பக்கம் எண் :

முதற் போர்ச்சருக்கம்19

குமாரனான அந்தச் சிகண்டியை, பத்துஆம் நாளில் - பத்தாவது யுத்த தினத்தில்,
அமரில் - போரில், என் எதிர் காட்டில் - எனது எதிரில் நிறுத்திக்காட்டினால்,
யான்படை யாஉம் தீண்டேன் - (பெண்ணாயிருந்து ஆணான அவனோடு
போர்செய்ய) நான் ஆயுதங்களில் எவற்றையுந் தொடவும்மாட்டேன்; பின் - பின்பு,
அவன் வெகுண்டு செய்யும் - அந்தச்சிகண்டி கோபித்துப்போர் செய்கிற, பெருமிதம்
- பராக்கிரமத்தை, கண்டு - பார்த்து, மீண்டு - பின்பு, கன்னனை வெல்ல நின்ற
காளை கை கணையால் வீழ்வேன் - கர்ணனைச் சயிக்குமாறு உறுதியாய்நின்ற
இளவீரனான அருச்சுனனது கையிலுள்ள அம்பினால் (அடிபட்டுப் போர்க்களத்தில்)
விழுவேன்;

     யாகசேனனென்பது, துருபதனுடைய மற்றொருபெயர். இவன் குமரனென்றது,
சிகண்டியை. பெருமிதம் - மிக்க அளவு; ஒருவன் மற்றையோரினுஞ்
சிறந்துவிளங்குதற்குத் காரணமாகுதலால், பெருமிதமென்று பராக்கிரமத்துக்குக்
காரணப்பெயர்: வீரத்தினைப் பெருமிதமென் றெண்ணினான்; என்னை?
எல்லாரோடும் ஒப்பநில்லாது பேரெல்லையாக நிற்றல் பெருமித மெனப்படும்
என்றற்கு என்பது; என உரைத்ததை அறிக. 'கன்னனை வெல்லநின்றகாளை'
என்றது, திரௌபதியைத் துகிலுரிந்தபோது அருச்சுனன் 'துரியோதனனுக்கு உற்ற
துணையான கர்ணனை யான் கொல்வேன்' என்று சபதஞ் செய்துள்ளா
னாதாலென்க: கர்ணனிடத்துத் தனக்குள்ள துரபிப்பிராயத்தாலும், அருச்சுனனுக்கு
ஒரு ஆசீர்வாதமாகவும், வீடுமன் இவ்வாறு கூறினான்: இனி, நடப்பவற்றைஅறியும்
எதிர்காலவுணர்ச்சியாற் கூறினானுமாம். காளை-அது போன்றவனுக்கு
உவமவாகுபெயர்.                                             (11)

12.-பின்புவீடுமன் 'நீ இருக்கையில் வெற்றி இவர்க்கே'
என்ன, க்ருஷ்ணன் துரோணனிடஞ் செல்லுதல்.

நின்றனையருளொடாங்கேநீலமாமேனியாய்நீ
வென்றிமற்றிவரேயல்லால்வேறியாரெய்துகிற்பார்
என்றனனென்றபோதப்பிதாமகனிருதாள்போற்றி
நின்றவர்தம்மைக்கொண்டுசிலைமுனிநிலையிற்போனான்.

     (இ-ள்) நீலம் மா மேனியாய் - நீலநிறமுள்ள அழகிய திருமேனியை
யுடையவனே ! நீ-, ஆங்கே - அந்தப்பக்கத்திலே [பாண்டவர்திறத்திலே],
அருளொடு - கருணையுடனே, நின்றனை - (துணைசெய்ய) நின்றாய்; (ஆகையால்),
இவர்ஏ அல்லர்ல் - இப்பாண்டவர்களேயன்றி, வேறு யார்-, வென்றி - வெற்றியை,
எய்துகிற்பார் - அடையவல்லவராவர்? [எவருமில்லை யென்றபடி], என்றனன் -
என்று (வீடுமன் கண்ணனை நோக்கிக்) கூறியருளினான்; என்றபோது -
அங்ஙனங்கூறினபொழுது, (கண்ணபிரான்), அப்பிதாமகன் இரு தாள் போற்றி
நின்றவர் தம்மை கொண்டு - (தமது) பெரியபாட்டனான அவ்வீடுமனது
உபயபாதத்தை வணங்கி நின்ற பாண்டவர்களைக் கூட்டிக் கொண்டு, சிலை முனி
நிலையில் போனான்-விற்றொழிலில்வல்ல துரோணாசாரியன் நிற்கிறவிடத்துச்
சென்றான்; (எ-று.)

     நீலம் ஆம் மேனியாய் என்றும் எடுக்கலாம். மற்று - அசை.