17. அதற்குத் தருமன் சமாதானஞ்சொல்லுதல். பரிவுடன்மற் றிவைகூறும் பவனகுமாரனைமலர்க்கை பணித்து நோக்கிக், குருகுலத்தோர் போரேறே குற்றமது பார்க்குங்காற் சுற்றமில்லை, யொருகுலத்திற் பிறந்தார்களுடன்வாழும்வாழ்வினைப் போலுறுதியுண்டோ, விருவருக்கும் வசையன்றோவிருநிலங்காரணமாகவெதிர்ப் பதென்றான். |
(இ - ள்.) பரிவுடன் -வருத்தத்துடனே, இவை கூறும் - இவ்வார்த்தைகளைச் சொல்லுகிற, பவன குமாரனை - வாயுபுத்திரனான வீமனை, (தருமன்), - மலர் கை பணித்து - தாமரைமலர்போன்ற தனது கையால் அமர்த்தி அடக்கி, நோக்கி - (அவனைப்) பார்த்து,- 'குரு குலத்தோர் போர் ஏறே - குருவென்னும் அரசனது குலத்திற் பிறந்த அரசர்களுள் போரிற்சிறந்த ஆண்சிங்கம் போன்றவனே! குற்றமது பார்க்கும் கால் சுற்றம் இல்லை - குற்றத்தையே ஆராய்ந்தால் (எவர்க்கும்) உறவினராவார் இல்லை; ஒருகுலத்தில் பிறந்தார்கள் உடன் வாழும் வாழ்வினை போல் உறுதி உண்டோ - ஒருகுடும்பத்திலே பிறந்தவர்கள் தமக்குள் மாறுபாடின்றி ஒத்துவாழும் இல்வாழ்க்கையைப்போல நன்மை தருவது (வேறு) உண்டோ? இல்லையன்றோ]; இரு நிலம் காரணம் ஆக எதிர்ப்பது - பெரிய இராச்சியங் காரணமாக எதிர்த்துப்போர் செய்வது, இருவருக்கும் வசை அன்றோ - இருதிறத்தார்க்கும் பழிப்பாகாதோ?' என்றான் - என்று சொன்னான்; (எ - று.) - மற்று - அசை; இந்த அவசியமில்லாத பதத்தால், 'மற்று இவை' என்பதற்கு - இன்னும் இவைபோன்றவற்றை யென்று பொருள் கொள்ளலாம். சினங்கொண்ட வீமனைமேன்மைப்படுத்தி அவனைத் தன் கருத்துக்கு உட்படுத்துமாறு தருமன், 'குருகுலத்தோர்போரேறே' என்று விளித்தான். பவநகுமாரன் என்னும் ஆறாம்வேற்றுமைத்தொகை - வடநூல்முடிபு. பவநன் என்ற வடசொல்லுக்கு - சஞ்சரிப்பவனென்பது காரணப்பொருள். குருகுலத்தோர் ஏறு - விலங்குகளுட் சிறப்புடையதாகிற சிங்கம்போலக் குருகுலத்தாருட் சிறந்தவனென்க; இனி, கௌரவரெனப்படுகிற துரியோதனாதியராகிய யானைகளை யொழிப்பதற்குச் சிங்கம் போன்றவனென்றுமாம். ஏறு போல்பவனை ஏறு என்றது, உபசாரவழக்கு, ஏறு - சில விலங்குகளின் ஆண்மைப் பெயர். 'போரேறு' என்றது, பல பராக்கிரமங்களை விளக்கக் கூறியது. சிறந்த வீரனுக்குச் சிங்கம் - நடை வலிமை நோக்குத் தைரிய காம்பீரியங்களால் உவமையாம். இன்னமலரென்று குறியாது 'மலர்' என்று மாத்திரம் கூறினால், அது - "பூவெனப்படுவது பொறிவாழ் பூவே" என்றபடி, எல்லா மலர்களுள்ளுஞ் சிறந்த தாமரையைக் குறிக்கும். கைக்குத் தாமரைமலர் உவமை - செம்மை மென்மை அழகுகளில். குற்றமது என்றவிடத்து, 'அது' என்பது - பகுதிப் பொருள் விகுதி. கால் - காலமென்பதன் விகாரம். அன்றோ - தேற்றம். பரிவுடன் - (தமையனாரிடத்து) அன்புடனே அல்லது இரக்கத்துடனே யென்றுங் கொள்ளலாம். |