பக்கம் எண் :

அணிவகுப்புச் சருக்கம் 355

    இதில், அவரவர்க்குப் போர்த்திறத்து உள்ள தாரதமியம் [ஏற்றத்தாழ்வு]
விளங்குவது காண்க; உபநிஷதம் - வேதத்தின் சாரமான பாகம்; வேதத்தின்
முடிவென்றும், பிரமகாண்டமென்றுங் கூறப்படும்; இது - பகவானைப்பற்றிக்
கூறுவது.  புரந்தரன் - (பகைவரது) பட்டணங்களை (அல்லது) உடம்புகளை
அழிப்பவன்; புரம் - ஊரும் உடலுமாம்.  (393)

33.-எதிர்ப்பக்கத்துச்சேனையிலுள்ளவர் யாவரும் தனக்கு
நெருங்கிய உறவினராயிருந்தது கண்டு அருச்சுனன்
கலங்குதல்.

யானையொடுதேர்புரவியாளிவையநேகவிதமெண்ணரிய
                                தானையுடனே,
சேனைமுதலாய்முனையினின்றருள்பிதாமகனுமற்றுளசெழுங்
                                     குரவருந்,
தானைநெடுவாரியிடைதேரிடையருக்கனென நின்றதுரியோ
                                  தனனும்வான்,
மீனைநிகர்கேளிருமணிந்தநிலைகண்டுருகிவிபுதபதி மைந்தன்
                                  மொழிவான்.

     (இ -ள்.) யானையொடு - யானைகளும், தேர் - தேர்களும், புரவி -
குதிரைகளும், ஆள் - காலாட்களும், இவை - என்னும் இவற்றாலாகிய,
அநேகம் விதம் - பலவகைப்பட்ட, எண் அரிய - அளவிட வொண்ணாத,
தானையுடனே - சேனைகளுடனே, சேனை முதல் ஆய் முனையில் நின்றருள்
பிதாமகனும் - சேனைத் தலைவனாய்ச் சேனாமுகத்தில் நின்றருள்கிற
(தன்பெரிய) பாட்டனான வீடுமனும், மற்றுமுள செழு குரவரும் -
(துரோணாசாரியன் கிருபாசாரியன் அசுவத்தாமன் முதலாக) மற்றுமுள்ள
சிறந்தபெரியோர்களும், தானை நெடுவாரியிடை தேரிடை அருக்கன் என
நின்றதுரியோதனனும் - சேனையாகிய பெரிய கடலிலே தேர்மீது
சூரியன்போலநின்ற துரியோதனனும், வான் மீனை நிகர் கேளிரும் -
நட்சத்திரங்களையொத்த [அநேகரான] (சல்லியன் துச்சாதனன் விகர்ணன்
சயத்திரதன் சகுனி முதலான) உறவினர்களும், அணிந்த - வரிசை வரிசையாக
நின்ற, நிலை - நிலையை, கண்டு - (எதிரிற்) பார்த்து, விபுதபதி மைந்தன் -
தேவர்களுக்குத் தலைவனாகிய இந்திரனது புத்திரனான அருச்சுனன், உருகி-
(இவர்களோடு எங்ஙனம் போர் செய்வதென்று) மனங்கரைந்து, மொழிவான்-
(கண்ணனை நோக்கிக்) கூறுவான்; (எ - று.)

    எதிர்வந்து நின்ற வீரர்யாவரும் பாட்டனும் அண்ணன் தம்பி மாரும்
மாமனும் மற்ற உறவினரும் கல்விபயிற்றிய ஆசாரியரும் நண்பர்களுமாக
விருக்கக் கண்டு அருச்சுனன் மனம் மாறிக் கூறுகிறான்.  குரவர் - குரு
என்பதன் பன்மையான, குரவ: என்னுஞ்சொல் ஈறு திரிந்தது, வாரி - நீர்;
கடலுக்கு இலக்கணை.  அளவிறந்த பரப்பும் ஆரவாரமும் அணியணியாக
வருதலும் அச்சந்தருதலும் பற்றிக் கடலைச் சேனைக்கும், கடலினிடையில்
தேரின் மீதுசிறந்துவிளங்குதல் பற்றிச் சூரியனைத் துரியோதனனுக்கும்,
அளவிறந்து நெருங்கிவிளங்குதல் பற்றி நட்சத்திரங்களைச் சுற்றத்தார்க்கும்
உவமை கூறினார்.                                        (394)