(இ - ள்) மாயை என்ற ஒருத்திதன்பால் - மாயையென்ற ஒருத்தி இடத்தில், மனம்எனும் மைந்தன் தோன்றி - மனமென்னும் புத்திரன் உண்டாகி, தூயநல் அறிவன்தன்னை - பரிசுத்தமான நல்ல ஞானமென்கிறவனை, தோற்றம் இன்று ஆக்கி வைத்தான் - வெளிப்படாத படி செய்திட்டான்; தாயொடு தந்தை மக்கள் தாரம் என்ற இவர்பால் வைத்த நேயம்உம் - தாய் தந்தை பிள்ளைகள் மனைவி என்கிற இவர்களிடத்து வைத்த அன்பும், அவன் தனால்ஏ நிகழ்ந்தது ஓர் நினைவு கண்டாய் - அந்த மனமென்பவனால் உண்டானதொரு எண்ண மென்றே அறிவாய்; (எ - று.)-இவை ஆறுபாடல்களும், பகவத்கீதையின் சுருக்கமான சாராமிசம். மாயையாவது-உள்ளதை இல்லாததாகவும், இல்லாததை உள்ளதாகவும், ஒன்றைமற்றொன்றாகவுங்காட்டும் எம்பெருமானது ஒருசக்தி. மனம் அந்தமாயைக்கு வசப்பட்டபோது, பொருள்களின் நிலையை உள்ளபடி அறியுந் தத்துவஞானம் தோன்றுவதில்லை; ஆகவே, நிலையுள்ளபொருள்களை நிலையில்லாதனவென்றும், நிலையில்லாத பொருள்களை நிலையுள்ளனவென்றும் மாறுபட அறியும் விபரீதஞானம் தலையெடுக்கும்; அதனாலேயே, நித்தியமான ஆத்மாவுக்கு யாதொரு சம்பந்தமும் படாமல் அநித்தியமான தேகத்தையே பற்றிய தாய்முதலியோரிடத்துச் சுற்றத்தவரென்ற பொய்யபிமானம் உண்டாகி நிலைநிற்கின்றது என்றதாம். ஒருத்திதன்பால், பால் - ஏழனுருபு. என்ற - ஈறு தொக்கது; என்றுஎனஎடுத்து எண்ணிடைச்சொல்லுமாம். கண்டாய் என்பது -- காண்பாயெனப் பொருள்படுதல், காலவழுவமைதி; இனி இதனை இடைச்சொல் தன்மைப்பட்டுத் தேற்றப் பொருள்தருவ தென்றுங் கொள்ளலாம். வடமொழியில் "மாயா" என்பது பெண்பாற்சொல்லாதலால், அதனை இங்குப் பெண்ணாகவும், மற்றை மனமும் அறிவும் பெண்பாற்சொற்களல்ல வாதலின், அவற்றை ஆணாகவும் உருவகப்படுத்தினார்; உருவகவணி. (2) 3. | குயின்றவைம்பொறிவாய்நின்றுகுறித்தவைம் பொருளுந்தானே அயின்றுமுக்குணங்களோடுமறுவகைப்படைகளோடும் பயின்றரசாளுமந்தமனமெனும்பகைவனாங்குத் துயின்றபோதொளித்துநின்றதோன்றலுந்தோன்றுங் கண்டாய். |
(இ - ள்.) குயின்ற - (உடம்பிற்) பொருந்திய, ஐம் பொறி வாய்- (மெய் வாய் கண்மூக்குச் செவி யென்னும்) பஞ்ச இந்திரியங்களி னிடமாக, நின்று - இருந்து, குறித்த- (முறையே அப்பஞ்சேந்திரியங்களுக்கு விஷயமாக) அமைக்கப்பட்ட, ஐம் பொருள்உம் - (ஊறு சுவை ஒளி நாற்றம் ஓசை என்னும்) ஐந்துபுலன்களையும், தானே அயின்று - தானே அனுபவித்து, முக்குணங்களோடுஉம்--(சத்துவம் ரஜஸ் தமஸ் என்னும்) மூவகைக்குணங்களுடனும், அறுவகை படைகளோடுஉம்- (காமம் கோபம் லோபம் மோகம் மதம்மாற்சரியம் என்னும்) ஆறுவகைச் சேனைகளோடும், பயின்று - கூடிப்பழகி, அரசு ஆளும் - அரசாட்சிசெய்கிற, அந்த மனம் எனும் பகைவன்- கீழ்க்கூறின மனமென்கிற சத்துருவானவன், துயின்றபோது - தூங்கிய பொழுது, ஆங்கு ஒளித்து நின்ற தோன்றல்உம் - |