என்றபடி சிறிதும் நிந்தனைக்கிடமில்லாததேபுகழெனச் சிறப்பித்துக் கூறப்படுவதாதலால், "வசையின்றி நிலைநின்றோங்கும் பேர்" என்றது. இனி, போர்முடித்தான் - யுத்தத்தை இல்லையாக்கினான்; கூந்தல் கார் முடித்தான் - கூந்தலாகிய மேகத்தைப் பாழாக்கினான்; கங்கைநீர் முடித்தான் - கங்கைநீரையொடுக்கினான்; பேர்முடித்தான் - கீர்த்தியை ஒழித்தான்; யார் முடித்தார் - யாவர் அழித்தார் எனப்பொருள் கொள்ளினும் அமையும். தான் முடியாவிடினும் முடிக்க வல்லவனாய் முடிக்கத் தொடங்குகிற வீமனையும் இவன் முடிக்க வொட்டாமற் செய்தற்கு, இவனுக்குத் தம்பியாகப் பிறந்த அவனது உடற்பிறப்பே காரணமாதலால், அதனை 'இவனுடனே' பிறப்பதே 'நான்' என வீமன் வெறுத்தான். (75) | 16. | அணிந்துவருஞ் சமரிலெதிர்ந் தரவுயர்த்தோனுடனரச ருடல மெல்லாந், துணிந்திரண்டு படப்பொருது தொல்லையுலகரசாளத் துணிவதல்லால், தணிந்தறமுங் கிளையுறவுங் கொண்டாடித்தானின்னந் தனித்தூதேவிப், பணிந்திரந்து புவிபெற்றுண்டிருப்பதற்கேதுணிகின்றான் பட்டபாடே. |
(இ - ள்.) அணிந்து வரும் - (இருதிறத்துச் சேனைகளும்) ஒழுங்காக வகுக்கப்பட்டு நெருங்கி வருகிற, சமரில் - போர்க்களத்திலே, அரவு உயர்த்தோனுடன் எதிர்ந்து - பாம்புக்கொடியனான துரியோதனனுடன் எதிர்த்து, அரசர் உடலம் எல்லாம் துணிந்து இரண்டு பட - (துரியோதனனும் அவனுக்குத் துணையாக வருபவர்களுமான) அரசர்களது உடம்புகளெல்லாம் துணி பட்டு இரண்டாகும்படி, பொருது - போர்செய்து (பகை முடித்து), தொல்லை உலகு - (நமது) பழைய உரிமையாகிய இராச்சியத்தை, அரசு ஆள - அரசாட்சி செய்ய, துணிவது அல்லால் - நிச்சயிப்பதே யல்லாமல்,- தான் - இத்தருமன்தான், தணிந்து - சாந்தமாய், அறமும் கிளை உறவும் கொண்டாடி - தருமத்தையும் சுற்றத்தாரது உறவுமுறைமையையும் முக்கியமாகப் பாராட்டி, இன்னம் தனி தூது ஏவி - (உலூகனைத் தூதனுப்பிய) பின்பும் ஒரு தூதனைச் செலுத்தி, பணிந்து இரந்து - (பகைவனை) வணங்கி யாசித்து, புவி பெற்று - இராச்சியத்தை (அவன் கொடுக்கச் சிறிது) பெற்று, உண்டு இருப்பதற்கே - புசித்து உயிர் வாழ்ந்திருப்பதற்கே, துணிகின்றான் - நிச்சயிக்கிறான்; பட்ட பாடே-(எல்லா வருத்தங்களினும்) மிக்க வருத்தமாகும் இது! (எ- று.) - ஈற்று ஏகாரம் - தேற்றத்தோடு இரக்கம். போர்பொருது பகையையழித்து வென்று அரசுபெற்றுப் புகழோடு வாழ்தல் எளிதாயிருக்க, தாழ்ந்து இரந்து அரசுபெற்று மானமின்றி உயிர் வாழக் கருதுதல் மிக்க பழிப்புக்கு இடமாகுமென்பதாம். அணிந்து வரும் - நாளைக்குச் சமீபித்துவருகிற என்றுமாம். உடலம், அம் - சாரியை. 'தொல்லையுலகு' என்றது, பழமையான உலக முழுவதையும் என்றும் பொருள்படும். கிளை - கிளைபோன்ற உறவினர்க்கு உவமையாகுபெயர். (76) |