பக்கம் எண் :

82பாரதம்உத்தியோக பருவம்

7.-சமாதானத்திற்கு வராத அவர்களைஅழிப்பது
தகுதியென்று கண்ணன் கூறுதல்.

அரவுயர்த்தோனுடன் மறுசூதாடிநீர் வென்றவந்நாள வன்றான்
                                       சொன்ன,
விரதமொழிதவிராமல் வெங்கானம் போய்மீண்டீர் வெய்
                                    யோனுங்கள்,
குருநிலத்திற்பாதியினிக் கொடாதிருந்தாலாங்கவனைக்
                                 கொன்றுபோரில்,
இருநிலத்தையாள வினித் துணிவதே கடனென்றானெம்பிரானே.

     (இ -ள்.) 'அரவு உயர்த்தோனுடன் - பாம்புக்கொடியை உயர
எடுத்தவனான துரியோதனனுடனே, மறு சூது ஆடி - இரண்டாம் முறை
சூதாட்டமாடி, நீர் வென்ற அந்நாள் - (அவ்வாட்டத்தில்) நீங்கள் சயித்த
அக்காலத்தில், அவன்தான் சொன்ன - அத்துரியோதனன் கூறிய, விரதம்
மொழி - கட்டளையாகிய வார்த்தை, தவிராமல் - தப்பாமல், வெம் கானம்
போய் மீண்டீர் - கொடிய வனத்திற்கு(ப் பல வருஷகாலஞ்) சென்று திரும்பி
வந்து விட்டீர்கள்; இனி - இப்பொழுது, வெய்யோன் -
கொடுமையுடையவனான துரியோதனன், உங்கள் குரு நிலத்தில் பாதி -
குருநாட்டில் உங்களுக்கு உரிய அரைப்பங்கை, கொடாது இருந்தால் -
கொடாமலிருப்பானானால், ஆங்கு - அவ்விடத்தில்,  அவனை - அந்தத்
துரியோதனனை, போரில் - யுத்தத்தில், கொன்று-, இரு நிலத்தை -
இருதிறத்தாருடைய இராச்சியத்தையும் [பூமி முழுவதையும்], ஆள -
அரசாளும்படி,  துணிவதே - நிச்சயிப்பதே, இனி கடன் - இனிமேற் செய்தற்கு
உரிய கடமையாம்,' என்றான் - என்று கூறினான், (யாவனெனில்),- எம்பிரான்
- நமக்கெல்லாந் தலைவனாகிய கண்ணபிரான்; (எ - று.)

    'மறுசூதாடிவென்ற' என்றது, முதலில் ஆடிய சூதாட்டங்களில் தோற்றுத்
தாங்கள் அனைவரும் துரியோதனனுக்கு அடிமைப்பட்ட தன்மை நீங்குமாறு
திரௌபதியின் வார்த்தைப்படி தருமபுத்திரன் மீண்டும் ஓராட்டமாடி அதில்
வென்று அடிமையொழிந்ததை; 'அந்நாள் அவன்தான் சொன்னவிரதமொழி'
என்றது - அதற்கு முன் அவன் "தந்தைதனருளாற் பெற்றீ ருரிமையுந்
தம்பிமாரும், பைந்தொடிதானும் நீயும் பதிபெயர்ந்து உயர்ந்தவேயின்,
வெந்தழலனையகானின் வெளிப்படாதுறைமின் இன்றே, இந்தமாதரணிகை
விட்டேகுமி னெழுமி னென்றான்" என்றதை, 'வெங்கானம் போய் மீண்டீர்'
என்றதில் அஜ்ஞாதவாசமும் அடக்கப்பட்டது.  'விரதமாவது - இன்ன அறம்
செய்வேனென்றும், இன்னபாவம் ஒழிவேனென்றும் தம் ஆற்றலுக்கு ஏற்ப
வரைந்துகொள்வது' ஆதலின், இங்கே பன்னிரண்டு வருஷம் வனவாசமும் ஒரு
வருஷம் அஜ்ஞாதவாசமும் செய்துதீர்வோ மென்று தருமன் உறுதிப்பாடு
செய்துகொள்ளுதற்குக் காரணமாகத் துரியோதனன் சொன்னவார்த்தை,
'விரதமொழி' எனப்பட்டது.  விரதம் - நியமமென்றபடி.  இனி, மாஸம் -
மாதம், ச்வாஸம் - சுவாதம் என்பனபோல, விரஸ மென்னும்  வடமொழி
விரதமெனத் திரிந்ததாகக் கொண்டு, இனிமையில்லாத பேச்சு எனவும்
கொள்ளலாம்.