பக்கம் எண் :

சஞ்சயன் தூது சருக்கம் 61

நெய்யையுடைய பெரு நெருப்பில் விழுந்தாற்போலஎன்றும் உரைப்பர்.  நிலை
- நிலைத்தல் என முதனிலைத் தொழிற்பெயரென்றாவது, நிற்றல் என ஐ விகுதி
பெற்ற தொழிற்பெயரென்றாவது கொள்க.  வாழ்தினம் - உயிர் உடம்போடு
கூடி வாழும் ஆயுள்நாள். விடபம் - மரக்கிளை, அதனையுடையது - விடபீ;
விடவிஎன வந்தது திரிபு.                                     (47)

7.

உற்றயோனிகடம்மிலுற்பவியாமன்மானுடவுற்பவம்
பெற்றுவாழுதலரிதுமற்றதுபெறினுமாயைசெய்பெருமயக்
கற்றஞானியராய்விளங்குதலரிதுவீடுறுமறிவுபின்
பற்றுமாறிஃதிங்குனக்கிவைபண்பினோடுபலித்தவே.

     (இ -ள்.) உற்ற - (எழுவகையாகப்) பொருந்தின, யோனிகள் தம்மில் -
பிறப்புக்களில், உற்பவியாமல் - (வேறொருபிறவியிற்) பிறவாமல், மானுட
உற்பவம் பெற்று - மனிதசன்மத்தையே யடைந்து, வாழுதல் - வாழ்வது,
அரிது- (உலகத்தில்) அருமையானது; அது பெறினும் - அந்த
மனிதப்பிறப்பையடைந்தாலும், மாயை செய் பெரு மயக்கு அற்ற ஞானியர்
ஆய் விளங்குதல் - மாயையினாலுண்டாக்கப்பட்ட பெரிய (அறியாமையென்கிற)
மயக்கம் நீங்கின தத்துவஞானமுடையவர்களாய் விளங்குவது, அரிது -
அருமையானது; இஃது - கீழ்க்கூறிய தவமானது, பின் வீடுஉறும் அறிவு பற்றும்
ஆறு - இவ்வுடம்பு நீங்கினபின் முத்தியைப்பெறுதற்குக் காரணமான
அத்தத்துவஞானம் உண்டாகும் வழியாம்; இங்கு இவை உனக்கு பண்பினோடு
பலித்த - இங்குக்கூறிய இம் மூன்றும் உனக்கு இயற்கையாகப் பலித்துள்ளன;
(எ - று.)

     மானுடராகவாழ்ச்சி, தத்துவஞானம், அந்தத் தத்துவ ஞானத்திற்குக்
காரணமான தவம் இம்மூன்றும் இயற்கையாகத் தருமபுத்திரனுக்குத்
தோன்றியுள்ளமையைச் சஞ்சயன் இதனாற் பாராட்டுகின்றான்.  பாண்டவர்க்குப்
பொதுவாக உள்ள நற்குணங்களைக் கூறிவிட்டு, அரசனாகுபவன்
தருமனேயாதலால், இனி, தருமனை நோக்கியே கூறுகின்றான்.  இம்மை மறுமை
வீடு என்னும் மூன்றனுள், வேண்டியதை வேண்டியவாறு முயன்று பெறுந்
தன்மை மக்கட் பிறப்புக்கு மாத்திரமே உள்ளதாதலாலும்.  தேவர் முதலிய
மற்றையெந்தப் பிறப்புக்கும் அப்படிப்பட்ட சிறப்பு இல்லை யாதலாலும்,
'மானுடவுற்பவம் பெற்று வாழுதலரிது' என்றது.  உறுப்புக் குறையாகப் பிறத்தல்,
பிறந்தும் அற்ப ஆயுளாய் அழிதல் இப்படிப்பட்ட குறைகளை ஒழித்தற்கு,
'பெற்று வாழுதல்' என்றார்.

    "அரியது கேட்கின் வரிவடிவேலோய், அரிதரிது மானிடராதலரிது,
மானிடராயினுங் கூன் குருடு செவிடு, பேடுநீங்கிப் பிறத்தலரிது, பேடு நீங்கிப்
பிறந்தகாலையும், ஞானமுங்கல்வியும் நயத்தலரிது, ஞானமுங் கல்வியும் நயந்த
காலையும், தானமுந்தவமுந்தான் செயலரிது, தானமுந்தவமுந்தான்
செய்வராயின், வானவர் நாடு வழி திறந்திடுமே" என்ற ஒளவையார்
பாடலையும், "அரிதாற் பெரிய யோனிகள் பிழைத்திவண் மானிடம் பெறலே",
"காமனன்னதோர் கழிவனப் பறிவொடுபெறினும், நாமநாற்கதி நவைதரு நெறிபல