பக்கம் எண் :

84பாரதம்உத்தியோக பருவம்

ஒருவனுக்கு அங்கமாகுபவர் எனக்காரணப்பெயர்.  துணைவர் -
துரியோதனாதியர்.  அரவம் - ரவமென்னும் வடசொல், ரகரத்துக்கு அகரம்
மொழிமுதலாக முன்வரப் பெற்றது.  இனி, அரவமென்பதை - அரா என்னுந்
தமிழ்மொழியின் விகாரமாகிய அரவு என்பது அம் சாரியை பெற்ற
தெனக்கொண்டு, அரவம் - ஆதிசேஷனால் சுமக்கப்பட்ட, அவனி - பூமி
யென்னலுமாம்.  பூமியைச்சூழ்ந்த கடலை, பூமியாகிய பெண் உடுக்கும்
ஆடையாகக் கூறுதல், கவிமரபு.  அவநம் - காத்தல்; எனவே, அவநி -
காரணப்பெயர்.  இங்கு, எலாம் என்ற பெயர் - பொருளின் பன்மை குறியாமல்
ஒரு பொருளின் பலவிடங் குறித்தது.

     தாதை- தாத என்னும் வடசொல்லின் திரிபு.  இரவு பகல் -
உம்மைத்தொகைமேல் வந்த ஏழாம்வேற்றுமைத்தொகை.  பலமூல சாகம் என்ற
உம்மைத்தொகை - வடநூல் முடிபு.  இனி, பல என்பதைத் தமிழாகக் கொண்டு
அநேகமாகிய வேர்களையும் தழைகளையும் என்னவுமாம்.  இனிதுநன்று -
ஒருபொருட்பன்மொழி.  இங்கே, மிகுதி குறித்தது.  இனி, இம்மைக்கு இனிது,
மறுமைக்கு நன்று என்றதாகவும் கருத்துக் கொள்ளலாம்.  "நன்று பெரிதாகும்"
என்ற தொல்காப்பியத்தால், நன்று என்பது - பெரிதென்னும் பொருளதாதலால்,
நன்று இனிது என இயைத்து, மிகவும் இனியது என்றுமாம்.           (68)

9.-'அது தகுதியன்று' என்று கண்ணன் கூறுதல்.

கோதிலா னிந்தமொழிகூறுதலு மாமாயன்கூறலுற்றான்,
மோதமருக்கிளைத்துநீர் மொய்த்தபெருங் கானகத்தே
                                 முடுகிச்சென்றால்,
பூதலத்தோரேசாரோ  புகன்றபெரு வஞ்சினமும்
                                பொய்த்திடாதோ,
நீதியோவெனவுரைத்தா னாங்கதற்கு நிகழ்தருமனிகழ்த்
                                     தலுற்றான்.

     (இ -ள்.) கோது இலான் - குற்றமில்லாதவனான தருமபுத்திரன், இந்த
மொழி - இவ்வார்த்தையை, கூறுதலும் - சொன்னவளவிலே, மா மாயன் -
மிக்க மாயையையுடையவனான கண்ணன், கூறல் உற்றான் - சொல்லத்
தொடங்கினவனாய்,- நீர் - நீங்கள், மோது அமருக்கு இளைத்து - தாக்கிச்
செய்யும் போருக்குப் பின்னிடைந்து, மொய்த்த பெரும் கான் அகத்தே -
அடர்ந்த பெரிய காட்டினிடத்திலே, முடுகி சென்றால் - விரைந்து
செல்வீர்களானால், பூதலத்தோர் ஏசாரோ - பூமியிலுள்ளவர் யாவரும் இகழ
மாட்டார்களோ? புகன்ற பெரு வஞ்சினமும் பொய்த்திடாதோ -
(திரௌபதியைத் துகிலுரிந்த காலத்தில் நீங்கள் சபையிற்) சொன்ன பெரிய
சபதமும் பொய்யாகி விடாதோ? நீதியோ - (நீங்கள் அப்படிச்செய்வது)
ராஜதருமமாகுமோ?' என - என்று, உரைத்தான் - கூறியருளினான்; ஆங்கு -
அப்பொழுது, அதற்கு - அக்கண்ணன் வார்த்தைக்கு, (உத்தரத்தை), நிகழ்
தருமன் - விளங்குகிற யுதிட்டிரன், நிகழ்த்தல் உற்றான் - கூறத்தொடங்கினான்;
(எ - று.) - அதனை, அடுத்த இரண்டு கவிகளிற் காண்க.

    துரியோதனன் சகுனியைக்கொண்டு சூதாடி வென்று பாண்டவரை
அடிமைப்படுத்தியபின் திரௌபதியைத் துச்சாதனனைக் கொண்டு கூந்தல்
பிடித்து இழுத்துவந்து துகிலுரிந்தும், மடியின்