நினையாதொழிக என்று பொருள். எண்ணல் -எதிர்மறை வியங்கோள். அகந்தை - அகங்காரம்; அதாவது - தானல்லாத உடம்பை யானென்றும், தன்னோடு இயைபில்லாத பொருளை எனதென்றும் கருதி, அவற்றினிடத்துச்செய்யும் அபிமானத்தை எனக்கொள்ளுதல் பொருந்தும்; எனவே, அகந்தையோடு - (நீங்காத) அபிமானத்துடனென்றபடி. (49) 9. | பராசரன்குலமாகினும்பெறுபயனிறுக்கிலர்பாரிலே துராசரன்பிலரென்சொலின்றுசுயோதனாதியர்கைக்கொளார் சராசரங்களனைத்துமாகியசுகனையேநிகர்தன்மையாய் நிராசர்நின்னளவிற்குறித்தவையுறுதியென்றினிநீகொளாய். |
(இ - ள்.) பராசரன் குலம் ஆகினும் -பராசர முனிவனது குலத்திலே பிறந்தவர்களாயிருந்தாலும், சுயோதன ஆதியர் - துரியோதனன் முதலியோர், பெறு பயன் - (இம்மனிதசன்மத்தாற்) பெறத்தகுந்த (நல்லொழுக்கமாகிய) பயனை, பாரிலே - இவ்வுலகத்திலே, இறுக்கிலர் - கடமையாகச் செய்துமுடித்தாரில்லை; துராசர் - கெட்ட பேராசையையுடையவர்கள், அன்பு இலர் - (உயிர்களிடத்துச்சிறிதும்) அன்பில்லாதவர்கள்; (ஆதலால்), என் சொல் இன்று கைக்கொளார் - எனது வார்த்தையை இப்பொழுது ஏற்றுக் கொள்கிறாரில்லை; சர அசரங்கள் அனைத்துமாகிய சுகனையே நிகர்தன்மையாய் - இயங்குதிணைப் பொருள்களும் நிலைத்திணைப்பொருள்களும் ஆகிய எல்லாவற்றின் சொரூபமான சுக முனிவனையே ஒத்த குணத்தையுடையவனே! நிராசர் - (பொருள்களிற்) பற்றில்லாத பெரியோர்கள், குறித்தவை - சித்தாந்தமாகக் கூறியுள்ள தத்துவ அருத்தங்களை, உறுதி என்று - (உயிருக்கு) நன்மையைத் தருவன என்று, இனி - இனிமேல், நின் அளவில் நீ கொளாய் - உன் மட்டில் நீ கொள்ளக்கடவாய்; (எ - று.)-'கொள்வாய்' என்றும்பாடம். தத்துவத்தை உள்ளபடி முழுதும் உணர்ந்தபராசர முனிவனது சிறந்த மரபில் தோன்றியும், இவர்கள் தாம் பொருள்களின் உண்மையைச் சிறிதும் உணர்ந்து ஒழுகாமை மாத்திரமேயன்றி, உணர்ந்தவர் சொன்னாலுங் கேட்டிலரென்னும் இகழ்ச்சிமிகுதிதோன்ற முதலிரண்டடிகளால் கூறினார்; துரியோதனாதியர் கேளாவிட்டாலும் நீயாயினுங் கேட்டு நடப்பது தகுதியென்பான், 'நின்னளவில் உறுதியென் றினிநீ கொளாய்' என்றார். வியாச குமாரனான சுகன் போலவே, வியாசகுலத்திற் பிறந்த நீயும் உடனே உலகப்பற்றையொழித்து உயர்பதம் பெற முயல்வது தகுதியென்பார். 'சுகனையே நிகர் தன்மையாய்' எனத் தருமனை விளித்தார்; தருமன் அறிவு ஒழுக்கங்களில் மிக்கவ னென்க. பயன் நிறுக்கிலர் எனப்பதம் பிரித்து நல்லொழுக்கமாகிய பெறத்தக்க பயனைச்செய்து நிலைநிறுத்துகின்றாரில்லை என்பாருமுளர். சுகமுனிவர், பிறந்தபொழுதேஇயற்கையிற் பற்றுக்களனைத்தையு மொழித்துப் பரம்பொருளை நோக்கித் தனியே சென்றதைக் கண்டு அவரது தந்தையான வியாசர் அவரது பிரிவைப் பொறுக்க |