பக்கம் எண் :

56பாரதம்வீட்டும பருவம்

வேறொருகையினால், சுடர் வாளினை எடுத்தான்-ஒளியையுடைய வாளாயுதத்தை
யெடுத்தான்; (எ - று.)

     முதலில் வலக்கையால் வாளைஎடுத்துவந்தவன் அவ்வலக்கை வீடுமனால்
அறுக்கப்பட்டவளவில் இடக்கையால் வாளை யேந்தினன் என்பதாம். அப்பொழுதும்
வில்லையேந்தாமல் வாளையே யேந்தினான், வீடுமனது பழிப்புக்கு
இடங்கொடாமைப்பொருட் டென்க. வலக்கை யற்றவர் இடக்கைவில்லில்
எயிற்றுப்படை தொடுத்தல்கூடுதலைக் கீழ் இச்சருக்கத்து இருபத்தெட்டாங்கவியிற்
காண்க.                                                      (67)

68.எடுத்தவடி வாளினொடு மெண்ணில்பல பாணந்
தொடுத்துவரு வீடுமனை மாமுடி துணிப்பான்
அடுத்துவரு போதவ னழன்றொரு சரத்தால்
நடுத்தகை யுறாமலவ னல்லுயிர் கவர்ந்தான்.

     (இ-ள்.) எண் இல் பல பாணம் தொடுத்து வரு வீடுமனை - அளவில்லாத
அநேகம் அம்புகளை எய்துவருகிற பீஷ்மனை, மாமுடி துணிப்பான் -
பெரியதலையையறுக்கும்பொருட்டு, எடுத்த வடி வாளினொடு உம் - (ஒருகையில்)
ஏந்திய கூரிய வாளாயுதத்துடனே, அடுத்து வரு போது - (சுவேதன்)
நெருங்கிவரும்பொழுது, அவன் - அந்தவீடுமன், அழன்று - கோபித்து, ஒரு
சரத்தால் - ஒப்பற்ற அம்பினால், நடு தகை உறாமல் - இடையிலே தடைப்படாமல்,
அவன் நல் உயிர் கவர்ந்தான் - அச்சுவேதனது நல்லஉயிரை (உடம்பினின்று)
வலியவாங்கினான் [அவனைக்கொன்றான் என்றபடி], (எ -று.)

     இப்பாட்டில், நடுத்தகையுறாமல் என்றது, சிறந்தகுணமாகிய நடுவுநிலைமை
தன்பக்கல் பொருந்தாபடி என்றபொருளையும் உணர்த்தும்; தான்கூறியபடி
வில்லைவிட்டு வேறுபடைக்கலமேந்திய வீரனோடு தானும் அப்படைக்கலத்தையே
ஏந்தாது விற் கொண்டு போர்விளைத்தது, உத்தமவீரனான் வீடுமனுக்கு நடுவு
நிலைமை தவறுதலாம்; நடுவு நிலைமை - பக்ஷபாதமில்லாததன்மை. தகை -
தடையென்னும் பொருளில், முதனிலைத்தொழிற்பெயர்; மற்றொருபொருளில், தகை -
தகுதி, சற்குணம்; இது - தொழிலடியாப் பிறந்ததாயினும் பொருளாற் பண்புப்பெயர்.
வீடுமனை மாமுடிதுணிப்பான் - இரண்டுசெயப்படுபொருள்வந்த வினை; இது
வடமொழி நடை; இதனை வடநூலார் த்விகர்மகர்த்தரிப்ரயோகமென்பர். இனி,
தமிழ்நடையாக, வீடுமனை முடியிலே துணிக்கும்பொருட்டு என்றாவது,
உருபுமயக்கமாய் வீடுமனதுமுடியைத் துணிக்க வென்றாவது கொள்ளலாம்.
வீடுமனைப்போல வஞ்சனைகருதாமல் நீதியாக மானத்தைப் பாதுகாத்து
வாட்போர்செய்து இறந்ததுபற்றி, சுவேதனுயிர் நல்லுயிரெனப்பட்டது, அப்பொழுது
உபயோகித்தது, பிரமாஸ்திரம்: "சென்று திசைவணங்கத் தெய்வப் படை நினைந்து,
துன்று நெடுஞ்சிலைநாண் தோளலைப்ப - மன்றுலகில், மன்னுயிரைத் தான்
படைத்தான் மந்திரத்தால் மற்றவன்ற, னின்னுயிரைப் போக்கினானெய்து" என்பது,
வெண்பாப்பாரதம். பி - ம்: போதவனுமற்றொரு.                     (68)