இங்குத்தருமனது அருளின் குற்றத்தினால், துரியோதனனது கொடுமைக்குக் குணம் சொல்லப்பட்டவாறு காண்க. பசும்பொன்னாலாகிய தொடியென்பார், பைந்தொடி யென்றார். பைந்தொடி - இங்கு பண்புத்தொகையன்மொழி. வேந்து + அவை = வேத்தவை; ஆறாம் வேற்றுமைத்தொகையில் மென்றொடர் வன்றொடராயிற்று. வேந்து - உயர்திணைப் பொருள்தரும் அஃறிணைச் சொல். உள்ளளவு - உள்ளவளவு என்பதன் தொகுத்தல். ஆதாரமாகிய உலகம் அழிய அதன் மீது வழங்கும் பழியும் அழியுமாதலால், 'உலகுள்ளளவுந் தீராத வசை' எனப்பட்டது. கண்டாய் - செய்தாயென்னும் பொருளது. தழற் கானகம் - நெருப்புப்போல வெவ்விய காடுமாம். பகை - பகைவர்க்குப் பண்பாகுபெயர். அரவு, முரசு - அவற்றின் வடிவமெழுதிய கொடிகட்கு ஆகுபெயர். 'கானகமகன்றும்' என்றதன்பின் 'இன்னமும்' என வேண்டாது கூறியதில், அரியதான அஜ்ஞாதவாசம் அடக்கிக் கொள்ளப்பட்டது. இன்னமும் - உலூகன் தூதுசென்று வந்ததனால் துரியோதனன் கருத்தைத் தெரிந்துகொண்டபின்பும் என்றவாறுமாம். இளையா நின்றாய் என்று இரண்டு சொல்லாகக்கொண்டு, இளைத்து நின்றாயென்றலுமொன்று. அஞ்சினேன் = அஞ்சுகிறேன்; இயல்பினால் நிகழ்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டகாலவழுவமைதி.(73) 14. | கானாள வுனைவிடுத்த கண்ணிலா வருளிலிதன் காதன் மைந்தன், தானாளுந்தரணியெல்லா மொருகுடைக்கீழ் நீயாளத் தருவனின்றே, மேனாணம்முரிமையறக் கவர்ந்தபெருந் துணைவனுனை வெறாதவண்ணம், வானாளவானவர்கோன் றன்பதமற் றவன்றனக்கே வழங்குவேனே. |
(இ -ள்.) உனை - உன்னை, கான் ஆள - வனத்தையடைந்து வாழும்படி, விடுத்த - ஏவியனுப்பிய, கண் இலா அருள்இலி தன் காதல்மைந்தன் - பிறவிக்குருடனும் கருணையில்லாதவனுமாகிய திருதராட்டிரனது அன்புக்கு உரிய மகனான துரியோதனன், தான் ஆளும் - தான் (இப்பொழுது தனியே) அரசாண்டு வருகிற, தரணி எல்லாம் - இராச்சியம் முழுவதையும், ஒரு குடைக்கீழ் நீ ஆள - ஒற்றைவெண்கொற்றக்குடை நிழலிலே நீ அரசாளும்படி, இன்றே தருவன் - இப்பொழுதே (உனக்குக்) கொடுப்பேன்; (அதுவுமல்லாமல்), மேல் நாள் நம் உரிமை அற கவர்ந்த பெருந் துணைவன் - முன்னாளில் நமக்கு உரிய அரசாட்சிச் செல்வ முழுவதையும் (உன்னிடத்தினின்றும்) பறித்துக்கொண்ட பெரிய தம்பியான துரியோதனன், உனை வெறாத வண்ணம் - (தனது இராச்சியத்தை நீ உன்னுடையதாக்கி ஆளுவதற்காக) உன்னை வெறுக்க வேண்டாதபடி, வான் ஆள - (நிலவுலகத்தினும் மேலான) வீரசுவர்க்க லோகத்தையடையுமாறு, வானவர் கோன் தன்பதம் - தேவர்கட்கு அரசனான இந்திரனது உலகமாகிய அமராவதி நகரத்தை, அவன் தனக்கே வழங்குவேன் - அத் துரியோதனனுக்கே கொடுப்பேன்; (எ - று.) |