சோர்வினாலும், நாக்குழறும், அம்புஅணை - ஸரதல்பம். முன்பு நின்றநிலை - யோகநிலையென்பாருமுளர். கிடை - கிடைக்கும் நிலை. குழன்று - குழல என்னும் எச்சத்திரிபு; குழல் - பகுதி. கோடு - வளைந்துள்ளது. முனை - நுனி. (360) 37- போரிலே வீடுமன் எஞ்சியதுகண்டு யாவரும் வருந்துதல். போரிலெஞ்சி னன்குருகு லேசனென்று கண்டபுரு கூதன் மைந்தனும்புனைதுழாய், வீரனுந்து னைந்துவரு தேரினின்றிழிந்திருகண் வீழுமம்பி னின்முழுகினார், சேரவந்தி ரண்டுவகை யாகிவெங்களங்குறுகு சேனையுந்தி ரண்டலறவே, யாருநெஞ்ச ழிந்தனர்கள்யாருநொந்து நைந்தனர்கள் யாருநின்றிரங்கி னர்களே. |
(இ-ள்.) 'குருகுல ஈசன் - குருகுலத்தலைவனான வீடுமன், போரில் எஞ்சினன் - யுத்தத்தில் அழிந்தான்', என்று-, கண்ட-பார்த்தறிந்த, புருகூதன் மைந்தன்உம் - இந்திரகுமாரனான அருச்சுனனும் புனை துழாய் வீரன்உம் - தரித்த திருத்துழாய்மாலையையுடைய கண்ணபிரானும், துனைந்து வரு தேரினின்று இழிந்து - விரைந்து வருகிற தேரினின்று இறங்கிவந்து, இரு கண் வீழும் அம்பினில் முழுகினார் - (தமது) இரண்டு கண்களினின்றும் விழுகிற நீரில் மூழ்கினார்கள் [மிகக்கண்ணீர்விட்டார்கள்]; இரண்டு வகை ஆகி வெம் களம் குறுகு சேனைஉம் - இரண்டுபகுப்பாய்க் கொடிய போர்க்களத்தையடைந்துள்ள சேனைகளும், சேர திரண்டு வந்து - ஒருசேரக் கூடி (வீடுமன் விழுந்தவிடத்து) வந்து, அலற - அழுது கதற, யார்உம் - (இருதிறத்திலும்) எல்லோரும், நெஞ்சு அழிந்தனர்கள்-மனம் அழிந்தார்கள்; யார்உம்-,நொந்து நைந்தனர்கள் - வருந்தி மெலிந்தார்கள்; யார்உம்- ,நின்று இரங்கினார்கள் - (திகைத்துநின்று) விசனமுற்றார்கள்; (எ-று.) அழிந்தவனாகிய வீடுமன் அம்பினில் மூழ்கியதுபோலவே, அழித்தவராகிய கிருஷ்ண அருச்சுனரும் அம்பினில் மூழ்கினாரென ஒரு சமத்காரம் தோன்றக் கவிகூறினார். பாண்டவதுரியோதனாதியரென்னும் இருவகையார்க்கும் வீடுமன் மூத்தபாட்டனாதலால், இவனழிவுக்கு எல்லோரும் இரங்குவாராயினர். புருஹு தன் - வடசொல்; புரு - மிகுதியாக, ஹூதன் - (யாகங்களில்) அழைக்கப்படுபவன் என்றும்; புரு-புரு என்னும் அசுரனை, ஹூதன் - கொன்றவன் என்றும் பொருள்படும். பி-ம்: அம்பினால். திரண்டுவரவே. (361) வேறு. 38.-வீடுமன் உத்தராயணகாலம் வருமளவும் உயிர்விடேனென யோகத்தாலுயிரை வைத்துக்கொண்டிருத்தல். ஆக மெங்குந் தங்கு மம்பி னணைமேல் வீழ்வான் யோகங் கொண்டே யுயிரை யோடா வண்ண நிறுவி மாகஞ் சூழும் பரிதி வடபா லெய்து மளவும் நாகங் காணே னென்ன ஞானத் தோடே வைக. |
|