பக்கம் எண் :

ஒன்பதாம் போர்ச்சருக்கம்217

அது -எல்லாவுயிர்களையும் தன்வசப்படுத்துகிற மன்மதபாணத்தின் போராற்றலை
விளக்கும். காமன் கணைக்கும் கலங்காதான், என்றது, எந்தமகளிரையும் விரும்பி
மணஞ்செய்யாத வீடுமனது விரதவுறுதியை விளக்கும்,                 (315)

33.- அப்போது துச்சாதனன் அம்பெய்து
சிகண்டியின் கொடி தேர் வில் இவற்றைச் சிதைத்தல்.

வில்லோன்சரங்கள்படநகைசெய்தவன்மேற்றனதுவில்வளையாத்
தொல்லோனின்றநிலைகண்டுதுச்சாதனன்றன்சுடுசரத்தாற்
பல்லோர்வியப்பத்தங்கள்குலப்பகைவன்சேனாபதியிளவல்
செல்லோடணவுநெடுங்கொடியுந்தேருஞ்சிலையுஞ்சிதைவித்தான்.

     (இ-ள்.) வில்லோன் - வில்லில்வல்லவனான சிகண்டியினது,  சரங்கள் -
அம்புகள், பட - (தன்மேற்) படவும், தொல்லோன் - பெரியவனான வீடுமன், நகை
செய்து-சிரித்துக்கொண்டு, அவன் மேல் தனது வில்வளையா-அச்சிகண்டியின்மேல்
(எதிர்த்தற்குத்) தனது வில்லை வளைக்காமல், நின்ற-, நிலை-நிலைமையை, கண்டு-,
துச்சாதனன்,-, தன் சுடு சரத்தால் - தனது வெவ்விய அம்புகளால், பல்லோர்
வியப்ப - (காண்பவர்) பலரும் அதிசயிக்கும்படி, தங்கள் குலம் பகைவன் சேனாபதி
இளவல் - தங்கள்குலத்துக்குப் பகைவனான தருமனது சேனைத்தலைவனாகிய
திட்டத்துய்மனுடைய தம்பியான அந்தச்சிகண்டியினது, செல்லோடு அணவு
நெடுகொடிஉம் - மேகத்தோடுபரிசிக்கிறநீண்ட துவசத்தையும், தேர்உம் - தேரையும்,
சிலைஉம் - வில்லையும், சிதைவித்தான் - அழியச்செய்தான்; (எ-று.)

     பெண், முன்புபெண்ணாயிருந்தவன், பெண்பெயருடையான்,
பெண்வடிவுகொண்டவன் என இவர்மீது அம்புதொடுப்பதில்லை யென்பது,
வீடுமனது விரத மாதலால் முதலிற் பெண்ணாகப் பிறந்து பின்பு யக்ஷனது அருளால்
ஆண் தன்மையைப் பெற்ற சிகண்டியுடன் வீடுமன் போர்செய்யவில்லை யென்க.
நகைசெய்தது - அவன் இயற்கையில் ஆண்தன்மையில்லாத இழிவைக் கருதி
யென்க. முதனூலில் சிகண்டியைத் திட்டத்துய்மனது தமையனென்று கூறியுள்ளதற்கு
ஏற்ப, 'தங்கள்குலப்பகைவன் சேனாபதி யிளவல்' என்பதற்கு -
அன்மொழித்தொகையாக, திட்டத்துய்மனைத் தம்பியாகவுடையவ னென்று
பொருள்கொள்ளலுமாம். செல்-செல்லுவது, காரணக்குறி, பி- ம்.செல்லோடளாவு.
                                                           (316)

34.- சிகண்டிதோற்றது கண்டு அருச்சுனன்தேரைச் செலுத்திவர
எதிரிகள் புறமிடல்.

இவனோவிலக்காமென்பகழிக்கென்பான்போலவெங்குலத்தி
லவனோசெங்கைச்சிலைவீழ்த்தானரசன்றம்பிக்கழிந்திவனுந்
தவனோதயத்திலிருளென்னச்சாய்ந்தானென்றுதனஞ்சயன்றன்
பவனோதயத்தேர்நடுவிட்டான்பணியார்தாமும்புறமிட்டார்.