பக்கம் எண் :

136பாரதம்வீட்டும பருவம்

4.- விசயன் ஸ்ரீக்ருஷ்ணனுடன் தேரிற் போருக்கு வருதல்.

அரக்கர்க்குமுதல்வானளித்தோருமெமரின்றுமவர்போலுமைத்
துரக்கைக்குதின்றேனெனத்தெவ்வர்தம்மோடுசொல்லிற்றெனக்
குரக்குக்கொடித்தேரின்மிசையேறிவிசையோடுகூத்தாடவே
புரக்கைக்குதின்றோனுடன்செங்கண்விசயன்புறப்பட்டனன்.

     (இ-ள்.) 'முதல் - பூர்வகாலத்தில், அரக்கர்க்கு வான் அளித்தோர்உம் -
(இராவணசேனையிலுள்ள) இராக்கதர்களுக்கு(ப்போரிற்கொன்று) வீரசுவர்க்கங்
கொடுத்தவர்களும், எமர் - எங்கள் இனத்தவரே [வாநர வீரர்களே] யாவர்;
இன்றுஉம் - இந்நாளிலும், அவர் போல் - அக்குரக்குவீரர்போல, உமை
துரக்கைக்கு நின்றேன் - உங்களை ஒழித்தற்கு (யான் இங்கு வந்து) நின்றேன்',
என- என்று, தெவ்வர் தம்மோடு - பகைவர்களாகிய துரியோதனாதியர்களோடு,
சொல்லிற்று என - சொல்லியதுபோல, குரங்கு கொடி - குரங்கின்வடிவ மெழுதிய
துவசம், தேரின்மிசை ஏறி - (தனது) தேரின்மேற் பொருந்தி, விசையோடு கூத்தாட
- வேகத்தோடு நடனஞ்செய்ய, செம் கண் விசயன் - (கோபத்தாற்) சிவந்த
கண்களையுடைய அருச்சுனன், புரக்கைக்கு நின்றோனுடன் - (தன்னைப்)
பாதுகாக்கும்பொருட்டுத் துணைநின்ற கண்ணபிரானுடனே, புறப்பட்டனன் -
(போருக்கு) வந்தான்; (எ-று.)

     அருச்சுனனுக்குக் குரங்குக்கொடி, காண்டவதகநகாலத்தில் அக்கினிதேவனால்
அளிக்கப்பட்டது. பின்பு வீமசேனன் புஷ்ப யாத்திரையாக
அளகாபுரிக்குச்சென்றபொழுது, இடையில் அனுமானைக் கண்டு வணங்கி வேண்டி,
போர்க்களத்தில் அருச்சுனனது தேர்த்துவசத்தில் வந்து நின்று மகிழ்ந்து
கூத்தாடும்படி  வரம்பெற்றான். அவ்வாறு அருச்சுனனது குரங்குக்கொடியில்
அநுமான் ஆவேசித்து நின்று அக்கொடி காற்றில் வேகமாக அசையும் பொழுது
கூத்தாடுதலை, துரியோதனாதியரைவீரவாதங் கூறி வெருட்டுவதாகக் கற்பித்து
வருணித்தார்; தற்குறிப்பேற்றவணி. கீழ்பாட்டில், துரியோதனன்சேனைக்கு
இராவணசேனையை உவமைகூறியவர், இங்கு அதை யழிக்க அநுமான் வந்ததைக்
கூறினார்.குரக்குக்கொடி - வேற்றுமையில் மென்றொடர் வன்றொடராயிற்று.
புரக்கைக்கு -பூமிக்குப்பாரமாகவுள்ள துஷ்டர்களை யொழித்துச் சிஷ்டர்களைப்
பரிபாலநஞ்செய்யும் பொருட்டு என்றுங் கொள்ளலாம். பி ம்: மிசையோடி. (185)

5.- வீடுமனோடு பொர அவனின்றவிடத்து ஸ்ரீகிருஷ்ணன்
தேர்செலுத்துதல்.

அரனின்றனன்போலவவனின்றதேரொத்தவணிதேர்மிசைப்
பொரநின்றநதிமைந்தனொடுசென்றுமுனைநின்றுபொரவெண்ணியே
சரநின்றகுனிசாபவிசயன்றனைக்கொண்டுசங்கங்குறித்
துரநின்றவவனெஞ்சுடைப்பாகன்மான்றேருகைத்தூரவே.