கண்ணனைநோக்கித் தருமன் கூறுதல். 3. | செஞ்சொன்முனிசஞ்சயனுக்கியாமுரைத்த கருமமு முன் சென்றகாலை, யஞ்சொன்முனிபுரோகிதனுக்கவனிசைத்த கருமமுநீ யறிதியன்றே, நஞ்சுதனைமிகவருந்தி நன்மருந்து மந்திரமும் விரைந்து நாடாது, எஞ்சினர்தங்களைப்போல விருக்குமதோ யார்மனத்துமிருக் குஞ்சோதீ. |
(இ - ள்.) யார்மனத்தும் இருக்கும்சோதீ - (நற்குணநற்செயல்களின் சிறப்பினாலும் புகழினாலும்) யாவர்மனத்திலும் வீற்றிருக்கின்ற பேரொளியுடையவனே!- செம் சொல் முனி சஞ்சயனுக்கு - நல்வார்த்தைகளை உபதேசித்த சஞ்சயமுனிவனுக்கு, யாம்உரைத்த கருமமும் - நாம் சொன்ன செய்தியையும், அம் சொல் முனி புரோகிதனுக்கு - அழகிய சொற்களைக் கூறும் புரோகிதனான உலூக முனிவனுக்கு, முன் சென்ற காலை - முன்னே (நமக்காகத்) தூதுசென்ற பொழுதில், அவன் இசைத்த கருமமும் - அத் துரியோதனன் சொன்ன செய்தியையும், (எல்லாவற்றையும்), நீ அறிதி அன்றே - நீ அறிவாயன்றோ? நஞ்சுதனை மிக அருந்தி - விஷத்தை மிகுதியாக உண்டு, நல் மருந்தும் மந்திரமும் விரைந்து நாடாது - (அவ்விஷத்தை யொழிக்கத்தக்க) சிறந்த மருந்துகளையும் சிறந்த மந்திரத்தையும் விரைவாக [உயிர் நீங்குவதற்குள்ளே] தேடாமல், எஞ்சினர் தங்களை போல - உயிரொடுங்குபவரைப் போல, இருக்கும் அது ஓ - (நாம் யாதொரு முயற்சியும் செய்யாது) இருப்பது தகுதியோ? (எ - று.)-இதுவும், அடுத்த கவியும் - ஒரு தொடர். "இன்றுபூசைபோல் இருந்துழியுரைக்கும் ஈது இகலதன்று இருவர்க்கும், துன்று பூசலிற் காணலாம் ஆண்மையும் தோள்வலிமையும்" என்றும், "எமதே பார், தங்கள் கானகம் தமது" என்றும் துரியோதனனும், "என்னறத்தில் நின்று தெவ்வரை யிருவிசும்பினி லேற்றினால், பின்னறத்தினில் நினைவுகூரும்" என்றுயானும், "பாரமான சுயோதனாதியரென்னும் நூறு பசுப் படுத்து" என்று வீமனும், "இவர்களில் பூமியாளுதல் அவர்களுக்கு அமருலகமேறுதல் புரிதவம்" என்று நீயும் கூறியதெல்லாம் உனக்குத் தெரியும்; இங்ஙனமிருக்க, இராச்சியத்தைப் பெறுதற்பொருட்டுத் தக்க உபாயத்தைச் செய்யாமலிருப்பது தகுதியன்று; அபாயத்திற்கே காரணமாம் என்று தருமன் கண்ணனை நோக்கிக் கூறினன் என்க. விரைவில் அதற்கு வேண்டிய மந்திராலோசனை செய்து முடிவு துணியவேண்டுமென்பது கருத்து. யாம்- நானும் நீயும் வீமனும் என்க. செஞ்சொல் - இதமான சொல். முனி சஞ்சயன், முனி புரோகிதன் - முன்பின்னாகத் தொக்கு வந்த இருபெயரொட்டுப்பண்புத்தொகை; இதில், பொதுப்பெயர் முன்னும், சிறப்புப்பெயர் பின்னும் நின்றவாறு காண்க. தூதலக்ஷணத்தின்படி சமயோசிதமாக ஆராய்ந்து ஒழுங்கான சொற்களை உரைக்கத்தக்கவனென்பார், 'அஞ்சொல் முனிபுரோகிதன்' என்றார். அன்றே - தேற்றம். பின்னிரண்டடியிற்கூறிய உவமை - அபாயத் |