அருச்சுனனுக்கு இராச்சியமில்லையாயினும் கீர்த்தியுண்டு; துரியோதனனுக்கு இராச்சியமிருந்தும் கீர்த்தியில்லை என்ற சிறப்பும் இழிவும் தோன்ற, 'பேர்படைத்த', 'பார்படைத்த' என்ற சொற்களால் அவரை முறையே விசேடித்தார். யாவரினுஞ்சிறந்த திருமால் தேரூர்தலாகிய இழிதொழிலை ஏற்றுக்கொண்டு தனது சௌலப்பியத்தைக் காட்டியருளுதற்குக் காரணமாதலால், கண்ணனுக்கு அருச்சுனனிடத்திலுள்ள நட்பு, 'சீர்படைத்த கேண்மை' எனப்பட்டது; அருச்சுனனுக்குத் தேரூர்தலை 'செறிந்தமால் பெறுஞ் சிறப்பு' எனக்கீழ் நிரைமீட்சிச்சருக்கத்திற் கூறியதும் காண்க. இதுமுதல் முப்பத்துமூன்று கவிகள் - பெரும்பாலும் ஈற்றுச்சீர் இரண்டும் மாச்சீரும், மற்றைநான்கும் காய்ச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட அறுசீராசிரிய விருத்தங்கள். (61) சஞ்சயன் சென்றபின்பு தருமன் கண்ணனைநோக்கிச் சொல்லத் தொடங்குதல். 2. | ஞானமன்பொ டினிதுரைத்து ஞானமுனியகன்றதற்பின்சாமபேத, தானதண்டமெனநிருபர்தரும முறைமையிற்புகலுந் தகுதிநோக்கித், தூநறுந்தண்டுளவோனைத் தூதுவிடுவதற்கெண்ணிச்சுனைகடோறு, மேனலந்தண்கிரிப் பெருந்தேனிறைக்குமெழிற்குருநாடனியம்புவானே. |
(இ - ள்.) ஞானம் - தத்துவஞானத்தைஅன்பொடு - அன்புடனே, இனிது - இனிமையாக, உரைத்து - (தருமனுக்குச்) சொல்லி, ஞானம் முனி - தத்துவஞானமுடைய சஞ்சயமுனிவன், அகன்றதன்பின் -புறப்பட்டுப்போன பின்பு,- ஏனல் - தினைப்பயிர்களையுடைய, அம் - அழகிய,தண் - குளிர்ச்சியான, கிரி - மலைகள், சுனைகள்தோறும் -சுனைகளிலெல்லாம், பெருந்தேன் நிறைக்கும் - (தம்மிடத்திலுள்ள மலர்களாலும் தேன்கூடுகளைக்கொண்டும்) மிகுதியான மதுவை நிறைக்கப்பெற்ற, எழில் - அழகிய, குருநாடன் - குருநாட்டையுடைவனான யுதிட்டிரன்,- சாம பேத தான தண்டம் என - சாமமும் பேதமும் தானமும் தண்டமும் என்று, நிருபர் தருமம் - இராச தருமத்திலே, முறைமையின் புகலும் - முறையே கூறப்படுகிற, தகுதி - (நால்வகை உபாயங்களின்) தன்மையை, நோக்கி - ஆலோசித்து, தூ நறுந்தண்துளவோனை தூது விடுவதற்கு எண்ணி - பரிசுத்த குணத்தையும் நல்வாசனையையும் குளிர்ச்சியையுமுடைய திருத்துழாய்மாலையை யுடையவனான கண்ணபிரானை (த் துரியோதனனிடம்) தூதாக அனுப்பும்படி நினைத்து, இயம்புவான் - கூறுபவனானான்; (எ - று.) - அதை, அடுத்த இரண்டு கவிகளிற் காண்க. அரசற்கு உரிய நான்கு உபாயங்களுள், சாமம் முதலில் உபயோகிக்கத்தக்கதும், மற்றவை அதன்பின் முறையே உபயோகிக்கத்தக்கவையுமாதலால், தருமன், முதலிற் சாமோபாயத்திலே நின்று, |