திற்குக் காரணமான பகையை மிகமூட்டி அதனைஒழித்தற்கு ஏற்ற உபாயங்களைத் தேடாதிருத்தலை விளக்கும். நல் மருந்து - உயிர்தரும் மருந்து. மந்திரம் - விஷமந்திரம். ஓ - எதிர்மறை சோதீ, ஈறு நீண்டவிளி. 'யார்மனத்து மிருக்குஞ் சோதீ என்றது பேதையரோடு ஞானியரோடு வாசியற அனைவரும் அறிந்து மனங்கொள்ளத்தக்க திவ்விய மகிமையையுடையவன் கண்ணபிரானென்பதைக் காட்டும்: மற்றும் இத்தொடர் - யாவரது மனத்திலும் அந்தர்யாமியாய் எழுந்தருளியிருக்கின்ற ஒளிவடிவமானவனென்னும் பொருளையும் பெறும். எல்லார் கருத்தையும் நீ நன்கு உணர்ந்தவனாதலால் உனக்குத் தெரியாதது ஒன்றுமில்லையென்றற்கு, 'யார்மனத்து மிருக்குஞ் சோதீ' என விளித்ததுமாம். () தருமனையும் அவன் தம்பியரையும் நோக்கிக்கண்ணன் ஒன்று சொல்லத் தொடங்குதல். 4. | அருஞ்சமரம் புரியும்வகையவருரைத்தாரானாலு மறமொன்றின்றிப், பெருஞ்சமரம்விளைக்குமதுகடனன்றென்றருள்வெள்ளம் பெருகக்கூறும், பொருஞ்சமரநெடுமுரசப்பூங்கொடியோன் றனைநோக்கிப் புயப் போர்வாண, னிருஞ்சமரந்தொலைத்தபிரானிளைஞரையுமுட னிருத்தி யியம்புவானே. |
(இ - ள்.) அருஞ் சமரம் புரியும் வகை- அருமையான போரைச் செய்யும்படி, அவர் உரைத்தார் ஆனாலும் - அத்துரியோதனாதியர்கள் கூறினாராயினும், அறம் ஒன்று இன்றி - சிறிதும் தருமமில்லாமல், பெருஞ் சமரம் விளைக்குமது - (பலர்க்கு அழிவுண்டாகப்) பெரிய போரைச் செய்வது, கடன் அன்று - நீதியன்று, என்று -, அருள் வெள்ளம் பெருக கூறும் - கருணைப் பெருக்கு மிகச் சொல்லுகிற, பொரும் சமரம் நெடு முரசம் பூ கொடியோன்தனை நோக்கி - மோதுகின்ற போருக்கு உரிய பெரிய பேரிகையின் வடிவத்தை யெழுதிய அழகிய கொடியையுடையவனான யுதிட்டிரனைப் பார்த்து, - புயம் போர் வாணன் இருஞ்சமரம் தொலைத்த பிரான் - (ஆயிரங்) கைகளாலும் போர் செய்யவல்ல பாணாசுரனது பெரியபோரை ஒழித்திட்ட கண்ணபிரான்,-இளைஞரையும் உடன் இருத்தி - (அத்தருமனது) தம்பியர் நால்வரையும் கூட இருக்கச்செய்து, இயம்புவான் - (சில வார்த்தை) சொல்பவனானான்; (எ - று.) - அதனை, அடுத்த கவியிற் காண்க. தருமபுத்திரன் மகாசாதுவும் கருணைக்கடலுமாதலால் பல பேர்க்கு அழிவு உண்டாகுமாறு போர்செய்து அரசுபெற விரும்புதலின்றிச் சமாதானத்தையே முக்கியமாகக்கொண்டு பேசினனென்க; மேலும் இது காண்க. பிறவுயிரைக் கொல்லுதல் எல்லாத் தருமங்களுள்ளுஞ் சிறந்த கருணையின் ஒழிவேயாதலால், 'அறமொன்றின்றி' எனப்பட்டது. பூங்கொடி - அழகையுடைய கொடி யென்றால், இரண்டாம் வேற்றுமையுருபும் பயனுந் தொக்கதொகை; அழகாகிய கொடி யென்றால், பண்புத்தொகை. தனது வெற்றிக்கு அறிகுறியாகவும், மங்கலகர |