பொருந்தப்பெற்ற, கனை கழல் - ஒலிக்கின்ற வீரக்கழலையுடைய (பாதத்தையுடைய), மன்னன் - துரியோதனராசனது, இளவல் - தம்பியான, விகன்னனை - விகர்ணனை,-முன்னர் உறு கணை - முன்னே [மார்பில்] பொருந்திய அம்புகள், பின்னர் விழ விழ - (ஊடுருவிக்கொண்டு) பின்னே மிகுதியாக விழும்படி, முன்னர் அமர் பொர முன்னினான்-எதிரில்நின்று போர்செய்யத் தொடங்கி விட்டான்; இன்னும்-பின்பும், நாம்-, என்ன அமர் பொர-என்னபோரைச் செய்வதற்கு, இன்னர் அணுகுவது - இப்பொழுது (அபிமந்யுவை) நெருங்குவது?' என்ன - என்று கருதி, துன்னலார் - பகைவர்கள், வெருவினர் - அஞ்சினார்கள்;(எ - று) 'அபுமந்யு வேறுதுணையில்லாமல் தானொருவனாகவே இராசராசனான துரியோதனனது தம்பியான விகர்ணனை மார்பு துளைக்கும்படி பல அம்புகளை எய்தா னென்றால், நாம் அவ்வபிமனோடு எதிர்த்து என்ன போர் செய்யமாட்டுவோம்?' என்று எதிரிகள் பலர் அஞ்சினரென்பதாம். நிகர் அன்ன என்ற இடத்து - திருக்கோவையாரில், "கோளரிக்குந் நிகரன்னார்" என்பதற்கு - கோள்வல்ல அரிமாவிற்கு மறுதலைபோல்வார்' என்றும், 'கோளரிக்கு ஒப்பாகிய அத்தன்மையர் எனினும் அமையும்' என்றும் பேராசிரியர் கூறியது அறியத்தக்கது. ஒருவனும், உம் - இழிவு சிறப்பு: அவனது துணையின்மையையும், இளம்பிராயத்தையும் காட்டும். இன்னர் - இத்தன்மையரெனினுமாம். இப்பாட்டு - மெல்லோசையால் மிக்கது. முன்னும் பின்னு முள்ள இவ்வகை விருத்தங்களில் ஒவ்வொருபாட்டும் ஒவ்வொரு ஓசைவிகற்பம் பொருந்தப் பாடப்பட்டுள்ளவாறு காண்க. (229) 24.- அபிமன் போர்வெல்ல, தந்தைமார் எதிர்கொண்டு மகிழ்ந்து அவனைத் தழுவுதல். அன்றையமரினிலொன்றுபடவவரங்கமயர்வுறுபங்கமே தென்றுமொழிவதுதந்தமனையுறவெந்தநிருபருமுந்தினார் வென்றுபொருமுனைநின்றவபிமனைவிஞ்சுமுவகைகொணெஞ்சுடன் சென்றுதழுவினரிந்துவரவெழுசிந்துவெனமகிழ்தந்தைமார். |
(இ-ள்.) அன்றை அமரினில் - அன்றையதினத்துப்போரில், ஒன்று பட - ஒருசேர, அவர் அங்கம் - (விகர்ணன் முதலிய) பகையரசர்களது உடம்பு, அயர்வுஉறு-தளர்ச்சியடைந்த, பங்கம் - தோல்வியை, ஏது என்று மொழிவது - (யாம்) என்னவென்று எடுத்துச்சொல்வது? எந்த நிருபர்உம் - (துரியோதனன் பக்கத்தில்) எல்லா அரசர்களும், தம் தம் மனை உற - தங்கள் தங்கள் வீட்டை அடைவதற்கு, முந்தினார் - (ஒருவரினும் ஒருவர்) முற்பட்டார்: (அப்பொழுது), இந்துவரவு எழு சிந்து என - சந்திரன் உதிக்கப்பொங்குகிற கடல்போல, மகிழ தந்தைமார் - மகிழ்ச்சி கொண்ட (அபிமனது) தந்தையரான பாண்டவர், வென்று பொருமுனை நின்ற அபிமனை - வெற்றி கொண்டு போர்க்களத்திலேநின்ற அபிமந்யுவை, விஞ்சும் உவகை கொள்நெஞ்சுடன் - மிகு களிப்புக் கொண்ட மனத்துடன், சென்று தழுவினர்-; (எ-று.) |