வர்மா -யதுகுலத்தில் இருதிகன்என்பவனது குமாரன்; இவனைக் கிருஷ்ணன் துரியோதனனுக்குப் படைத்துணையாகத் தான் அனுப்பும் யாதவசேனைக்குத் தலைவனாக்கி அனுப்புகிறான். வாய்மை - வாயின்தன்மை; அது - வாயினாற் சொல்லுஞ் சொல்லுக்குக் கருவியாகுபெயர். மாயவன் என்பதற்கு - மாயைபோலக் கருநிறமுடையவனென்றும், வியக்கத்தக்க குணந்தொழில்களை யுடையவனென்றுங் கருத்து உரைப்பர். வணங்காமுடிமன்னனாதலால், விநய மொன்றுங் கருதலானான். இனி, வினயமொன்றும் கருதலான் என்பதற்கு - கண்ணனது சூதுசிறிதையும் அறியாதவனாய் என்றும் உரைக்கலாம்; வினயம் - வஞ்சனை. (39) துரியோதனன் பலராமனையாதவருடன் போர்த்துணையாக வருமாறு அழைத்துவிட்டுச் செல்லுதல். 19. | கண்ணனங்கருளிச்செய்தகட்டுரைப்படியேசங்க வண்ணனுக்கிளவல்சொன்னமாற்றமுமரசன்சாற்றி எண்ணருந்தொகைகொள்சேனையாதவகுமரரோடே அண்ணலேவருகென்றோதியத்தினாபுரிபுக்கானே. |
(இ -ள்.) (கண்டு), அரசன் - துரியோதனராசன், கண்ணன் அங்கு அருளிச்செய்த கட்டுரை படியே - கிருஷ்ணமூர்த்தி அப்பொழுது சொல்லியருளின உறுதிச்சொல்லின்படியே, - சங்கம் வண்ணனுக்கு - சங்குபோல வெளுத்த நிறத்தையுடைய பலராமனுக்கு, இளவல் சொன்ன மாற்றமும் சாற்றி - (அவன்) தம்பியான கண்ணன் சொன்னவார்த்தையைச் சொல்லுதலுஞ் செய்து, 'அண்ணலே - பெருமையிற்சிறந்தவனே! எண் அரு தொகைகொள் சேனை யாதவ குமரரோடே - எண்ணியளவிடுதற் கருமையான பெருந்தொகையைக் கொண்ட யாதவசேனையோடும் யாதவகுமாரர்களோடும், வருக - (நீ என் பக்கல் போர்த்துணையாக) வருவாயாக', என்று ஓதி - என்று சொல்லி, அத்தினாபுரி புக்கான் - (தனது) அஸ்தினாபுரியைச் சேர்ந்தான்; (எ -று.) பெரியோர்கள்செய்யும் ஒவ்வொரு காரியமும் அருளோடு கூடிய தென்னுங் கருத்தால், இங்கு 'அருளிச்செய்த' என்றது; இனி துரியோதனன் பெருங்கூட்டத்தைத் தனக்குத் துணையாக அனுப்புவதைக் கண்ணன் அருளோடு செய்ததாகக் கருதினானென்பார், 'அருளிச்செய்த' என்றாருமாம். கட்டுரையென்றது, உள்ளே யடங்கிய கருத்து வெளித்தோன்றாதபடி நன்றாக அமைத்துச் சொல்லுஞ்சொல் என்றபடி. யாதவகுமரர் - கண்ணனுக்குப் பதினாயிரங் கோபஸ்திரீகளிடம் பிறந்த நாராயணகோபாலர்களும் பிறருமாம் படைத்துணையாக வரும்படி வேண்டுகின்றனனாதலின் அண்ணலேயென உயர்த்திக் கூறினான். அங்கு - அவ்விடத்தில் என்றுமாம். குமாரனென்னும் சொல்லுக்கு மன்மதனையுங் குற்சித ரூபமுடையவனாக்க வல்ல கட்டழகுடையவ னென்று பொருள். (40) |