யையுடைய அழகிய மலைபோலுந் தோள்களையுடைய வாயுகுமாரனான வீமனை, வெம் வேழம் படை உடை வேந்தர் சூழ - கொடிய யானைச்சேனையையுடைய பகையரசர்கள் (வந்து) வளைந்துகொள்ள, - (எ-று.)-இதில் 'சூழ' என்ற வினையெச்சத்துக்கு, மேற் பதினொரு பாடல்களிலுள்ள 'தோலாயின' முதலிய முற்றுக்க ளெல்லாம் முடிக்குஞ்சொல்லாம். உவமையணி. மலை, மேலே எவ்வளவு உயர்ந்து காணப்படுகிறதோ, அவ்வளவு கீழிலும் பொருந்திப் பூமியைத் தாங்குதலால், 'பூதரம்' எனப்படுகிறதன்மைபற்றி, 'ஏழிருபுவனமுமேந்து மேரு' என்றார். 'ஏழிரும்புவனம்' என்ற பாடத்திற்கு - ஏழுதீவுகளாகவுள்ள பெரிய பூமியென்று பொருளாம். (143) வேறு. 5.-அவ்யானைச்சேனையை, வீமன் தனது ஆற்றலாற் பலவாறு சிதறடித்தமையை, பதினொருபாடல்கள் வருணிக்கும். ஆலா லமெனக் கதுவா வதிரா மேலாள் விழவீ மன்வெறுங் கைகளா லேலா வுடலென் புகமோ தவெறுந் தோலா யினசிற் சிலதோ லினமே. |
(இ - ள்.) (அப்பொழுது), வீமன்-, ஆலாலம் என - ஹாலாஹல விஷம்போல,கதுவா-பெருஞ்சினம்பற்றி, அதிரா - ஆரவாரஞ்செய்து, மேல் ஆள் விழ -(அவ்யானைகளின்) மேலிருந்த வீரர் கீழ்விழும்படி, வெறு கைகளால் ஏலா - (ஆயுதமெதுவு மேந்தாத தனது) வறுங்கைகளால் (யானைகளை) எடுத்து, உடல் என்பு உகமோத-(அவற்றின்) உடம்பி லுள்ள எலும்புகளெல்லாம் உதிரும் படி தாக்கியதனால், சில்சில தோல் இனம்-சிலசில யானைக்கூட்டங்கள், வெறு தோல் ஆயின - வெறுந் தோல்மாத்திரம் மிகுந்தவையாயின; (எ - று.) யானைக்கு இயற்கையாகவுள்ள தோல்என்னும் பெயர்க்கு இங்கே கவி சாதுரியமாக ஒரு காரணங் கற்பித்துக் கூறியதனால், இது - 'நிருக்தி' என்னும் பிரிநிலைநவிற்சியணியின் பாற்படும். இயற்கைப்பெயர்களுக்குக் காரணங்கற்பித்தல், இவ்வணியின் இலக்கணம். இவ்வணியை அடுத்த பலகவிகளிலுங்காண்க. இதில் தோல் என்ற சொல் அடுத்து வெவ்வேறு பொருளில் வந்தது- மடக்கென்னுஞ்சொல்லணி. "யானையும் வனப்பு மதளுந் தோல்வியுந், தோலென்றுரைப்பார் தோற்பலகையு மாகும்" என்னும் பலங்கொண்டவ னாதலால், யானைகளை இங்ஙனம் எளிதில் அழிக்கலாயிற்று. ஆலாலம் - வடமொழித்திரிபு; இது, தவறாது அழித்தற்கு உவமை. இதுமுதல் பதினெட்டுக்கவிகள் - பெரும்பாலும் எல்லாச்சீர்களும் மாச்சீர்களாகிய அளவடி நான்கு கொண்ட கலிவிருத்தங்கள்; இவற்றை, முதற்சீர் மாச்சீரும், இரண்டாஞ்சீர் கனிச்சீரும், மூன்றாஞ்சீர் காய்ச்சீருமாகிய சிந்தடி நான்குகொண்டுவந்த வஞ்சிவிருத்தங்களாக அலகிடினுமாம். (144) |