பக்கம் எண் :

158பாரதம்வீட்டும பருவம்

சிற்சிலரை காயப்படுத்திச் சிற்சிலரைக் கொன்றானென்பதாம், ஊன் விடும்படி
என்பதற்கு - சதை வெளிப்படும்படி என்று உரைப்பாருமுளர்.       (223)

18.- துரியோதனன் பக்கத்தார் வீமனுக்குப் புறங்கொடுக்க,
வானோர் பூமாரி பொழிதல்.

வாவருங் கவனமாக் கடுகுதேர் வலவர்போய்
ஏவருஞ் சிலைகள்போ யிருபுய வலிமைபோய்
யாவரும் பண்டுதா மிடுபுற மிட்டனர்
தேவருங் கண்டுவந் தலர்மழை சிந்தினார்.

     (இ-ள்.) (அப்பொழுது வீமன் முன்னிலையில்). யாவர்உம் - (எதிர்த்த
துரியோதனன் சேனையார்) எல்லோரும், வா வரும் கவனம் மா-தாவிவருகிற
வேகத்தையுடைய குதிரைகளும், கடுகுதேர் - வேகமாகச்செல்லுகிற இரதங்களும்,
வலவர் - சாரதிகளும், போய் - ஒழியப்பெற்று, ஏ வரும் சிலைகள் போய் -
அம்புகள் (தொடுத்தற்குப்) பொருந்திய விற்க ளொழியப்பெற்று, இரு புயம்
வலிமைபோய் - இரண்டு தோள்களின்பலமும் ஒழியப்பெற்று, பண்டு தாம் இடு
புறம்இட்டனர்-பழமையாகத் தாம் கொடுக்கிற புறத்தை இப்பொழுதும்
கொடுத்தார்கள்[முதுகுகாட்டி யோடினார்கள்]; கண்டு - (அதனைப்) பார்த்து,
உவந்து - (வீமனதுவல்லமைக்கு)  மகிழ்ந்து, தேவர்உம் - (வானத்தில் நின்ற)
தேவர்களும், அலர்மழை சிந்தினார்-(வீமன்மேற் பூமாரி பொழிந்தார்கள்; (எ-று.)

     துரியோதனாதியர்க்குப் புறங்கொடுத்தல் இன்றைக்குமாத்திரமே புதியதன்று,
முன்னமே அமைந்துள்ளது என்பதுதோன்ற 'பண்டு தாம் இடுபுற மிட்டனர்'
என்றார். இங்ஙன் புறங்கொடுத்தலை, கீழ் நடந்த போர்களிலும் சிற்சிலவிடத்துக்
கூறிப்போந்தார். வாவரும் - வாவிவரும் என்பதன் விகாரம்.         (224)

வேறு.

19.-விகன்னன் முதலியோர் பொருமாறுவர, அபிமன்யு
விகன்னனெதிரிற்சென்று சேர்தல்

ஏய வரிசிலை வீம னொடுபொரு போரி லனைவரும் வென்னிட
மேய விழியிலை யாய பதிதரு வீரர் பலரும்வி கன்னனும்
ஆய முதிர்சின மூள விரைவுடன் மீள வரவபி மன்னுவுந்
தூய வரிசிலை வாளி கொடுதன தேர்கொ டவனெதிர்
                                        துன்னினான்.

     (இ-ள்.) ஏய - (அம்புகளை) ஏவிய, வரி சிலை - கட்டமைந்த
வில்லையுடைய, வீமனொடு - வீமசேனனுடனே, பொரு - தாக்கிச் செய்த,
போரில்-யுத்தத்தில், அனைவர்உம் வென் இட - (இவ்வாறு துரியோதனன்
முதலியோர்)எல்லோரும் புறங்கொடுக்க,- (பின்பு-),  மேய விழி இலை ஆய
பதிதரு -பொருந்தின கண்களில்லையான் திருதராட்டிரமகாராசன் பெற்ற
(புத்திரரான), வீரர்பலர்உம் விகன்னன்உம் - பராக்கிரமமுடைய பல அரசர்களும்.