பட்டமைபற்றி) நாக்குத் தடுமாற, பல நாடி உரைத்தனன் - (மற்றும்) பல துதிமொழிகளையும் ஆராய்ந்து கூறினான், (வீடுமன்.) எம்பிரானது திருவுள்ளத்துக்கு எதிரானவர் நரகமடைவரென்பதும், எப்படிப்பட்டவராயினும் எம்பிரானாற் கொல்லப்பட்டுவராயின் அவர்செய்த கருமத்துக்கெல்லாம் அக்கொலைமாத்திரமே தண்டனையாய்முடிய அவர்கள் கருமமொழிந்து உடனே முத்திபெறுவ ரென்பதும் ஆகிய நூற்கொள்கைகளைக் கருத்தினுட்கொண்டும், தன்மீது சினந்து எம்பிரான் கையிற் சக்கரமேந்திப் போர்செய்யவந்ததனால் தனக்கு இனி வெகுவிரைவில் அவ்வெம்பிரானால் மரணம்நேர்தல் திண்ண மெனக் கருதியும், இங்ஙனம் வீடுமன் கூறியது. இங்ஙனம் அவனால் அழித்தருளப் பட்டு முத்திபெறுதற்கேற்றதவத்தைத் தான் இப்பிறப்பில் செய்ததில்லை யென்று எண்ணி, 'போனபிறப்பிலென்னீடு தவப்பயனே' என்கிறான். ஏ- தேற்றம். நீடுதவம் - நெடுங்காலஞ்செய்த தவமென்க. இருவினையும் அற்று முத்திபெற்றவர்க்கு மீளவும் பிறப்பெடுத்தல் இல்லை யாதலால், 'இனிப்பிறவாமலளித்தருள்' எனப்பட்டது. யானும் என்ற உம்மை - தனதுதாழ்வைவிளக்குதலால் இழிவுசிறப்பாவதோடு, கீழ்க்கவியில் வந்த இரணியனாதியோரை நோக்குதலால் இறந்ததுதழுவிய எச்சமுமாம். பி - ம் - மாநரகில், யானரகில், நாகுழறிப் பலநாமம். (128) 20.அருச்சுனன்வேண்டுகோளினால் ஸ்ரீக்ருஷ்ணன் தேரின்மீது ஏறுதல். ஆரியனப்பொழு தாறினனிற்கவு மாடலருச்சுனனுந் தாரவடிக்கணை யாயிரமுய்ப்பதொர் சாபம்வளைத்ததிரா யாரெதிர்நிற்பினும் யாவர்தடுப்பினும் யானினியிப்பகலே சேரமுருக்குவ னேறுகெனத்தன தேர்மிசைபுக்கனனே. |
(இ - ள்.) அ பொழுது - அவ்வாறு வீடுமன் துதித்த பொழுது, ஆரியன் - யாவரிலுஞ்சிறந்த கண்ணபிரான், ஆறினன் நிற்கஉம் - (கொண்ட கோபந்) தணிந்து நின்றவளவிலே, ஆடல் அருச்சுனன்உம் - வெற்றியையுடைய அருச்சுனனும், தாரை வடிகணை ஆயிரம் உய்ப்பது ஒர் சாபம் வளைத்து அதிரா- ஓழுங்காகவுள்ள கூரிய மிகப்பல அம்புகளை ஒருங்குசொரிவதான ஒப்பற்ற (தனது காண்டீவமென்னும்) வில்லை வளைத்து ஆரவாரஞ்செய்து, 'இனி - இனிமேல், யார் எதிர் நிற்பின்உம் - (எனது) எதிரிலே யார் வந்து நின்றாலும், யாவர் தடுப்பின்உம் - (என்னை) எவர் தடுக்க முயன்றாலும், (சிறிதும் பின்வாங்காமல்), யான்-, இ பகல்ஏ - இந்த மத்தியானகாலத்திலேயே, சேர முருக்குவன் - (அவரெல்லோரையும்) ஒருசேர அழிப்பேன்; ஏறுக - (நீ எனது தேரில் முன்போல) ஏறியருள்வாயாக', என - என்று(கண்ணனைப்) பிரார்த்தித்து, தன தேர்மிசை புக்கனன் - தனது இரதத்தின்மேல்ஏறினான்; (எ -று.) யாரெதிர்நிற்பினும் யாவர் தடுப்பினும் என்றதனால், எத்துணை வலியராயினும் எவ்வகை உறவினராயினும் யான் இப்பொழுது |