத் திரண்டு உருண்டு நீண்ட வடிவத்தால் உவமம். 'பணைக்கை' என்ற பாடத்துக்கு - பருத்த கையென்க. 'மிசை' என்பதை மத்திமதீபமாக, 'எற்றி' என்பதனோடும் இயைக்கலாம்; "நாணிரைத்தநேக தாரகா கணமா நவமணியுடனவ விதங்கொள், "கோணிரைத்து" என இந்நூற் சிறப்புப்பாயிரத்தும் நட்சத்திரங்கள் நவரத்தினங்களையொக்கு மெனக் கூறியவாறு காண்க. கோபமிகுதியாற் கண்மிகச் சிவந்து கொடுமையாகத் தோன்றுதலை 'விழிவழி நெருப்புருகிவழிய' என்றது. மதியத்தின் வகிர் [பிறைச்சந்திரன்] - தந்தத்துக்கு, வெண்மை யொளிகளாலும் வளைவாலும் ஒப்பாம், மகரிகை- யானைக் கொம்பிற்பூண்; சுறாமீனின் திறந்த வாய்வடிவமாகச் செய்யப் படுவது; மகரமென்பதனடியாகப் பிறந்த காரணப்பெயர்; மகரம் - சுறாமீ்ன். இனி, மருப்பினிடை மகரிகை தரித்த - இரண்டு தந்தங்களின் நடுவிலே (துதிக்கைமேலே) மகரிகாபத்திரத்தைத் தரித்தனவென்றும் பொருள் கொள்ளலாம்' அது - சுறாமீன் வடிவமாக எழுதப்படும் ரேகை, 'பனைக் கைகொடு' என்பதை 'உடுவைக்கவர்வ' என்பதனோடுங் கூட்டுக. (383) 23.-இது - அசுவ வருணனை. யவனசவனத்தினிடைவளர்வனகத்தினொடுமிரவிபுரவிக்குநிகர்வ, புவனதலமுற்றுமுடன்வளையவொரிமைப்பொழுதில்வருவனபுறப் புணரியைக், கவனமொடெழுப்பிவிடுதுகள் கொடுதுகிர்ப்பவிரைகதிகளின் விதத்தைமொழியிற், பவனகதியைத்தொடர்வபரிமளவுயிர்ப்புடையபல வகைநிறத்தபரிமா. |
(இந்நூலாசிரியர் இங்குத் தேருக்கு முன் குதிரையை நிறுத்தினது, சேனையின் அங்கங்கள் நான்கனுள் தான் ஒன்றாக இருப்பது மாத்திரமே யன்றிமற்றோரங்கமாகிய நிலைத்திணைப் பொருளான தேரை நடத்துவதாயு மிருக்குஞ்சிறப்புப்பற்றி யெனக்காண்க.)
(இ -ள்.) பரிமா - குதிரைகள்,- யவனம் சம் வனத்தின் இடைவளர்வன - யவனதேசத்தி லுண்டான காடுகளின் இடையிலே வளருந்தன்மையன; கதத்தினொடும் - (போரில்) உக்கிரமான தன்மையோடு (கூடி), இரவி புரவிக்கு நிகர்வ - சூரியனது தேர்க்குதிரைக்கு ஒப்பாவன: ஓர் இமைபொழுதில் - ஒரு மாத்திரைப் பொழுதினுள்ளே, புவன தலம் முற்றும் - பூலோகத்தினிடம் முழுவதும், உடன் வளைய வருவன - விசைவிற் சுற்றிவருந் தன்மையன: கவனமொடு எழுப்பி விடு துகள்கொடு - (தமது) நடைவேகத்தால் மேலே கிளப்பி விடப்பட்ட புழுதிகளால், புறம் புணரியை - இவ்வண்டத்துக்கு வெளியிலுள்ள பெரும்புறக்கடலையும், துகிர்ப்ப - தூர்க்குந் தன்மையன; விரை கதிகளின் விதத்தைமொழியின் - வேகமான நடைகளின் தன்மையைச் சொல்லப்புக்கால், பவனம் கதியை தொடர்வ - காற்றின் சஞ்சாரத்தைப் பின்தொடருந் தன்மையன; பரிமளம் உயிர்ப்பு உடைய - நல்மணத்தையுடைய சுவாசத்தையுடையன; பலவகை நிறத்த - அநேகவித வர்ண முடையன; (எ -று.) 'பலமலர் நிறத்த' என்றும் பாடம். |