முதலியன -பகைவர்களுக்கு அச்சஞ்செய்து ஆயுதகோடியிலும், அடியார்களுக்கு அழகு செய்து ஆபரணகோடியிலும் அமைதலால், 'நேமிப்பொன்திகழ்படை' என்றார். பொன் திகழ்தல் - பொன் போல விளங்குதலுமாம். பொய்த்துயிற் பாயல் - 'பொய்யுறக்கங்கொண்டபிரான்' என்றார் பெருந்தேவனாரும். உரை செய்தல் - சொல்லுதலைச்செய்தல்; என்றது, சொல்லுதலை முன்பு தூதன் மூலமாகச் செய்திதெரிவியாமை, பின்புவாயில் காவலாளராலறிவியாமை, அதன்பின்பு தான் நேரிலெழுப்பாமை இவையெல்லாவற்றையும் அடக்கி, 'உரைசெயாதென்' என்றார். கீழ்க் களங்கமின்றி அருச்சுனனுக்கு முகமலர்ந்து அருள் செய்ததனினும் வேறுபாடு விளங்க, 'இன்சொலாலுவகை செய்தான்' என்றார்; துரியோதனனுக்கு மகிழ்ச்சியுண்டாக்கினது, சொல் மாத்திரத்தா லென்க. (32) கிருஷ்ணன் இருவரையும் வந்தகாரியத்தை வினாவ, இருவரும் தெரிவித்தல். 12. | இருவிரும்வந்தவாறென்னியம்புதிரென்றுவாச மருவிரிதுளபமாலைமரகதவண்ணன்கேட்பச் செருவினீயெமக்குவெம்போர்செய்துணையாகவேண்டும் பொருவிலோயென்றுகொண்டவ்விருவரும்புகன்றகாலை. |
இதுவும், மேற்கவியும் - குளகம். (இ -ள்.) (பின்பு இருவரையும் நோக்கி), வாசம் - பரிமளத்தையும், மரு - தேனையுமுடைய, விரி - மலர்ந்த, துளபம் மாலை - திருத்துழாய் மாலையையுடைய, மரகதம் வண்ணன் - மரகத ரத்தினம்போலும் திருநிறத்தையுடைய ஸ்ரீ கிருஷ்ணன், 'இருவிரும் வந்த ஆறு என் இயம்புதிர்' என்று கேட்ப - நீங்கள் இரண்டுபேரும் வந்த காரியம் யாது? கூறுவீர்' என்று (பொதுப்பட) வினாவ - அ இருவரும் - துரியோதனனும் அருச்சுனனும், 'பொருவு இலோய் - ஒப்பில்லாதவனே! நீ-, செருவில் - (இனி நிகழும்) போரில், எமக்கு-, வெம் போர் செய் துணை ஆகவேண்டும் - கொடிய போரைச்செய்யும் உதவியாகவேண்டும்,' என்று கொண்டு புகன்ற காலை - என்று (ஒருபடிப்படச்) சொன்னபொழுதில் - (எ - று.)- 'சொன்னான்' என, மேற்கவியில் முடியும். ஒப்பில்லாமைகூறவே, உயர்வில்லாமை தானே விளங்கும். இனி, பொரு விலோய், எனப் பிரித்து. வினைத்தொகையாக, போர் செய்யும் வில்லையுடையவனே யென்றுங் கொள்ளலாம். திருமாலின் வில்லுக்குச் சார்ங்கமென்று பெயர். கொண்டு - அசை; 'என்றுகொண்டினையகூறி' எனக் கம்பராமாயணத்திலுங் காண்க: இது அசையாதலைப் புறனடைச் சூத்திரத்தாற் கொள்க: இனி, என்றுகொண்டு - என்று கருத்தமைத்து என்றலுமொன்று. இருவரும் பொருவிலோய் என விளித்தது, தம்மின் வலியனாதலை நோக்கி. துரியோதனன் வார்த்தையில் எமக்கு - செருக்குப்பற்றிய உயர்வுத்தன்மைப்பன்மையும், ஆகவேண்டும் - கட்டளைப்பொருள் வியங்கோளு மாகலாம். வாசம் மரு - மிகுந்த வாசனையென |